Friday, December 30, 2005

கடவுள் -  இணையத் தளத்திற்கு எதிர்வினை

கடவுள் - இணையத் தளத்திற்கு எதிர்வினை

வழிகேடர்களில் ஒரு பிரிவினரான ரஷாத் கலீஃபா குழுவினர் 'கடவுள்' - என்ற பெயரில் தமிழில் ஓர் இணையத் தளம் நடத்துகின்றனர். ரஷாத் கலீஃபாவின் குர் ஆன் ஆங்கில மொழிபெயர்ப்பின் முதல் பதிப்பில் தாஹா அத்தியாயத்தின் இறுதி இரு வசனங்களும் உள்ளன. ஆனால், அந்த மொழி பெயர்ப்புக்கு இரண்டாம் பதிப்பு வெளியிடப்பட்ட போது அந்த இரு வசனங்களையும் நீக்கி விட்டார். 19 என்ற எண்ணை வைத்து அவர் போட்ட கணக்கிலும், முதல் பதிப்புக்கும், இரண்டாம் பதிப்புக்கும் வித்தியாசம் உள்ளதாகப் படித்துள்ளேன். அதனை மனிதக் குறைபாடு எனச் சொல்கிறார்கள். சராசரி மனிதனுக்கு அந்த தவறு நிகழலாம். ஆனால், இறைத்தூதராக தன்னைக் கூறிக்கொள்ளும் ஒருவருக்கு இது போன்ற தவறு நிகழலாமா? முஹமது நபி(ஸல்) அவர்களின் ஒழுக்கத்திலும், நேர்மையியிலும் அவரது சமகாலத்து முஸ்லிமல்லாதவர்கள் குறைகாணவில்லை. அவர் பிரச்சாரம் செய்த ஓரிறைக் கொள்கைக்காகவே முஹமது நபி(ஸல்) அவர்களை அக்கால குரைஷிகள் எதிர்த்தார்கள். ஆனால், இக்குழுவினரின் நிறுவனர் ரஷாத் கலீஃபா பேராசிரியராகப் பணியாற்றிய கல்லூரி ஆய்வகத்தில் ஒரு சிறுமியை பாலியில் ரீதியாக துன்புறுத்தியதாக காவல் துறையில் வழக்கு பதிவாகியுள்ளதை விக்கிபீடியாவில் வந்துள்ள அவரைப் பற்றிய கட்டுரையில் படித்து தெரிந்து கொள்ளலாம். விண்வெளிப்பயணத்துக்கு தன் ஆன்மா பயணம் செய்ததாகவும், அங்கு தான், இறைவன் தன்னை தூதராக அறிவித்ததாகவும் ரஷாத் கலீஃபா கூறியுள்ளார். போலிச் சாமியார்கள், போலி அவுலியாக்கள் போன்றோர் கூறுவதற்கும் இதற்கும் என்ன வித்தியாசம்? மவ்லவி பி.ஜெய்னுல் ஆபிதீன் அவர்களோடு நமக்கு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், இக்குழுவினரோடு அவர் நேரடி விவாதம் செய்ததையும், தன் குர் ஆன் தமிழ் மொழிபெயர்ப்பின் அடிக்குறிப்புகளில் இக்குழுவினருக்கு உரிய பதில் அளித்துள்ளதையும் பாராட்டக் கடமைப்பட்டுள்ளோம்.

Wednesday, December 28, 2005

பழைய பத்திரிக்கையும் சாப்பாட்டு மேஜையும்

பழைய செய்தி பத்திரிக்கைகளை சாப்பாடு மேஜைக்கு பயன்படுத்துவது மிகவும் பயனுள்ளதாக தெரிகிறது. பத்திரிக்கை புதிதாக இருக்கும்போது கண்ணுக்கு படாத சில விஷயங்கள் சாப்பிடும்போது பட்டுவிடுகிறதல்லவா.

மார்ச் 17, 2005 தேதியிட்ட சென்னை பதிப்பு தினமணியில் என் கண்ணில் பட்ட செய்தி ஒன்றை இணைய வாசகர்களுக்காக பகிர்ந்துக்கொள்கிறேன்.

Monday, December 19, 2005

அமெரிக்காவை அலட்சியபடுத்தி...

Image hosted by TinyPic.com


இந்தியாவும் பாகிஸ்தானும் உலகத்தின் இரண்டாவது இயற்கை எரிவாயு (LNG) வளத்தைக்கொண்ட ஈரானுடன் கைகோர்த்து ராட்சதகுழாய்கள் மூலம் எரிவாயுவை பாகிஸ்தான் வழியாக இந்தியாவிற்கு கொண்டுவரும் திட்டத்தில் கையொப்பம் இட்டுள்ளது.


Image hosted by TinyPic.com


2600 கி.மீ நீளமுள்ள இந்த கட்டுமானபணி வரும் 2007 ல் துவங்கி 2010 ல் முடிவடைந்து, முதல் குழாய் எரிவாயு வினியோகம் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஈரான் ஆகிய மூன்று நாடுகளின் பொருளாதாரத்தையும், வேலைவாய்ப்புக்கான சூழலையும் பலப்படுத்துவதாக அமையும். மேலும் அண்டை நாடுகளான இந்தியா, பாகிஸ்தான் இடையே நல்லுறவையும் பரஸ்பர நெருக்கத்தையும் பலப்படுத்துவதாக அமையும் என்று நம்பப்படுகிறது.

40 பில்லியன் அமெரிக்க டாலருக்கான ஒப்பந்தத்தில் ஏற்கனவே கையெழுத்திட்ட இந்தியா, ஈரானுடனான தன் உறவை மீண்டும் பலப்படுத்தியுள்ளது.

உலக்காவலனாக தன்னைத்தானே அறிவித்துக்கொள்ளும் அமெரிக்கா, இந்த நடவடிக்கையை எதிர்த்து குரல் எழுப்பியுள்ளது.

இஸ்லாமாபாத்தில் நடந்த பத்திரிகையாளர்கள் கூட்டத்தில் பேசிய பெட்ரோலியத்துறை அமைச்சர் மணிசங்கர ஐயர், அமெரிக்காவின் எச்சரிக்கையை இந்தியா அலட்சியபடுத்தி இத்திட்டத்தில் இறங்கும் என்று கூறியுள்ளார்.

அமெரிக்காவிற்கு எதிராக, அணுஆயுத நாடுகளான பாகிஸ்தானும், இந்தியாவும் ஈரானுடன் நட்புகொண்டு களமிறங்கியிருப்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

Monday, December 12, 2005

லஞ்சம் வாங்கிய பா.ஜனதா-காங். எம்.பிக்கள்

கேள்வி கேட்க லஞ்சம் வாங்கிய பா.ஜனதா-காங். எம்.பிக்கள் சிக்கினர்: 7 பேர் உடனடி சஸ்பெண்டு
புதுடெல்லி, டிச. 12-

இந்திய அரசியலில் மீண்டும் ஒரு லஞ்ச விவகாரம் சூறாவளி போல இன்று கிளம்பி உள்ளது.
இந்த தடவை லஞ்ச ஊழலில் சிக்கி இருப் பவர்கள் பாரதீயஜனதா, காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த 11 எம்.பி.க்களாகும். இவர்களை பிரபல இந்தி செய்திச்சானலான "ஆஜ்தக்'' டி.வி. பொறி வைத்து பிடித்து நாட்டு மக்களுக்கு அடையாளம் காட்டி உள்ளது.

பாராளுமன்ற எம்.பி.க்கள் இதுவரை காரியம் சாதித்து கொடுக்கத்தான் அன்பளிப்பு என்ற பெயரில் லஞ்சம் வாங்கி வருவதை கேள்விப்பட்டு இருக்கிறோம். ஆனால் மக்கள் பிரச்சினைகள் பற்றி பாராளுமன்றத்தில் கேள்விகள் கேட்பதற்கும் கூட அவர்கள் கையை நீட்டி பணம் வாங்குகிறார்கள் என்பதை முதன் முதலாக ஆஜ்தக் டி.வி. படம் பிடித்து இன்று வெட்ட வெளிச்சம் ஆக்கி விட்டது.

ஆஜ்தக் டி.வி.யின் சிறப்பு குழு ஒன்று மிகவும் துணிச்சலாக செயல்பட்டு இந்த லஞ்ச பேர்வழிகளை வீடியோவில் படமாக்கியது. எம்.பி.க்களின் இத்தகைய செயல்பாடு, பா.ஜனதா, காங் கிரஸ் தலைவர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

நாடெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள இந்த சம்பவம் பற்றிய முழு விவரம் வருமாறு:-

பாராளுமன்றத்தில் தினமும் முதலில் கேள்வி நேரம் நடைபெறும். ஒரு மணி நேரம் இந்த கேள்வி நேரத்துக்காக ஒதுக்கப்படுவதுண்டு. அப்போது முக்கிய பிரச்சினைகள் குறித்து எம்.பி.க்கள் கேள்வி எழுப்பி சம்பந்தப்பட்ட துறை மந்திரிகளிடம் இருந்து பதில் பெறலாம்.
ஆனால் கேள்வி நேரத்தில் என்ன கேள்விகள், யாரிடம் கேட்கப் போகிறோம் என்பதை எம்.பி.க்கள் தெளிவாக முன்னதாகவே எழுதிக் கொடுத்து விட வேண்டும். அந்த கேள்விகளுக்கு மத்திய மந்திரிகள் பதில் அளிப்பார்கள்.

அந்த கேள்வி-பதில் தொடர்பாக எந்த உறுப்பினர் வேண்டுமானாலும் துணைக் கேள்விகள் கேட்கலாம் அதற்கும் மந்திரி பதில் அளிப்பார்.

உறுப்பினர்கள் பெரும்பாலும் தங்கள் தொகுதி மக்கள் பிரச்சினை சம்பந்தப்பட்ட கேள்விகளைதான் எழுப்புவார்கள். இப்படி கேள்வி கேட்பதற்கு கூட சில எம்.பி.க்கள் லஞ்சம் வாங்குவதாக கூறப்படுகிறது. சில தனியார் நிறுவனங்கள் அரசின் திட்டங்கள், செயல்பாடுகள் தங்களுக்கு சாதகமாக மாற வேண்டும் என்ற நோக்கத்துக்காக எம்.பி.க்களுக்கு பணம் கொடுத்து கேள்வி கேட்க வைப்பார்கள் என்று கூறப்படுகிறது.

இவை தவிர சபையில் சில கேள்விகளை கேட்க தொழில் அதிபர்கள் லஞ்சம் கொடுப்பதுண்டு.
எம்.பி.க்களின் இந்த லஞ்ச வேட்டையை நாட்டு மக்களுக்கு அம்பலப்படுத்த ஆஜ்தக் டி.வி. முடிவு செய்தது. கேள்வி கேட்பதற்கு தயவு தாட்சண்யம் இல்லாமல், கூசாமல் லஞ்சம் வாங்கும் அரசியல் வாதிகள் யார், யார் என்று அலசி ஆய்வு நடத்தப்பட்டது. அதில் 11 எம்.பி.க்கள் லஞ்ச பெருச் சாளிகளாக இருப்பது தெரிய வந்தது.

லஞ்சம் வாங்கும் எம்.பி.க்களை கையும் களவுமாக `பொறி' வைத்து பிடிக்க அவர்கள் தீர்மானித்தனர். இதற்காக சிறப்புக்குழு ஒன்று உருவாக்கப்பட்டது. அந்த குழுவினர் சாதாரண நபர்கள் போல சென்று குறிப்பிட்ட எம்.பி.க்களை அணுகினார்கள்.

