Saturday, June 09, 2007

ஆரியக் கூத்து - அ. மார்க்ஸ்

நூல்: அந்தனர் வரலாறு எனும் ஆரியக் கூத்து
ஆசிரியர்: அ. மார்க்ஸ்
எதிர் வெளியீடு
305 காவல் நிலையம் சாலை
பொள்ளாச்சி - 642 001
தொலைப்பேசி: 04259 - 226012, 9865005084
மின் அஞ்சல்: ethirveliyedu@sify.com

பக்கங்கள்: 116 விலை: ரூ 60


பின்னட்டைக் குறிப்பு:
கால்டுவெலின் திராவிட மொழிக்குடும்பம் பற்றிய கண்டுபிடிப்பும் சிந்து வெளி அகழ்வுகள் வெளிப்படுத்திய உண்மைகளும் சென்ற நூற்றாண்டில் தமிழக அரசியலை பாதித்த இரு முக்கிய நிகழ்ச்சிகள். இதன் மூலம் எழுச்சி கொண்ட பார்ப்பன எதிர்ப்பு அரசியல் வீச்சில் ஓராண்டு காலம் ஓய்ந்து கிடந்த தமிழகப் பார்ப்பனர்கள் இன்றைய இந்துத்துவ எழுச்சியைப் பின்புலமாகக் கொண்டு வரலாற்றைப் புரட்டுகின்றனர். 'தமிழக அந்தனர் வரலாறு' என்கிற பெயரில் பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுகின்றனர்.

ஆரியப் பிரச்சினை, திராவிட மற்றும் இந்தோ-ஆரிய மொழிக் குடும்பங்கள் குறித்த நவீனமான வரலாற்றுச் சிந்தனைகளின் அடிப்படையில் அந்தனப் புரட்டுகளை தோலுரிக்கிறார் அ. மார்க்ஸ். வெறும் விவாத நோக்கிலான நூலாகவன்றி வரலாற்று உண்மைகள் பற்றிய சம காலக் கருத்துகளின் தொகுப்பாகவும் இது அமைந்துள்ளது.

புதிய தமிழகத்தை ஆதரிப்போம்!

வரும் மதுரை மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் தமிழ் நாட்டு முஸ்லிம் அமைப்புகள் அனைத்தும் புதிய தமிழகம் வேட்பாளருக்குத் தங்கள் ஆதரவைத் தெரிவிக்க வேண்டும். தி.மு.க தன் வாக்குறுதிப்படி முஸ்லிம் தனி இடஒதுக்கீட்டை நிறைவேற்றவில்லை. முதலமைச்சர் நாள் தோறும் வாக்குறுதி கொடுத்து முஸ்லிம்களை ஏமாற்றி வருகிறார். பா.ஜ.கவுக்கு எதிரணி என்ற அடிப்படையில் தான் நாம் தி.மு.கவுக்கு அதரவளித்தோமே தவிர தி.மு.கவுக்கான நம் ஆதரவு நிரந்தரமானதல்ல. மதுரையிலும், கரூரிலும் வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட்ட திமுகவினருக்கு உரிய பாடம் கற்பிப்போம். இத்தேர்தலில், தி.மு.க ஆதரவு பெற்ற காங்கிரஸ் வேட்பாளரை டெபாஸிட் இழக்கச் செய்வோம். மக்களவைத் தேர்தல் தோல்விகளுக்குப் பிறகே ஜெயலலிதா தன் மக்கள் விரோத சட்டங்களைத் திரும்பப் பெற்றார் என்பதை நினைவில் வையுங்கள். சட்டமன்றத்தில் காங்கிரஸ் ஒரு நல்ல எதிர்கட்சியாகச் செயல்படவில்லை. மாறாக ஆளுங்கட்சிக்குப் போட்டியாக காங்கிரஸ் உறுப்பினர்கள் ஜால்ரா தட்டுகிறார்கள். இந்த ஒரு காரணத்துக்காகவே நாம் காங்கிரஸுக்கு வாக்களிக்க கூடாது.

கோவை சிறைவாசிகளின் விடுதலையிலும் முதலமைச்சர் அக்கறை காட்டவில்லை. எதிர் கட்சித் தலைவியான, ஜெயலலிதா முஸ்லிம் தனி இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாக எதுவும் பேசவில்லை. கோவை சிறைவாசிகளின் விடுதலைக்கு எதிராக உள்ளார்.

பா.ஜ.கவைப் பற்றி நாம் எதுவும் பேசத்தேவையில்லை. விரட்டப்பட்ட ஷைத்தானின் தீங்கைவிட்டும் நாம் இறைவனிடம் பாதுகாப்பு தேட வேண்டியது தான். விஜயகாந்த்தின் தே.மு.தி.கவுக்கு முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு பற்றியும், கோவை சிறைவாசிகள் விடுதலை பற்றியும் என்ன நிலைப்பாடு என்பது நமக்குத் தெரியவில்லை. எனவே, நாம் 1. காங்கிரஸ் (தி.மு.க) 2. அ.இ.அ.தி.மு.க 3. பா.ஜ.க 4. தே.மு.தி.க ஆகிய கட்சிகளூக்கு வாக்களிக்க முடியாது.

முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு அளிப்பதற்கும், கோவை சிறைவாசிகள் விடுதலைக்கும் ஆதரவளிக்கும் புதிய தமிழகம் கட்சியின் வேட்பாளருக்கு முஸ்லிம் அமைப்புகள் தங்கள் ஆதரவைத் தெரிவிக்க வேண்டும்.