"பாராளுமன்றத்தில் எங்களுக்காக கேள்விகள்கேட்க வேண்டும். எவ்வளவு எதிர்பார்க்கிறீர்கள்?'' என்று அப்பாவியாக கேட்டனர். அவர்களை நம்பிய எம்.பி.க்கள் பேரம் பேசினார்கள். ஒவ்வொரு கேள்விக்கும் தங்களுக்கு ரூ.30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை தர வேண்டும் என்று எம்.பி.க்கள் கேட்டதாக தெரிகிறது.

இதை டி.வி. நிருபர்கள் குழு ஏற்றுக் கொண்டது.

சமீபத்தில் ஒரு நாள் ஆஜ்தக்குழு குறிப்பிட்ட 11 எம்.பி.க்களை பணத்துடன் சந்தித்தது. என்னென்ன கேள்விகள் கேட்க வேண்டும் என்ற ரசீதுடன் பணக் கட்டுக்களையும் கொடுத்தனர். எம்.பி.க்களும் அதை சிரித்த முகத்துடன் வாங்கிக் கொண்டனர்.

இதை ஆஜ்தக் குழுவின் ஒரு பிரிவு மிக துணிச்சலாக ரகசியமாக வீடியோவில் படம் பிடித்தது. சில நிமிடங்களே இந்த காட்சிகள் ஓடுகிறது. `ஆஜ்தக்' டி.வி. இன்று இந்த காட்சிகளை ஒளிபரப்பியது.

எம்.பி.க்கள் லஞ்சம் வாங்கிய காட்சிகளைப் பார்த்த பல்வேறு கட்சித் தலைவர்களும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். நாடெங்கும் இந்த செய்தி காட்டுத் தீ போல பரவியது. லஞ்சம் வாங்கிய எம்.பி.க்கள் யார், யார்? என்பதை அறிந்து கொள்ள நாட்டு மக்களிடம் ஆர்வமும், எதிர்பார்ப்பும் ஏற்பட்டது.

நீண்ட ஆய்வுக்குப்பிறகு லஞ்சம் வாங்கிய 11 எம்.பி.க்கள் பெயர் விவரம் தெரியவந்தது. இதில் 6 எம்.பி.க்கள் பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர்கள். ஒருவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்.
3 பேர் பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்தவர்கள். மற்றொருவர் ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்தவராவார்.

லஞ்சம் வாங்கிய சிக்கி உள்ள 11 எம்.பி.க்களின் பெயர் விவரம் வருமாறு:-
1.அன்னா சாகேப் பாட்டீல் (மராட்டியம்), 2. ஒய்.ஜி. மகாஜன் (மராட்டியம்), 3. பிரதீப் காந்தி (சத்தீஷ்கர்), 4. சுரேஷ் சந்தல் (இமாசல பிரதேசம்), 5. சந்திர பிரதாப்சிங் (மத்திய பிரதேசம்), 6. மேல் சபை எம்.பி. சந்திரபால்சிங் லோதா (ஒரிசா), (இவர்கள் 6 பேரும் பா.ஜனதாவை சேர்ந் தவர்கள்.)

7. ராம்சேவாக் சிங் (குவாலியர்) இவர் காங்கிரஸ் எம்.பி., 8. மனோஜ்குமார் (ஜார்க்கண்டு),(இவர் ராஷ்டீரியா ஜனதா தளம் எம்.பி.).

9. நரேந்திர குமார் குஸ்வகா (உத்தரபிரதேசம்), 10. லால்சந்திரா (உத்திரபிரதேசம்), 11. ராஜாராம் பால் (உத்திர பிரதேசம்) (இவர்கள் மூவரும் பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்தவர்கள்).
பா.ஜனதா எம்.பி.க்கள் லஞ்சம் வாங்கிய தகவல் அறிந்ததும் மூத்த தலைவர்களான வாஜ்பாயும், அத்வானியும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் 6 பா.ஜனதா எம்.பி.க்களை கட்சியில் இருந்து சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டனர். இதை பா.ஜனதா தலைவர் எல்.கே.அத்வானி இன்று டெல்லியில் நிருபர்களிடம் உறுதிப்படுத்தினார்.

அவர் மேலும் கூறியதாவது:-
பொது வாழ்க்கையில் ஈடுபடுபவர்கள் தூய்மையாக இருக்க வேண்டும், ஒழுக்கத்துடன் செயல்பட வேண்டும் என்று இப்போது நமது நாட்டில் விவாதங்கள் நடந்து கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் எம்.பி.க்கள் லஞ்சம் வாங்கி இருப்பது வெட்கக் கேடானது. இது மிகவும் முக்கியமான பிரச்சினையாகும்.

எம்.பி.க்கள் லஞ்சம் வாங்கிய பிரச்சினை குறித்து நான் இன்று காலை சபாநாயகர் சோம்நாத் சாட்டரஜியை தொடர்பு கொண்டு பேசி னேன். எம்.பி.க்கள் லஞ்சம் வாங்கியது பற்றி கட்சியின் உயர்மட்டக்குழு விசாரணை நடத்தும். இதை மிக முக்கிய மான பிரச்சினையாக அலசவ உத்தரவிட்டுள்ளேன்.

தேவைப்பட்டால் நாங்கள் இதுபற்றி பாராளுமன்ற உரிமைக்குழுவுக்கும் பரிந்துரை செய்வோம். இன்னும் இது தொடர்பாக எனக்கு முழுமையான விவரம் வரவில்லை. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரத்தில் இந்த பிரச்சினைக்கு விடை காணப்படும்.
இவ்வாறு எல்.கே.அத்வானி கூறினார்.

பா.ஜனதாவின் அதிரடி நடவடிக்கையை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியும் லஞ்சம் வாங்கிய தன் கட்சி உறுப்பினரை அதிரடியாக சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டது. காங்கிரஸ் எம்.பி. நீக்கப்பட்ட தகவலை காங்கிரஸ் பொது செயலாளர் அம்பிகாசோனி நிருபர்களிடம் தெரிவித்தார்.

Sunday, December 11, 2005

புரட்சித் தலைவியும் கண்ணீர்த் துளிகளின் சாபமும்

புரட்சித் தலைவியும் கண்ணீர்த் துளிகளின் சாபமும்

சக்கரியா

அப்துல் நாசர் மதனி என்னும் குடிமகனும் பிற குடிமக்களும் குற்றப்பத்திரிகையோ விசாரணையோ இல்லாமல் கோயமுத்தூர் சிறையில் அடைக்கப்பட்டு ஏழு நீண்ட வருடங்கள் கழிந்துவிட்டன. இந்த விஷயத்தில் மதனியின் பெயர் எடுத்துச் சொல்லப்படுவது அவர் ஓர் அரசியல் கட்சியின் தலைவர், பிரபலமானவர் என்பதனால் மட்டுமே. மற்ற கைதிகளும் குடியுரிமைகளும் குடும்பங்களும் மனித உறவுகளும் கொண்டவர்களே.

இவர்கள் ஒவ்வொருவரும் ஆட்சியமைப்பு, தனது கைகளால் நடத்திக்கொண்டிருக்கும் மறைவற்ற, நம்ப முடியாததென்று தோன்றக்கூடிய, மனித உரிமை மீறýன் இரைகள். நாம் குற்றவாளிகளாக இருந்தாலும் இல்லையென்றாலும் உங்களுக்கோ எனக்கோ இது நேர்ந்திருக்கலாம்; இனி நேராது என்றும் சொல்வதற்கில்லை.

நாம் நம்பிக்கை வைத்திருக்கும் ஜனநாயக அமைப்பு எந்த அளவுக்குத் தொட்டால் நொறுங்கிவிடக்கூடியது என்றும் நாம் ஓட்டுப்போட்டு உருவாக்கும் ஆட்சியமைப்புகள் எந்த அளவுக்கு இதயமில்லாதவை என்னும் அச்சம் தரும் உண்மையின் கொடூர உதாரணங்கள்தாம் மதனியும் அவர் கூட்டாளிகளும்.

ஏழு ஆண்டுகள் கழிந்துவிட்ட இந்த மனித உரிமை அழிப்புக்கு முன்னால் ஊடகங்களும் அறிவுஜீவிகளும் சமூகப் பணியாளர்களும் மெüனமாக நிற்பதைக் காணலாம். கோக்கோகோலா போன்ற முட்டாள் பானத்துக்கு எதிராகச் சிலர் நடத்தும் போராட்ட நாடகங்களைப் பார்க்கும்போது என் ரத்தம் கொதிப்பதும் இந்தக் காரணத்தால்தான். கோக்கோ கோலாவைவிட எத்தனையோ மடங்கு வýமை கொண்ட, பயங்கரங்கொண்ட ஆக்கிரமிப்பாளர்களாகத்தான் நமது ஆட்சியமைப்புகள் பெரும்பாலும் நடந்துகொள்கின்றன. நமது அரசு அமைப்புகளின் வஞ்சனைக்கும் வாக்குறுதி மீறலுக்கும் கபடத்துக்கும் கொடூரத்துக்கும் பக்கத்தில் வர எந்த கோக்கோ கோலாவால் முடியும்? எந்த பெப்ஸியால் முடியும்?

மதனியும் சக கைதிகளும் செய்த குற்றம் என்னவென்று சொல்ல அவர்களைச் சிறை வைத்திருப்பவர்களின் நாவு எழுவதில்லை. அதே சமயம் ஏழு ஆண்டுகளாக அவர்களுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டிருக்கிறது. மதனி தீவிர நோய்க்கு ஆளாகியிருப்பவர். மற்ற கைதிகளும் அவரவர்களுடைய கடுமையான வாழ்க்கைச் சிக்கல்களை அனுபவித்துக்கொண்டிருப்பவர்கள். அவர்கள் குற்றம் புரிந்தவர்கள் என்று வைத்துக்கொண்டாலும், அவர்களுக்குக் கிடைக்கக் கூடியதைப் போலவோ அதைவிட அதிகமாகவோ தண்டனைக் காலத்தைச் சிறையில் கழித்திருக்கிறார்கள். குற்றப் பத்திரிகை வழங்குவதில் மட்டும் அவர்களுக்கு விலங்கு பூட்டிய கரங்களுக்கு பலவீனம். நீதிமன்றத்தின் முன் விசாரணைக்காக அவர்களை ஆஜர்படுத்துவதில் யாருக்கோ பயம்.

யாருடைய நெஞ்சங்களோ அதை நினைத்து அடித்துக்கொள்கின்றன. ஒருவேளை இந்த நபர்களின் சிந்தனை இப்படியிருக்கலாம்:

கட்டுக்கதைகள் அம்பலமாகும் அந்த பயங்கர நாளை எதிர்கொள்வதைவிட மதனியையும் சக மனிதர்களையும் விலங்குகளைப் போல் கூண்டில் அடைத்து வைப்பதே நல்லது - 'மோத'லுக்கு (என்கவுன்டருக்கு!) இரையாக அவர்களது சடலங்களை செüகரியமான ஒரு நாள் பார்க்கும்வரை. நாம் வாழ்வது இருபத்தி யொன்றாம் நூற்றாண்டின் இந்தியாவிலாம்! சுதந்திரத்தின் ஐம்பத்தெட்டு ஆண்டுகளைக் கடந்த இந்தியாவிலாம்!

இந்தக் கைதிகள் அடைக்கப்பட்டிருப்பது திருவள்ளுவரின் தமிழ்நாட்டில். சுப்ரமணிய பாரதியின் தமிழ்நாட்டில். பெரியாரின் தமிழ்நாட்டில். தமிழ்நாட்டின் இரண்டு அரசுகள்தாம் இந்தக் கொடூரமான அரசியல் அமைப்புச் சட்டமீறலுக்கும் மனித உரிமை மீறலுக்குமான பொறுப்பைப் பங்கிட்டுக்கொள்கின்றன. அவர்களைக் கைது செய்ததும் குற்றப்பத்திரிகையில்லாமல் இரண்டாண்டுகளுக்கு மேலாகச் சிறையில் தள்ளியதும் தி.மு.க. அரசு. கலைஞர் கருணாநிதியென்ற பண்பாட்டு நாயகரும் அறிவாளியுமான நபர் முதல்வராக இருந்த அரசு. தி.மு.க. அரசிடமிருந்து இந்தப் பிசாசுத்தனமான மரபை அ.இ.அ.தி.மு.க. ஏற்றுக் கொண்டும் ஐந்தாண்டுகள் கடந்துவிட்டன. 'புரட்சித் தலைவி'யும் சந்தேகமில்லாமல் ஆட்சித் திறனில் நிபுணருமான செல்வி ஜெயலýதாதான் முதல்வர். ஆனால், ஜெயலýதாவும் இந்த அவலமான போý நாடகத்தைத் தொடர அவருக்கேயான காரணங்களும் இருக்கலாம். இந்தக் கைதிகளின் வாழ்க்கையை நசுக்கித் தேய்த்து உருவான ரத்தத் திரைக்குப் பின்னால் யாரெல்லாமோ காப்பாற்றப்படுகிறார்கள். யார் யாருடையதோ பாவங்களும் குற்றங்களும் பொய்களும் என்றென்றைக்குமாக மறைக்கப்படுகின்றன. அவர்கள் எந்த அளவுக்கு வýமையானவர்களாக இருக்க வேண்டும்! இல்லையென்றால் இந்த அளவுக்கு வெளிப்படையான அப்பட்டமான அரசியல் சட்ட மீறலுக்கு இரண்டு முதலமைச்சர்களை விளக்குப் பிடிக்கவைக்க அவர்களால் எப்படி முடிந்தது?

இந்தக் கைதிகளின் மேல் சுமத்தப்பட்டிருக்கும் குற்றம் 1998இல் கோயமுத்தூரில் எல்.கே. அத்வானி பங்கேற்ற நிகழ்ச்சியில் நடந்த குண்டுவெடிப்பு. அந்த குண்டுவெடிப்பால் மிக அதிக ஆதாயம் பெற்றது அத்வானியின் கட்சியும் அது தலைமை தாங்கிய முன்னணியுமே என்று தமிழ்நாட்டில் கண்களைத் திறந்து வைத்திருக்கிற எந்தச் சிறுபிள்ளைக்கும் தெரியும்.

சுவாரஸ்யமான, ஆனால் அச்சம் தரக்கூடிய ஒரு புள்ளிவிவரத்தை அண்மையில் காண நேர்ந்தது. பி.ஜே.பி. ஆட்சிக் காலத்தில் இந்தியாவில் பொதுக் கூட்ட நிகழ்ச்சிகளில் நடந்த குண்டுவெடிப்புகளின் கணக்குகள் அவை. நவீன இந்தியாவின் வரலாற்றில் எந்த ஆட்சிக் காலத்திலும் இந்த அளவு குண்டு வெடிப்புகள் நிகழ்ந்ததில்லையாம். அது மட்டுமல்ல ஒவ்வொரு சம்பவமும் குறிதவறாததும்கூட. அதாவது ஆட்சிப் பீடத்தை அவ்வப்போதைய சிக்கல்களிýருந்து புகைத்திரை மூலம் காப்பாற்றியவை, ஊடகங்களின் கவனத்தையும் மக்களின் கவனத்தையும் திசை திருப்பியவை.

தமிழ்நாட்டில் 1998இல் பி.ஜே.பி. துளிர்விட்டதற்குப் பின்னால் என்னென்ன உண்மை வெடிகள் மறைந்திருக்கின்றவென்று யாருக்குத் தெரியும்? அவர்களுக்குத் தமிழ்ச் சூரியனின் கீழே ஓர் இடம் கொடுத்தது கலைஞரின் வலுவான கரங்களாக இருக்கலாம். திராவிடத் தன்மானத்துக்கும் மதச் சார்பின்மைக்கும் முற்போக்குக் கொள்கைகளுக்கும் உயர்த்தியிருந்த அந்தக் கரங்கள் ஒருபோதும் செய்யக் கூடாத பாவம் அது. மதனியும் சக கைதிகளும் அனுபவிக்கும் நீதி மறுப்பு, மனித உரிமை மறுப்புப் பற்றி தி.மு.க. அர்த்தமுள்ள மெüனத்தைக் கடைப்பிடிக்கிறது என்பதும் கவனத்துக்குரியது.

எல்லா மத நூல்களும் ஒரே குரýல் எடுத்துச் சொல்கிற ஓர் உண்மை: நீதிமானின் சாபம் குலத்தை நாசமாக்கும். ஏழு ஆண்டுகளாகக் குற்றப்பத்திரிகையோ விசாரணையோ இல்லாமல் சிறையிலடைக்கப்பட்டுள்ள மதனியும் சக மனிதர்களும் குற்றமற்றவர்கள் என்றால் புரட்சித் தலைவி கொடூரமான தார்மீக அச்சுறுத்தலை எதிர்கொள்ள நேரும். ஒருவேளை இந்த விஷயத்தில் அவர் ஆதரவற்றவராகவும் இருக்கலாம். அவரது கைகளைக் கட்டிப்போடும் வýமையுள்ளவர்கள் இதன் பின்னால் இருக்கலாம். ஆனால், பிரஜைகளின் ரத்தத்தின் பொறுப்பு அரசியின் மீதே படியும். இந்தக் கைதிகளின் குடும்பத்தினர் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஒவ்வொன் றும் அணையாத தீச்சுவாலைகளாக, புரட்சித் தலைவி ரட்சிப்புத் தேடும் ஆலயங்களுக்கும் ஆன்மீகச் சன்னி தானங்களுக்கும் உண்மைக்காகச் சாட்சி சொல்லப் பின்தொடர்ந்துகொண்டேயிருக்கும். நீதியின் சாபத்தைவிட, கண்ணீரின் சாபத்தைவிட அழிவில்லாத இன்னொரு சாபமில்லை.


தமிழில்: சுகுமாரன் நன்றி: காலச்சுவடு டிசம்பர் 2005

Saturday, December 10, 2005

குர்பானிச் சட்டங்கள்

குர்பானியின் பிராணிகள்

நபி(ஸல்) அவர்கள் உயர்தரமான கொம்புள்ள ஆட்டைக் குர்பானி கொடுத்தார்கள். வாய், கால்கள், கண்கள் ஆகியவை கறுப்பு நிறமாக அந்த ஆடு இருந்தது.
அறிவிப்பாளர் : அபூஸயீத் (ரலி)
நூல்கள் : திர்மிதி,அபூதாவுத், நஸயீ, இப்னுமாஜா

நாங்கள் ஹுதைபியா உடன்படிக்கையின் போது 7 பேர் ஒரு ஒட்டகத்தையும், 7 பேர் ஒரு மாட்டையும் அறுத்தோம்
அறிவிப்பாளர் : ஜாபிர் (ரலி)
நூல்கள் : முஸ்லிம், அஹ்மத், திர்மிதி,அபூதாவுத், நஸயீ, இப்னுமாஜா

குர்பானி பிராணிகளின் வயது

"முஸின்னத்" என்ற பருவமுடையத் தவிர மற்றதை நீங்கள் அறுக்க வேண்டாம். அது கிடைப்பது உங்களுக்கு சிரமமாக இருந்தால் "ஜத்அத்" பருவமுடைய பிராணிகளை அறுக்கலாம் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர் : ஜாபிர் (ரலி)
நூல்கள் : முஸ்லிம், அஹ்மத், அபூதாவுத், நஸயீ, இப்னுமாஜா

முஸின்னத் என்றால் 5 வயதான ஒட்டகத்திற்கும் 2 வயது முடிந்த ஆடு, மாடுகளுக்கும் கூறப்படும். ஜத்அத் என்றால் 4 வயதான ஒட்டகத்திற்கும் 1 வயது முழுமையடைந்த ஆடு, மாடுகளுக்கும் கூறப்படும் என இப்னுல் அஸீர் கூறுகிறார்கள்.

குர்பானி கொடுப்பது ஒட்டகமாக இருந்தால் அது 5 வயது முழுமையாகியதாக இருக்கவேண்டும். ஆடுமாடுகளாக இருந்தால் அவை இரண்டு வயதை முழுமையாகியதாக இருக்கவேண்டும். இவ்வாறு இல்லாதிருப்பின் இது போன்ற வயதில் பிராணி கிடைக்காதிருப்பின் நான்கு வயது முடிந்த ஒட்டகத்தையோ, ஒரு வயது பூர்த்தியடைந்த ஆட்டையோ, மாட்டையோ குர்பானி கொடுக்கலாம்.

பிராணிகளை நன்கு பராமரித்தல்

நாங்களும், இதர முஸ்லிம்களும் மதீனாவில் குர்பானிப் பிராணியைக் கொழுக்கச் செய்வோம்
அறிவிப்பாளர் : உமாமா (ரலி)
நூல்கள் : புகாரி

ஒரு குடும்பத்திற்கு ஒன்று போதும்

நபி(ஸல்) அவர்களின் காலத்தில் உங்களுடைய குர்பானி கொடுக்கும் பழக்கம் எப்படி இருந்தது? என்று அபூ அய்யூப் அல் அன்சாரி (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் நபி(ஸல்) அவர்கள் காலத்தில் ஒருவர் தனக்காகவும் தன் குடும்பத்தினருக்காகவும் ஒரு ஆட்டைக் குர்பானி கொடுப்பார். அதை அவர்களும் உண்பார்கள், பிறருக்கும் உண்ணக் கொடுப்பார்கள். தற்போது மக்கள் பெருமைக்காக செய்யும் நிலை இன்று ஏற்பட்டுவிட்டது. (அதாவது ஒரு குடும்பத்தினரே பல ஆடுகளை குர்பானி கொடுக்கும் நிலை ஏற்பட்டுவிட்டது) என்று பதில் கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அதாஉ இப்னு யஸார் (ரலி)
நூல்கள் : திர்மிதி, இப்னுமாஜா, அல்முஅத்தா

நபி(ஸல்) அவர்களின் குடும்பத்தினர் ஒரு ஆட்டையோ, இரண்டு ஆட்டையோ குர்பானி கொடுத்தனர் என்ற சுன்னத்தை நான் அறிந்த பிறகு (நான் ஒரு ஆட்டை குர்பானி கொடுப்பதால்) என்னை என் குடும்பத்தினர் "கல் நெஞ்சன்" என்று கருதுகின்றனர். (நான் பல ஆடுகளை கொடுக்காததால்) என் அண்டைவீட்டார் என்னை "கஞ்சன்" என்கின்றனர்.
அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)
நூல்கள் : இப்னுமாஜா

குர்பானி கொடுக்கத் தகுதியற்ற பிராணிகள்

கொம்பில், காதில் பாதி அளவோ அல்லது அதை விட கூடுதலாகவோ உடைந்த, அறுபட்டவைகளை (ஆடு, மாடுகளை) குர்பானி கொடுப்பதை நபி(ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.
அறிவிப்பாளர் : அலி (ரலி)
நூல்கள் : அஹ்மத், அபூதாவுத், திர்மிதி, நஸயீ, இப்னுமாஜா

நன்கு வெளியில் தெரியும் படியான நோய், நன்கு வெளியில் தெரியும் படியான நொண்டி, கால் எலும்புக்குள் மஜ்ஜை இல்லாத அளவுக்கு ஒடிந்த கால் ஆகிய நான்கு பிராணிகள் குர்பானி கொடுக்க அனுமதிக்கப்படாதது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர் : பரா இப்னு ஆஸிப் (ரலி)
நூல்கள் : அஹ்மத், அபூதாவுத், திர்மிதி, நஸயீ, இப்னுமாஜா

முழுமையாக காதில்லாதவை, அடியோடு கொம்பில்லாதவை, பார்யோ தெரியாதவை, பலவீனத்தால் தானாக எழுந்து நடக்க இயலாதவை, கால் ஒடிந்தவை ஆகியவைகளை குர்பானி கொடுத்திட நபி(ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.
அறிவிப்பாளர் : உத்பா இப்னு அப்தஸ்ஸீலமிய்யி (ரலி)
நூல்கள் : அஹ்மத், அபூதாவுத்

கொம்பில் பாதி ஒடிந்த பிராணி.
காதில் பாதி அறுப்பட்டது.
தெளிவாகத் தெரியும் படியான மாறுகண் உள்ளவை.
தெளிவாகத் தெரியும் நோய் உள்ளவை.
நன்கு தெரியும் படியான நொண்டி.
கால் எலும்பு முறிந்து விட்ட நொண்டி.
காதில்லாதவை.
கொம்பில்லாதவை.
பார்வையில்லாதவை.
தானாக எழுந்து நடக்க முடியாத பலவீனமானவை.
இவைகளை கண்டிப்பாக குர்பானி கொடுக்கக்கூடாது.

காயடிக்கப்பட்ட பிராணிகள் கூடும்

காயடிக்கப்பட்ட இரண்டு பெரிய கொம்புகளுடைய இரண்டு ஆடுகளை நபி(ஸல்) அவர்கள் குர்பானி கொடுத்தார்கள்.
அறிவிப்பாளர் : அபூ ராபிஉ (ரலி)
நூல்கள் : அஹ்மத், ஹாகீம்

இரண்டு பெரிய கொம்புகளுடைய நன்கு கொழுத்த இரண்டு ஆடுகளை நபி(ஸல்) அவர்கள் குர்பானி கொடுத்தார்கள்.
அறிவிப்பாளர் : ஆயிஷா (ரலி)
நூல்கள் : அஹ்மத், இப்னுமாஜா, பைஹகீ, ஹாகீம்

அறுக்கும் நேரம்

ஹஜ்ஜுப்பெருநாள் அன்று நபி(ஸல்) அவர்களுடன் நான் தொழுதேன். தொழுதுமுடித்து நபி(ஸல்) அவர்கள் திரும்பிய போது, அங்கே எலும்புகளும், அறுக்கப்பட்ட குர்பானி பிராணிகளும் கிடந்தன. தொழுகை முடியும் முன்பே இவை அறுக்கப்பட்டுவிட்டன என்பதை அறிந்த நபி(ஸல்) அவர்கள் "தொழும் முன்பு அறுத்தவர் அதே இடத்தில் வேறு ஒன்றை அறுக்கட்டும். தொழும் வரை அறுக்கவில்லையானால் அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்கட்டும்" என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் : ஜீன்துப் இப்னு ஸீப்யான் (ரலி)
நூல்கள் : புகாரி, முஸ்லிம்

தொழும் முன் குர்பானி கொடுத்தால் (அதற்கு பகரமாக) மீண்டும் அறுக்கட்டும் என்று ஹஜ் பெருநாள் அன்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அனஸ் (ரலி)
நூல்கள் : புகாரி, முஸ்லிம்


அறுக்கும் போது கூற வேண்டியவை

நபி(ஸல்) அவர்கள் இரண்டு பெரிய கொம்புகளுடைய இரண்டு ஆடுகளை குர்பானி கொடுத்தார்கள். அப்போது அவர்கள் தன் பாதங்களை அந்த இரண்டு ஆடுகளின் கழுத்தில் வைத்து மிதித்துக் கொண்டு "பிஸ்மில்லாஹ்" என கூறி "அல்லாஹுஅக்பர்" என்று கூறியும் அவ்விரண்டையும் தன் கையால் அறுத்ததை நான் பார்த்தேன்.
அறிவிப்பாளர் : அனஸ் (ரலி)
நூல்கள் : புகாரி, முஸ்லிம், அஹ்மத், அபூதாவுத், நஸயீ, திர்மிதி, இப்னுமாஜா

அறுத்த பிறகும் துஆச் செய்யலாம்

ஆயிஷாவே! கத்தியை கொண்டு வா! அதை கல்லில் நன்கு தீட்டு! என்று கூறி நபி(ஸல்) அவர்கள் ஆட்டைப் பிடித்தார்கள். அதை சாய்த்து படுக்க வைத்தார்கள். பின்பு அறுத்தார்கள். பின்பு "பிஸ்மில்லாஹ் அல்லாஹும்ம தகப்பல் மின் முஹம்மதின் வஆல முஹம்மதின், வமின் உம்மதி முஹம்மதின்" என்று கூறினார்கள். குர்பானி கொடுத்தார்கள்.
அறிவிப்பாளர் : ஆயிஷா (ரலி)
நூல்கள் : முஸ்லிம், அஹ்மத், அபூதாவுத்

ஒட்டகத்ததை நிற்க வைத்து அறுக்க வேண்டும்

ஒரு மனிதர் ஒட்டகத்தை படுக்க வைத்து அறுப்பதைக் கண்ட இப்னு உமர் (ரலி) அவர்கள், "அதை நீ எழுப்பி நிற்க வைத்து முஹம்மது (ஸல்) அவர்கள் வழியில் அறுப்பீராக!" என்றார்கள்.
நூல்கள் : புகாரி, முஸ்லிம்

குர்பானி இறைச்சியை உண்ணலாம், சேமிக்கலாம்

மூன்று நாட்களுக்கு மேல் குர்பானி இறைச்சியை உண்ண நபி(ஸல்) அவர்கள் தடை செய்திருந்தார்கள். பின்பு உண்ணுங்கள், சேமித்து வைத்துக் கொள்ளுங்கள், தர்மம் செய்யுங்கள் என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் : ஜாபிர் (ரலி)
நூல்கள் : புகாரி, முஸ்லிம், நஸயீ

உரிப்பவருக்கு குர்பானி இறைச்சியோ தோலையோ கூலியாக தரக்கூடாது

நபி(ஸல்) அவர்கள் குர்பானி கொடுத்த ஒட்டகங்களை மேற்பார்வையிட என்னை நியமித்தார்கள். அதன் இறைச்சி, தோல், அதன் மீது கிடந்த (கயிறு போன்ற) பொருட்களை தர்மம் செய்யுமாறும், அதை உரித்தவருக்கு அவற்றில் எதையும் கூலியாகக் கொடுக்கவும் கூடாது என்றும் கட்டளையிட்டனர். நாங்கள் அதற்கு தனியாக கூலி கொடுப்போம்.
அறிவிப்பாளர் : அலி (ரலி)
நூல்கள் : புகாரி, முஸ்லிம்

குர்பானி கொடுப்பவர் கடைபிடிக்க வேண்டியவை

உங்களில் குர்பானி கொடுக்க எண்ணியவர், துல்ஹஜ் பிறையை கண்டால் அவர் தமது நகங்களை, மயிர்களை (குர்பானி கொடுக்கும் வரை) களையக் கூடாது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர் : உம்முஸலாமா (ரலி)
நூல்கள் : முஸ்லிம், அஹ்மத், நஸயீ, இப்னுமாஜா, திர்மிதி, அபூதாவுத்

குர்பானி கொடுக்கப்பட வேண்டிய நாட்கள்

அய்யாமுத் தஷ்ரீக் முழுவதும் அறுப்பதற்கு ஏற்ற நாளாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்
அறிவிப்பாளர் : இப்னு முத்இம் (ரலி)
நூல்கள் : இப்னுஹிப்பான்

Friday, December 02, 2005

ஜனாஸா குளிப்பாட்டுபவர் கவனத்திற்கு

1. மூன்று முறை குளிப்பாட்டுதல் வேண்டும். தேவைக்கேற்ப அதிகரித்துக் கொள்ளலாம்.

2. ஒற்றைப் படையாகவே குளிப்பாட்டுதல் அமைய வேண்டும்.

3. குளிப்பாட்டும் நீரில் இலந்தை இலை அல்லது உடலை சுத்தப்படுத்தக் கூடிய சோப்பு போன்றவற்றை பயன்படுத்தலாம்.

4. கடைசித்தடவையாக குளிப்பாட்டும் தண்ணீரில் ஏதாவது வாசனைப் பொருட்களை உபயோகிக்கலாம். (ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டியநிலையில் மரணித்தவரைத்தவிர)

5. கொண்டைகளை அவிழ்த்துவிட்டு நன்றாக கழுவவேண்டும்.

6. தலைமுடியை தொங்க விட வேண்டும்.

7. பெண்களுக்கு மூன்று பின்னல் போட்டு தொங்க விடவேண்டும்.

8. வலது பக்கமிருந்து குளிப்பாட்டுதலை தொடங்க வேண்டும்.

9. ஏதாவது நிர்பந்தம் ஏற்பட்டாலே தவிர ஆண் ஜனாஸாவை ஆண்களும் பெண் ஜனாஸாவை பெண்களும் குளிப்பாட்ட வேண்டும். (கணவன் மனைவி இதற்கு விதிவிலக்கு)

10. மரணித்தவரின் எல்லா ஆடைகளையும் நீக்கி ஒரு துணித் துண்டினால் தேய்த்து கழுவ வேண்டும்.

11. ஆண் ஆண்களுடன் இருக்கும் போது மறைக்கவேண்டிய மற்றும், பெண் பெண்களுடன் இருக்கும் போது மறைக்கவேண்டிய உருப்புகளை மறைத்து அதில் கண்படாது, கைபடாது கவனமாக இருக்க வேண்டும்.

12. மையத்திடம் காணும் குறைபாடுகளை பகிரங்கப்படுத்தக்கூடாது.

13. குளிப்பாட்டுவதற்காக இறைவனின் திருப்பொருத்தத்தை தவிர கூலியை எதிர்ப்பார்க்கக்கூடாது.

14. குளிப்பாட்டியவர் குளித்துக்கொள்ளுதல் சுன்னத் ஆகும். (கட்டாயமல்ல)

15. குளிப்பாட்டும் முன்பு குளிக்கதேவையில்லை. கைகளை கழுவிக்கொண்டாலே போதும்.

இன்னும் பல விஷயங்களை அருகில் உள்ள மார்க்க அறிஞர்களைக் கேட்டுத் தெரிந்துக்கொள்ளுங்கள்.

நன்றி: COCG

Monday, November 28, 2005

காலியாகிறதா முஸ்லிம் ஓட்டு வங்கி?

கல்வி, வேலைவாய்ப்புத் துறைகளில் தங்களுக்கு தனி இடஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி முன் நகர்கிறது தமிழக சிறுபான்மை முஸ்லிம்களின் அரசியல். புதிதாக அரசியல் பட்டிருக்கும் முஸ்லிம் வாக்கு வங்கியின் விழிப்புணர்வாக இதை நாம் புரிந்து கொள்ளலாம். வர இருக்கின்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் முஸ்லிம் அரசியல் அமைப்புகள் தங்கள் கூட்டணி சீட்டு பேரத்திற்கு இந்த கோரிக்கையை துருப்புச்சீட்டாக பயன்படுத்த போகின்றன.

"கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பதற்கான சாத்தியக் கூறுகளை அரசு பரிசீலிக்கும்" என்று தமிழக முதலமைச்சர் கூறிய உடனேயே அதற்கு எதிரான கருத்துக்களை பத்திரிகைகள் கவனமாய் முக்கியத்துவப்படுத்துகின்றன. ராமகோபாலன், ராதாகிருஷ்ணன், இல.கணேசன் போன்றவர்கள் வெளியிடுகின்ற முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்கு எதிரான கருத்துக்களை முக்கியத்துவம் கொடுத்து வெளியிடுகின்றது இடஒதுக்கீட்டின் வழியாக மேலெழுந்து வந்த சமூகத்தின் பத்திரிகையான 'தினத்தந்தி'. 'கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் தங்கள் மத்தியில் தாழ்த்தப்பட்டோர் என்று ஒரு பட்டியலை வழங்க சம்மதிப்பார்களா? (இரா.சோமசுந்தரம் தினமணி அக்.23. 2005) என்று முஸ்லிம்கள் இடஒதுக்கீடு பெறுவதற்கு எதிரான தனது குரலை பதிவு செய்கிறது தினமணியின் அரசியல் அரங்கம். கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம் என்ற வட்டங்களைத் தாண்டி அதிகார அமைப்பில் சாதி, மத ரீதியாக ஒடுக்கப்பட்டோர்கள் பங்கேற்பதற்கான சமூக நீதி நடவடிக்கையே இடஒதுக்கீடு.

பொதுவாக இந்துத்துவ மயமான அரசியல், அறிவுத்தளங்களில் எதிர்ப்புகள் இருந்தாலும் இடஒதுக்கீடு குறித்து ஏதாவது ஒரு முடிவை அறிவித்தாக வேண்டிய நெருக்கடியில் தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இருகட்சிகளுக்கும் இருக்கின்றன.

சமீபத்தில் குமுதம் வார ஏடு தமிழக அரசியல் கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்தியது. அந்த கருத்துக் கணிப்பின்படி. தி.மு.க. தலைமையிலான ஏழு கட்சி கூட்டணிக்கும் அ.தி.மு.க.வுக்கும் இடையில் இருக்கின்ற வாக்கு வித்தியாசம் ஏழு சதவீதம் என்று பதிவாகி இருந்தது. இந்த சதவீத இடைவெளியை இட்டு நிரப்ப அ.தி.மு.க. தலைமை எல்லா தளங்களிலும் தன் வலையை விரித்துப் போட்டிருக்கிறது. சலுகைகள், நலத்திட்டங்கள், மாநாடுகள், கருணைத் தொகைகள் என்று அரசாங்கத்தின் அறிவிப்புப் பலகை புதிய புதிய செய்திகளைத் தாங்கி தமிழகம் முழுவதும் பவனி வருகிறது. அ.தி.மு.க.வுக்கு ஆதரவான சில அசைவுகளை இது பரவலாக உருவாக்கினாலும் மொத்தமாக ஒரு வாக்கு வங்கியை அ.தி.மு.க. குறிவைக்கிறது. அதற்கு ஏற்றதுபோல் முஸ்லிம் வாக்கு வங்கி இருக்கிறது. தமிழக அரசியல் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு கோரிக்கையை ஜெயலலிதா பரிசீலிப்பதாக தெரிவித்திருப்பது தனக்குத் தேவையான ஆதரவு வாக்குகளை மொத்தமாக பெறுவதற்குரிய அவரின் அரசியல் நடவடிக்கையே இது எனத் தெரிகிறது.

தமிழகத்தைப் பொறுத்தவரை முஸ்லிம்கள் நீண்ட நெடுங்காலமாக தி.மு.க.வுக்கே வாக்களித்து வந்திருக்கிறார்கள். எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை ஆரம்பித்த போதும் தி.மு.க.விலிருந்து முஸ்லிம் வாக்கு வங்கி பெரும்பாலும் அப்படியே இருந்தது. முஸ்லிம்களின் அரசியல் எதிரியான பாரதீய ஜனதா கட்சியுடன் தி.மு.க. கூட்டணி வைத்திருந்த போது அந்தத் தேர்தலில் தி.மு.க.வின் முஸ்லிம் வாக்குவங்கி அ.தி.மு.க.விற்கு ஆதராவாக திசை மாறியதே தவிர பெரிய அளவில் இதுவரையில் அ.தி.மு.க. முஸ்லிம் வாக்கு வங்கியை பெற்றிருக்கவில்லை.ஆனால் இந்த முறை இடஒதுக்கீட்டை முன்வைத்து நடத்தப்படும் சிறுபான்மை அரசியல் தி.மு.க.வுக்கு சில பின்னடைவுகளை முஸ்லிம் வாக்கு வங்கியில் உருவாக்குமோ என்ற எண்ணத்தைத் தோற்றுவிக்கிறது. 'முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும்' இதுதான் எங்கள் கோரிக்கை. கோரிக்கையை நிறைவேற்றுபவர்களுக்குத் தான் எங்கள் ஓட்டு (புதிய பார்வை செப்.16-30) என்று கூறுகிறார் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக மாநிலத் தலைவர் போ.ஜவாஹிருல்லா.

"முன்பு ஒருமுறை கமுதி பஷீர் (தேசியலீக்) நடத்திய நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய கலைஞர் கமுதி பஷீரின் கோரிக்கையான இடஒதுக்கீடு குறித்து தனது அரசாங்கம் சட்ட வல்லுனர்களை கலந்தாலோசித்து நிச்சயம் ஆவனச் செய்யும் என்று உறுதி அளித்தார். அங்கு கூடியிருந்த மக்கள் மகிழ்ச்சியுடன் கைத்தட்டினார்கள். ஆனால் அவர் (கருணாநிதி) தனது ஆட்சிக் காலத்தில் முஸ்லிம்களின் இடஒதுக்கீடு விஷயமாக ஒரு துரும்பைக் கூட எடுத்துப் போடவில்லை" (சமநிலைச் சமுதாயம்-அக்.2005) என்று நேரடியாக குற்றம் சுமத்துகிறார் கருணாநிதியின் நெருங்கிய நண்பரும் வர்த்தக பிரமுகர்களில் ஒருவருமான ஏ.வி.எம். ஜாபர்தீன். இந்த வெளிப்பாடுகள் எல்லாம் தி.மு.க.வுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் ஏற்பட்டிருக்கும் உரசல்களின் வெளிப்பாடுகள்.

'தி.மு.க.வின் முஸ்லிம் வாக்கு வங்கி பலகீனப்பட ஆரம்பித்து பத்து பதினைந்து வருடங்கள் ஆகிவிட்டன' என்கிறார் த.மு.மு.க.வின் மாநிலச் செயலாளர் தமீம் அன்சாரி. 1991-ல் பா.ம.க.வுடன் பழனிபாபா கூட்டணி உருவாக்கிய காலம் தொட்டுத் தொடங்கியது இந்த சரிவு. கோவைப் படுகொலையில் அன்றைய தி.மு.க. தலைமையிலான தமிழக அரசு நடந்து கொண்டது, பாரதீய ஜனதாவுடன் கூட்டணி வைத்துக் கொண்டது என்ற தி.மு.க.வின் அசைவுகள் ஒவ்வொன்றும் முஸ்லிம்களை கொஞ்சம் கொஞ்சமாக தி.மு.க.விடமிருந்து விலகிச் செல்ல வைத்திருக்கின்றன என்றார் அவர்.

ஆனால் 'கலைஞரை நம்பலாம். கலைஞரிடமிருந்து முஸ்லிம்கள் அன்னியப் படவில்லை' என்கிறார் முஸ்லிம் லீக் மாநிலச் செயலாளர் டாக்டர் சையது சத்தார்.

"புதிதாக வாக்களிக்கத் துவங்கியிருக்கும் முஸ்லிம் இளைய தலைமுறையும், இந்தத் தேர்தலில் முதன் முதலாக வாக்களிக்க இருக்கின்ற புதிய முஸ்லிம் இளைஞர்களும் தி.மு.க. மீதான நம்பிக்கை எதையும் வைத்திருக்கவில்லை. வேறு மாற்று எதுவும் இல்லாத சூழலில் இந்த புதிய தலைமுறை முஸ்லிம் வாக்காளர்களின் ஓட்டு அ.தி.மு.க.வுக்குத்தான் சாதகமாக அமையும்" என்கிறார் வஞ்சிக்கப்பட்டோர் அமைப்பின் பொறுப்பாளர் கே.எம்.ஷரீப்.

ஆயிரம் ஆண்டுகாலம் தமிழ்ச் சமூகத்தின் பண்பாடு, வாழ்வியல், பொருளாதார ஓட்டங்களுடன் தங்களை ஒன்றிணைத்து வாழ்ந்த தமிழக முஸ்லிம்கள் சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் அரசியல் மயப்பட்டார்கள். தமிழ்ச் சூழலில் பார்ப்பனியத்திற்கு எதிரான, இந்துத்துவத்திற்கு எதிரான போரை பெரியார் தொடங்கிய போது அவரோடு முஸ்லிம் சமூகம் அரசியல் களத்தில் தன்னை இணைத்துக் கொண்டது. பெரியார் முன்னெடுத்துச் சென்ற சமூக நீதிப் போராட்டத்தில் இந்து மதத்தில் இருக்கும் தீண்டாமையிலிருந்து ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலை பெற இஸ்லாத்தை முன்வைத்தார். இனஇழிவு நீங்க இஸ்லாமே நன்மருந்து என்ற கோசம் முன் வைக்கப்பட்டது. இஸ்லாம் குறித்த சில சின்னச் சின்ன விமர்சனங்களுக்கு அப்பால், இஸ்லாமிய சமூகத்தோடு பெரியார் கொண்டிருந்து உறவு வலுவானதாகவும் கொள்கை ரீதியானதாகவும் இருந்தது.

பார்ப்பன எதிர்பபு, தீண்டாமை ஒழிப்பு, பெண்விடுதலையின் சில அம்சங்கள் உள்ளிட்ட பல புள்ளிகள் பெரியாரும் முஸ்லிம்களும் சந்திக்கும் முக்கிய சந்திகளாக இருந்தன. இறுதிவரை இந்தக் கொள்கை ரீதியான உறவு பெரியாருக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் வலுவாகவே இருந்தது. பெரியாரிடமிருந்து விலகி தி.மு.க. உருவாகி அதன் முதல் பத்து ஆட்சி ஆண்டுகள் இந்த உறவை தி.மு.க. வைத்திருந்தது. ஆனால் 1980களுக்குப் பின்னால் தி.மு.க.வின் செயல்பாடுகள் தி.மு.க.வின் மேட்டுக்குடி வாக்குகள், கருணாநிதியின் குடும்பம் என்ற சூழலுக்குள் சிக்கிக் கொண்டன.

தலித் மக்கள், சில இடைநிலைச் சாதிகள், முஸ்லிம்கள் என காலம் காலமாக தி.மு.க.விற்கு வாக்களித்து வந்த வாக்கு வங்கிகள் குறித்த அக்கறையோ அவர்கள் முன்னேற்றத்திற்கான எவ்வித செயற்திட்டங்களோ தி.மு.க.வினால் உருவாக்கப் படவில்லை. 70களில் உருவான மதுரை வஃக்பு வாரிய கல்லூரியை தவிர வேறு எந்த சொல்லிக் கொள்ளும்படியான நடவடிக்கைகளையும் முஸ்லிம்களுக்காக தி.மு.க. மேற்கொள்ளவில்லை. இந்தக் காலகட்டத்தில் முஸ்லிம் தலைமைகளும் தி.மு.க.வின் மீது நிர்பந்தம் எதையும் தங்கள் சமூகத்திற்காக கொடுக்கவில்லை என்பதும் கவனத்திற்குரியது. இதே காலகட்டத்தில் இடை நிலை சமூகங்களில் ஒன்றான நாடார் சமூகம், மற்றொரு சிறுபான்மை சமூகமான கிறிஸ்தவ சமூகம் இரண்டும் கல்வி, தொழில் இதர பொருளாதார நடவடிக்கைகளில் தங்கள் சமூக நலன்கள் சார்ந்து செயல்பட்டு ஓரளவு வெற்றியும் பெற்றன என்பதும் உண்மையே. ஆனால் முஸ்லிம் சமூகத் தலைமை இத்தகைய சமூகம் சார்ந்த அக்கரையுடன் செயல்படவில்லை என்பதும், இப்பொழுதும் கூட இந்த இடஒதுக்கீட்டுக்கான குரலில் சட்டமன்ற தேர்தலில் கூடுதல் பேரம் கேட்கக் கூடிய தொனி வெளிப்படுகிறது என்பதையும் நாம் புரிந்து கொள்ள முடிகிறது.

அதிகாரத்திற்கான எல்லா சமரசங்களுக்கும் கருணாநிதி தயாராகிய காலகட்டம் அது. ஆண்டு தோறும் காயிதேமில்லத் நினைவிடத்தில் மரியாதை செய்வது, நோன்பு காலத்தில் முஸ்லிம் கனவாண்களுடன் அமர்ந்து கஞ்சி குடிப்பது, சிறுபான்மையினரை ஒழிப்பது என் பிணத்தின் மீதுதான் நடந்தேறும் என வசனம் பேசுவது என்ற எல்லையுடன் கருணாநிதியின் முஸ்லிம் ஆதரவு நடவடிக்கைகள் நின்று போயின. முஸ்லிம்களை வெறும் வாக்கு வங்கியாக மட்டுமே தி.மு.க. மதிப்பிட்டதின் வெளிப்பாடு இது. திராவிட இயக்கத்தின் கடைசி கண்ணியமாக இருக்கக்கூடிய கருணாநிதி பி.ஜே.பி.யுடன் கூட்டணி வைத்துக் கொண்டதை நாம் இப்படித்தான் புரிந்து கொள்ள முடியும்.

ஒரு பத்தாண்டுகளுக்கு முன்னால் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கருணாநிதியின் செயலை இராமகோபலான் விமர்சித்த போது, 'வேண்டுமானால் இராமகோபாலன் கூப்பிடட்டும் விநாயகர் சதுர்த்திக்குப் போய் கொளுக்கட்டை சாப்பிடுறேன்' என்று கருணாநிதியால் தயக்கமின்றி கூறமுடிந்தது.

இப்தார் நோன்பு திறப்பு, விநாயகர் சதுர்த்தி இரண்டும் பண்பாட்டு தளங்களில் அரசியல் படுத்தப் பட்டவைகள். பார்ப்பன எதிர்ப்பு, தீண்டாமை ஒழிப்பு, சமூகநீதி என்ற பொது கருத்தியலில் பார்ப்பனரல்லாதவரும் சிறுபான்மையினரும் ஒன்றிணைகிற அரசியல் பண்பாட்டு இணைப்பின் குறியீடாக இப்தார் இருக்கிறது. பார்ப்பன அதிகாரத்தை மீண்டும் நிறுவுவதற்காக ஏற்படுத்தப்பட்ட பண்பாட்டு நடவடிக்கையாக விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன.

இந்த இரண்டையும் ஒரே தரத்தில் அணுகுவது என்ற கருணாநிதியின் பார்வை அவரது கொள்கைரீதியான பலவீனத்தையே காட்டுகிறது. இந்த சிக்கல்களுடனேயே இடஒதுக்கீடு குறித்த அரசியலில் முஸ்லிம்களின் அணிசேர்க்கை தி.மு.க.வுக்கு எதிராக மாறுகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டியதிருக்கிறது. முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை தரும் பட்சத்தில் முஸ்லிம் வாக்குகள் அ.தி.மு.க.வுக்கு போவது உறுதி என்கிறார் தேசிய லீக்கின் மாநிலத் தலைவர் பஷீர் அகமது. ஆனால் 'கலைஞரை நம்பலாம் ஜெயலலிதாவை நம்பமுடியாது. கலைஞர் என்பது ஏழுகட்சி கூட்டணி. எனவே அவர் தமிழகம் மட்டுமல்ல அகில இந்திய முழுமைக்கும் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு குறித்த சட்டத்தைக் கொண்டு வரமுடியும். ஜெயலலிதா ஒவ்வொரு நேரத்திலும் ஒரு அவதாரம் எடுப்பார். அதில் ஒரு அவதாரம் தான் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு தொடர்பாக அவரது கருத்தும்' என்கிறார் முஸ்லிம் லீக்கின் சையது சத்தார்.

இடஒதுக்கீடு கோரிக்கை விசயத்தில் முஸ்லிம் லீக்கைத் தவிர பிற முஸ்லிம் அமைப்புகள் எல்லாம் ஒரே அணியில் நிற்கின்றன என்று தெரிகிறது. தமிழ்மாநில ஜமாஅத்துல் உலமா, இந்திய தேசியலீக், த.மு.மு.க., தவ்கீத் ஜமாஅத் என பலதரப்பட்ட முஸ்லிம் அமைப்புகளின் குரல்கள் சேர்ந்தே ஒலிக்கின்றன. 'நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் ஜே.எம். ஹாரூன் தலைமையில் கலைஞர் முதல்வராக இருக்கும் போது தமிழ்நாடு முஸ்லிம் ஐக்கிய ஜமாஅத் சார்பாக முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு கோரிக்கை வைக்கப்பட்ட போது கலைஞர் (அப்போது அவர் முதல்வர்) அதைத் தரமுடியாது என்று மறுத்தார். இப்பொழுது தேர்தல் அறிக்கையில் சேர்ப்போம் என்கிறார்' என்று பழைய சம்பவத்துடன் நினைவு படுத்திக் கூறுகிறார் கொடிக்கால் சேக் அப்துல்லா. ஆனாலும் ஜெயலலிதாவை விடவும் கருணாநிதியை நம்பலாம் என்கிறார் கொடிக்கால். ஜெயலலிதா பரிசீலிக்கலாம் என்றுதான் கூறிஇருக்கிறார். உச்சநீதிமன்ற தீர்ப்பு அதன் பிறகு பரிசீலித்தல் என்ற வார்த்தையே காலம் தாழ்த்தும் முயற்சி தான் என்பது அவர் மதிப்பீடு.

இடஒதுக்கீடு கிடைக்காமல் போனதற்கு கலைஞர்தான் காரணம் என்று கூறுகிறார் த.மு.மு.க.வின் தமீம் அன்சாரி. காலம் காலமாக வாக்களித்த முஸ்லிம்களுக்கு கலைஞர் எதுவும் செய்யவில்லை. எனவே தி.மு.க.வின் முஸ்லிம் வாக்குகள் ஜெயலலிதா இடஒதுக்கீடு வழங்கும் போது அ.தி.மு.க.வுக்கு திரும்புவது தவிர்க்க முடியாதது என்கிறார் அவர்.

இடஒதுக்கீடு குறித்த விவாதங்கள் தீவிரமடைந்து இருக்க அப்படி கொடுத்தாலும் இதனால் பெரிய பலன்கள் எதுவும் ஏற்படப் போவதில்லை என்ற கருத்தும் இருக்கிறது. மத்திய மாநில அரசுகள் வேலைக்கு ஆள் எடுப்பதையே பல ஆண்டுகளாக நிறுத்திவிட்ட சூழலில் இப்பொழுது இடஒதுக்கீடு பெறுவது என்பது பெரிய பலன் எதையும் தந்துவிடாது என்கிறார் கே.எம். ஷரீப். இது ஒரு பத்தாண்டுகளுக்கு முன்னால் கிடைத்திருந்தால் பலன் இருந்திருக்கும் என்பது அவரது பார்வை. "இடஒதுக்கீடு என்ற கோரிக்கையை விடவும் முஸ்லிம்கள் முன்னேற்றத்திற்கான பல்வேறு நலத்திட்டங்களை தேர்தல் அறிக்கையில் சேர்க்க வைப்பதே இன்றைக்குத் தேவையானது" என்கிறார் கொடிக்கால் சேக் அப்துல்லா. முஸ்லிம்கள் எந்தத் துறைகளில் கவனம் செலுத்துகிறார்கள் என்பதைக் கண்டறிந்து அதை முன்னேற்றுவதற்கோ, அந்தத்துறை சார்ந்த நலன்களை பாதுகாப்பதற்கோ, அந்த துறைக்கான நிதிகளை அரசிடம் இருந்து பெறுவதற்குரிய உத்தர வாதங்களைப் பெற அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கையில் சேர்க்கச் சொல்லி முஸ்லிம் அமைப்புகள் நிர்ப்பந்திக்க வேண்டும் என்கிறார் கொடிக்கால் சேக் அப்துல்லா.

இடஒதுக்கீடை மையப்டுத்தி முஸ்லிம் அமைப்புகளிடமும், புதிதாக வாக்காளர்களாக உருவாகி இருக்கும் முஸ்லிம் வாக்காளர்களிடமும் ஏற்பட்டிருக்கும் அசைவுகளைப் புரிந்து கொண்டு அதனை தனக்கு சாதகமான சக்தியாக மாற்றுவதில் கருணாநிதியை விடவும் ஜெயலலிதா முந்திவிட்டார் என்றே தெரிகிறது. 69% இடஒதுக்கீடு வழக்கு தீர்வுக்கு வந்த பிறகு தான் முழுமையான இடஒதுக்கிடு குறித்து பரிசீலிக்கப்படும் என்ற ஜெயலலிதாவின் கருத்தோடு, அதுவரையிலும் தற்காலிகமாக எம்.பி.சி. (மிகவும் பிற்படுத்தப் பட்டவர்கள்)க்குரிய இடஒதுக்கீட்டிலிருந்து சில சதவீதங்களைத் முஸ்லிம்களுக்கு வழங்கலாம் என்று தெரிகிறது.

அப்படி வழங்கும் பட்சத்தில் ஒரு அறிவுப்பு வந்தால் முஸ்லிம் வாக்கு வங்கி அ.தி.மு.க.வின் பக்கம் நகர்வதை கருணாநிதியால் தடுத்து நிறுத்த முடியாது. பாராளுமன்ற தேர்தலைப் பொறுத்தவரை பாரதீய ஜனதா என்ற எதிரியை வீழ்த்தவே காங்கிரஸ் கூட்டணி, தமிழகத்தில் தி.மு.க. தலைமை இவற்றை முஸ்லிம்கள் ஏற்றுக் கொண்டார்கள் என்பது வரலாற்று உண்மை. வெறும் மதச்சார்பின்மை மட்டும் தங்கள் வாழ்க்கையை மேம்படுத்திவிடாது என்ற அனுபவ அரசியலின் அடுத்த நகர்வுதான் இடஒதுக்கீடு கோரிக்கை. இந்த நகர்வுகள் முஸ்லிம் சமூகத்தின் பொருளாதாரம், சமூகம், பண்பாடு என பல தளங்களில் விரிவடைய வேண்டிய காலத் தேவை இருக்கிறது. அப்படி விரிவடையும் போதுதான் அரசியல் அரங்கில் அவர்கள் குரல் இன்னும் கவனமாக பரிசீலிக்கப்படும். ஏற்கனவே தலித் மக்கள், இடைநிலை சமூகங்கள் குறிப்பாக வன்னியர்கள், தேவர்கள், நாடார்கள் என்று தனது வாக்குவங்கிகள் ஒவ்வொன்றாக தி.மு.க. இழந்துவரும் சூழலில் முஸ்லிம் வாக்குவங்கியும் கைநழுவிப்போவது கருணாநிதிக்கு ஆரோக்கியமான ஒன்றல்ல.

நன்றி: புதியகாற்று - மாதஇதழ் (நவம்பர் 2005)

Wednesday, November 16, 2005

நோய் நிவாரணம்

வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதனும் பலவிதமான நோய்களை சந்திக்கின்றோம். நோய்க்கு ஆட்படாதவர்கள் இந்த உலகத்தில் காணவே முடியாது. நபிமார்கள் கூட நோயுற்றிருக்கின்றார்கள் என்பதை குர்ஆனின் மூலமும், வரலாறுகள் மூலமும் நாம் காண முடிகின்றது. நோயிற்றிருக்கும் போது நமது நம்பிக்கையை எப்படி அமைத்துக்கொள்ள வேண்டும். நமது நடவடிக்கைகளை எப்படி அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்கு இஸ்லாம் காட்டிய வழிமுறையை தெரிந்துகொள்ள இருக்கின்றோம்.

இந்த நோய் என்பது மனிதனை பண்படுத்துவதற்காக அல்லாஹ்வினால் கொடுக்கப்படுகின்ற ஒரு எச்சரிக்கை. நோய் போன்ற துன்பங்கள் மனிதனுக்கு வருவதில்லை என்றால் முழுக்க முழுக்க கடவுள் மறுப்பாளனாக திகழ வாய்ப்பிருக்கிறது. பெரும்பாளானவர்கள் நோய் வந்து படுக்கையில் கிடக்கும் போதுதான் தனக்கு மிஞ்சிய ஒரு சக்தி (கடவுள்) இருக்கின்றான் என்பதை உணருகிறான்.

எத்தனையே பகுத்தறிவு வாதம் பேசியவர்களெல்லாம் நோய் நொடிகளுக்கு ஆட்படும்போது பிரசாதங்களை நோக்கி ஓடக்கூடிய காட்சிகளை பார்க்கின்றோம். கடவுள் நம்பிக்கை என்பது நோய் வரும் பொழுது மாத்திரம் மனிதனுக்கு ஞாபகத்திற்கு வருகின்றது. இந்த உலக வாழ்க்கையில் மூழ்கிபோய் அல்லாஹ்வை மறக்கும் மனிதர்களை இறைவன் தன் கடிவாளத்தை போட்டு சுண்டி இழுத்து "நீ ஒரு பலகீனமானன், நான் நினைத்தேன் என்றால் ஒரே இழுப்போடு உன் கதையை முடித்துவிடுவேன். ஒழுங்கா இருந்துக்கொள். கவனமாக உன்னுடைய வாழ்க்கையை அமைத்துக்கொள்" என்று சொல்கிறானோ என்று தோன்றுகிறது.

நோயாளிகள் அந்த வாய்ப்பை நன்மைகளை கொள்ளையடிக்க கூடிய வாய்ப்பாக பயன்படுத்தி கொள்ளலாம். கவனக்குறைவாக இருந்துவிட்டால் இந்த நோயே பகிரங்கமான வழிகேட்டில் இணைவைப்பில் தல்லக்கூடிய நிலைமையும் ஏற்பட்டுவிடும்.

"மருத்துவம் செய்யுங்கள். எல்லா நோய்களுக்கும் மருந்து இருக்கின்றது" என்பது நபிவழி. இஸ்லாமிய மார்க்கம் நோய் வந்தவுடன் கடவுள் இருக்கின்றான் பார்த்துகொள்வான் என்று படுத்து கிடக்கக் கூடிய சித்தாந்தத்தைச் சொல்லவில்லை.

நோய் சடங்குகளை நோக்கியும் மூட நம்பிக்கைகளை நோக்கியும் நம்மை இழுத்துசெல்லும் ஆற்றலுடையது. நோய் வந்தவுடன் ஒரு டாக்டரிடம் செல்வோம், குணமாகவில்லை என்றால் வேறு டாக்டரிடம் செல்வோம். அப்போதும் குணமாகவில்லை என்றால் உடனே ஷைத்தான் வருவான். மனித ஷைத்தான்களை அனுப்பி இது நோய் இல்லை. நோயாக இருந்தால் இவ்வளவு நாளில் குணமாகியிருக்கும். என்னமோ உனக்கு மருந்து மாயம் செய்திருக்கிறார்கள் என்று பயத்தை உண்டாக்கி அதற்கு பறிகாரங்களை சொல்லுவார்கள்.

பாக்டரிடம் போன உடன் தலைவலி நின்றுவிட்டால் தப்பித்தோம். இல்லையென்றால் நோய்பட்ட நிலையில் பலவீனமாக இருப்போம். எங்கிருந்து எது கிடைத்தாலும் பிடித்துகொள்ள கூடிய நிலையில் இருப்போம் கடலில் மூல்க போகிறவனுக்கு ஒரு துரும்பு கிடைத்தாலும் அதை பிடித்துகொண்டு ஏறிவிடலாமா என்று நினைப்பான். அது துரும்பு என்று அந்த நேரத்தில் தெரியாது. அதே போல் நோயாளிக்கு "தாயத்து போடு, தட்டு எழுதி கரைத்து குடி, தர்காவில் 10 நாளைக்கு படு, வேப்பிளை அடித்து பார்" என்று துரும்புகளை அள்ளிப்போடுவார்கள்.

மருத்துவம் செய்து விட்டு யா!அல்லாஹ் இந்த துன்பத்தை, உன்னுடைய விதியை நான் பொருந்திக் கொள்கின்றேன் என்று நினைக்கும்போது நன்மையை அடைக்கின்றான். மருத்துவத்தை தாண்டி மார்க்கம் காட்டாத வேறு வழிகளில் போகும் பொழுது தான் ஈமானை பரிகொடுக்கும் நிலமைக்கு மனிதன் தள்ளப்பட்டு விடுகின்றான்.

நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள். எவர் தாயத்தை தொங்கவிடுவாரோ அவர் அல்லாஹ்வுக்கு இணைவைத்து விட்டார்.

அல்லாஹ் தன் திருமறையில்:

நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைக்கப்படுவதை மன்னிக்கவே மாட்டான். இதனைத் தவிர மற்ற எதனையும் தான் நாடியோருக்கு மன்னிப்பான். எவர் அல்லாஹ்வுக்கு இணைவைக்கின்றாரோ அவர் திட்டமாக மகத்தான பாவத்தை பொய்யாகக் கற்பனை செய்துவிட்டார். (4:48) என்று கூறுகிறான்.

இன்னொரு ஹதீஸில், (ஷிர்க்கான வார்த்தைகளை கூறி)மந்திரித்தல், தாயத்துகள், (ஏலஸ்கள் கட்டுதல், தாவீசுகள்)திவலாக்கள் ஆகியவையெல்லாமே ஷிர்க்காகும் என அல்லாஹ்வின் தூதர் கூற நான் செவியேற்றேன். அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத்(ரலி) நூல்: அஹ்மத், அபூதாவூத்

அதனால் எந்த ஒரு கட்டத்திலும் எவ்வளவு நோய் நொடிகளுக்கு ஆட்பட்டாலும் தாயத்து கட்டுவதற்கு மார்க்கத்தில் அனுமதி இல்லை.

வேறு என்னசெய்யலாம் என்றால்,

அபுஸயீதுல் குத்ரி(ரலி) அவர்கள் ஒரு கூட்டத்தினரோடு வெளியூருக்கு போகின்றார்கள். ஒரு கிராமத்தில் போய் தங்குகிறார்கள். அங்கே சாப்பாடு(விருந்து கேட்கிறார்கள்). அதற்கு அந்த கிராமத்தில் உள்ளவர்கள் கொடுக்கவில்லை. அந்த காலத்தில் விருந்து கொடுக்க மறுப்பது பெரிய குற்றம். எழுதப்படாத ஒரு ஒப்பந்தமாக அரபு நாட்டில் இருந்தது. அந்த நேரம் பார்த்து அந்த கூட்டத்தின் தலைவனுக்கு தேள் கொட்டிவிட்டது. தேள் கொட்டியவுடன் இவர்களிடம் வருகிறார்கள். உங்களிடம் ஏதாவது மருந்து இருக்கின்றதா என்று கேட்கிறார்கள். விருந்து தர மறுத்து விட்டார்கள் இவர்களை சும்மா விடக்கூடாது என்பதற்காக அபுஸயீதுல் குத்ரி(ரலி) அவர்கள் "30ஆடு கொடுத்தால் வைத்தியம் பண்ணுவேன்" என்கிறார். அவர்கள் அதற்கு ஒத்துக்கொண்டார்கள். அபுஸயீதுல் குத்ரி(ரலி) அவர்கள் அல்ஹம்து சூராவை ஓதுகிறார்கள். அல்ஹம்து சூரா ஓதியவுடன் விஷம் இறங்கிவிட்டது. சொன்னபடி கொடுத்துவிட்டார்கள் இருந்தாலும் நபித்தோழர்களுக்கு பெரிய சந்தேகம் எப்படி இந்த ஆட்டை சாப்பிடுவது நபியவர்களிடம் கேட்க வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள். நபியவர்களிடம் இந்த சம்பவத்தை சொன்னவுடன் அல்ஹம்து சூரா ஒரு நோய் நிவாரணி என்பது உனக்கு எப்படி தெரியும் என்றார்கள். (நூல்: புகாரி)

அதேபோல் நபியவர்கள் நோயாளியாகிவிட்டார்கள் என்றால் "குல் அவூது பிரப்பின்னாஸ், குல் அவூது பிரப்பில் ஃபலக்" இந்த இரண்டு சூராக்களையும் ஓதுவார்கள். ஓதமுடியவில்லை என்றால் ஓத முடிந்தால் ஓதிவிடுவார்கள் ஓத முடியாத அளவுக்கு நோய் இருக்கும் பொழுது நான் ஓதுவேன் என்று ஆயிஷா(ரலி) அவர்கள் சொல்கிறார்கள். நான் ஓதி அவர்கள் கையில் ஊதி அவர்களுடைய கையை கொண்டே உடம்பில் தடவி விடுவேன் என்று ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்: முஸ்லிம்)

இதில் நாம் என்ன விளங்குகிறோம் என்றால் அல்ஹம்து சூரா, குல் அவூது பிரப்பின்னாஸ், குல் அவூது பிரப்பில் ஃபலக் இந்த மாதிரியான சில சூராக்களை நோய் வரும்பொழுது ஓதினோம் என்றால் அல்லாஹ் நிவாரணம் தருவான்.

ஆனால் இந்த ஓதி பார்த்தல் என்பது அதை தொழிலாக செய்வதா? ஒருவரை ஓதுவதற்காக நியமித்து கொண்டு அவரிடம் போவதா என்றால் அப்படி செய்வதற்கு மார்க்கத்தில் அனுமதி இல்லை. அவரவர் தான் ஓதிகொள்ள வேண்டும். மற்றவர்கள் எப்போது ஓதலாம் என்றால் ஆயிஷா(ரலி) அவர்களின் ஹதீஸில் இதற்கு விளக்கம் இருக்கின்றது. நபியவர்கள் நோய்வாய் பட்டார்களானால் அவர்களே ஓதிகொள்வார்கள். ஓத முடியாத போது மற்றவர்களை ஓத சொல்லவேண்டும்.

ஆனால் நாம் ஊர்களின் என்ன செய்கிறோம். எல்லோருக்கும் அல்ஹம்து சூரா ஓத தெரியும். உடல்நிலை சரியில்லை என்றால் நம்மால் ஓதிகொள்ள முடியும் அந்த நிலையில் இருக்கும் போதும் ஓதுவதற்கென்று ஒரு ஆளை நியமித்து அவர் ஓதினால்தான் குணமடையும் என்கிறபோது ஓதக்கூடிய அந்த ஆளுக்குதான் வெயிட் கொடுக்கின்றோம்.

இது மாத்திரம் அல்லாமல் நோயான நேரத்தில் கேட்கக்கூடிய சில பிரார்த்தனைகளையும் நபி(ஸல்) நமக்கு கற்றுகொடுத்திருக்கிறார்கள்.

ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நபி(ஸல்) அவர்கள் தங்கள் குடும்பத்தினரில் சிலரின் உடல் நலத்தை விசாரிப்பார்கள். அப்பொழுது தங்கள் வலது கரத்தை அந்நோயாளியின் மீது தடவி, அல்லாஹும்ம ரப்பன்னாஸ், அத்ஹிபில் பஃஸ இஷ்பி அன்தஷ்ஷாஃபீ லா ஷிபாஅ இல்லா விபாவுக ஷிபாஅன் லாயுஹாதிரு ஸக்மா

(பொருள்: இறைவா! மக்களின் இரட்சகனே! கஷ்டத்தை போக்கிவைப்பாயாக! நோயைவிட்டு குணமளிப்பாயாக! நீயே குணமளிப்பவன். உன் குணமளித்தலைத் தவிர வேறு குணமளித்தல் கிடையாது. அது எந்த நோயையும் விட்டு வைக்காது)

என்று கூறுவார்கள். நூல்: புகாரி, முஸ்லிம்


அபூ அப்தில்லாஹ் உத்மான் பின் அபில் ஆஸ்(ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கப்படுகிறது. அவர்கள் ஒருமுறை நபி(ஸல்) அவர்களிடம் தம் உடலில் ஏற்படும் வலியைப் பற்றி முறையிட்டார்கள். அதற்கு அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். "உம் உடலில் வலிக்கின்ற இடத்தில் உம் கரத்தை வைப்பீராக! பிஸ்மில்லாஹ் என மூன்று முறை கூறுவீராக! மேலும் "அவூது பிஇஜ்ஜதில்லாஹி வகுத் ரதிஹி மின்ஷர்ரி மாஅஜிது வவுஹாதிரு

(பொருள்: அல்லாஹ்வின் கண்ணியத்தையும், சக்தியையும் கொண்டு நான் அடையும் வேதனையின் தீங்கை விட்டும், நான் பயப்படும் விஷயங்களின் தீங்கை விட்டும் நான் பாதுகாவல் தேடுகிறேன்)

என்று ஏழுமுறை கூறுவீராக! நூல்: முஸ்லிம்.

மேற்கண்ட துஆக்கள் எல்லாம் யாருக்கு நோய் ஏற்பட்டிருக்கிறதோ அவரும் இந்த துஆயை ஓதலாம். உடல்நலம் விசாரிக்க போகிறவரும் அவருக்காக இந்த துஆவை ஓதலாம். இன்னொரு துஆ.

இன்னொரு ஹதீஸில், நபி(ஸல்) அவர்கள் சொன்னதாக அப்துல்லாஹ் பின் அப்பாஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். மரணத்தின் அறிகுறிகள் தென்படாத ஒரு நோயாளியை ஒருவர் உடல் நலம் விசாரித்து அப்பொழுது, அஸ் அலுல்லாஹல் அளீம், ரப்பல் அர்ஷில் அளீம் அன்யஷ்பியக

(பொருள்: மிகப்பெரியவனான, மாபெரும் அர்ஷின் அதிபதியான அல்லாஹ்விடம் உம்மைக் குணப்படுத்தும்படி கேட்கிறேன்) என்று ஏழுமுறை ஓதுவாரேயானால் அல்லாஹ் அவரை அந்த நோயிலிருந்து குணப்படுத்தியே தவிர வேறில்லை). நூல்: அபூதாவூத், திர்மிதி

நாம் ஒருவரை உடல்நலம் விசாரிக்க சென்றால் இந்த துஆக்களை ஓதினால். அல்லாஹ் நிவாரணம் தருவான். இதற்கு மார்க்கத்தில் அனுமதி இருக்கிறது.

பிறகு நமக்கு நோய் வந்து சிலருக்கு டாக்டர் சொல்லிவிடுவார்கள் இதற்கு மேல் ஒன்றும் செய்யமுடியாது. மரணத்தின் நிலையை எட்டிவிட்டோம் என்று தெரிந்தால் அந்த நேரத்தில் நிவாரணத்தை கேட்க முடியாது. ஏனென்றால் அல்லாஹ் குர்ஆனின் அவருக்கு நேரம் வந்துவிட்டது என்றால் கொஞ்ச நேரம் முந்தவும் மாட்டாது, பிந்தவும் மாட்டாது என்று கூறுகின்றான். அந்த நேரத்தில் நபியவர்கள் என்ன துஆ கேட்டார்கள் என்றால்,

ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நபி(ஸல்) அவர்கள் (தங்கள் மரணத்திற்கு முன் ஏற்பட்ட நோயின் பொழுது ஒரு முறை) என் மீது சாய்ந்தவர்களாக, அல்லாஹும்மஃபிர்லீ வஅர்ஹம்னீ வல்ஹிக்னீ பிர் ரஃபீகில் அஃலா

(பொருள்: இறைவா! என் மீது கருணை காட்டுவாயாக! என் பிழைகளை மன்னிப்பாயாக! மேலான நண்பனின் பக்கம்(உன் பக்கம்) என்னை சேர்த்தருள்வாயாக!)

என கூறியதை நான் செவிமடுத்துள்ளேன். நூல்: புகாரி, முஸ்லிம்.

இன்னொரு ஹதீஸ், ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நபி(ஸல்) அவர்களின் மரணவேளையில் அவர்களின் அருகே ஒரு தண்ணீர் செம்பு வைக்கப்பட்டிருந்தது. அதனுள் நபி(ஸல்) அவர்கள் தங்கள் கரத்தை விட்டுத் தண்ணீர் எடுத்து அதனைத் தங்கள் முகத்தில் தடவிக்கொள்வார்கள். பிறகு அல்லாஹும்ம அஇன்னீ அலா ஹமராதில் மவ்தி, வஸகராதில் மவ்த்

(பொருள்: இறைவா! மரணத்தின் வேதனைகளின் பொழுதும் மரணத்தின் ஸகராத் எனும் மயக்கங்களின் பொழுதும் நீ எனக்கு உதவி செய்வாயாக!)

என்று கூறுவார்கள். இதனை நான் பார்த்துள்ளேன். நூல்: திர்மிதி

மரணத்தின் நிலையை எட்டிவிட்டவர்கள் அதிகம் துஆ செய்யவேண்டும். ஒருவருக்கு உடல் நலம் சரியில்லை என்றால் நாம் உடல்நலம் விசாரிக்க செல்லவேண்டும். இது நபியவர்களுடைய சுன்னத். அவருக்காக துஆ செய்ய வேண்டும்.

இன்னொரு ஹதீஸில், அலீ(ரலி) அவர்கள் கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள் கூற நான் செவிமடுத்துள்ளேன். ஒரு முஸ்லிம் தம் சகோதரரை காலையில் உடல்நலம் விசாரித்தால், அன்று மாலை வரை அவருக்காக எழுபதாயிரம் மலக்குகள் துஆச் செய்வார்கள். அவரை மாலையில் உடல்நலம் விசாரித்தால், மறுநாள் காலை வரை எழுபதாயிரம் மலக்குகள் அவருக்காக துஆச் செய்வார்கள். அவருக்கு சுவனத்தில் பறித்த பழங்கள் கிடைக்கும். நூல்: திர்மிதி

எனவே அன்பு சகோதர சகோதரிகளே!
இறைவன் எவ்வழியில் நோய்நிவாரணம் தேட அனுமதித்திருக்கிறானோ அவ்வழியில் முயன்று ஈருலக வெற்றியை பெறுவோமாக.

தொகுப்பு: உம்மு உமர்

Wednesday, October 19, 2005

இதழியல் கல்வி

தமிழில் இதழியல் வழிகாட்டி நூல்கள் போதிய அளவில் இல்லை. அப்படி இருக்கும் நூல்களும் அத்துறையில் ஏற்பட்ட நவீன வளர்ச்சியை உள்ளடக்கியதாக இல்லை. இக்குறையைப் போக்க சமீபத்தில் இரு நூல்கள் வந்துள்ளன. ஒரு நூலை எழுதியவர் சன் டிவியின் செய்திப் பிரிவில் பணியாற்றும் கோமல் ஆர். கே. அன்பரசன். அவரே நூலை வெளியிட்டு இருக்கிறார். அடுத்த நூலை எழுதியவர் பத்மன். இவர் ஜெயா டிவி செய்திப் பிரிவில் முதுநிலை துணை ஆசிரியர். இந்நூலை 'கிழக்குப் பதிப்பகம்' வெளியிட்டுள்ளது. த.மு.மு.க, த.நா.த.ஜ, மனித நீதிப் பாசறை போன்ற முஸ்லிம் அமைப்புகள் தங்கள் உறுப்பினர்களுக்கு இதழியல் பயிற்சி அளிக்கும் முகாம்களை நடத்தியுள்ளன. அவர்கள் அடுத்த முறை இதழியல் பயிற்சி முகாம் நடத்தும் போது இது போன்ற நூல்களை வருகையாளர்களுக்கு கொடுக்கலாம். தனிப்பட்ட முறையிலும் இதழியலில் ஆர்வமுள்ளவர்கள் படிக்க இந்நூல்கள் ஏற்றவை.

1. நூல்: செய்திகள் : நிஜமும், நிழலும்
ஆசிரியர்: கோமல் ஆர். கே. அன்பரசன்
வெளியீடு: கோமதி புத்தகாலயம்
10 சூடியம்மன் தெரு, எண் 4, முதல் தளம்
சைதாப்பேட்டை
சென்னை - 600 015
விலை: ரூ. 75

2. நூல்: மூன்றாவது கண்
ஆசிரியர்: பத்மன்
வெளியீடு: கிழக்கு பதிப்பகம்
16/37 கற்பகம்மாள் நகர்
மைலாப்பூர்
சென்னை - 600 004
விலை: ரூ. 50

Monday, October 17, 2005

இன்னொரு குஜராத் உருவாகிறது!

அண்மையில், குஜராத் மாநில அரசு ஒரு விளம்பரம் வெளியிட்டிருந்தது. இந்தி நாளிதழ்களில் முழுப் பக்க விளம்பரம். ஆங்கில ஏடுகளில் அரைப் பக்க விளம்பரம்.

Image hosted by TinyPic.com

நர்மதா நதியில், முதல்வர் நரேந்திர மோடி நிற்கிறார். ஒரு சொம்புத் தண்ணீரை நதியில் ஊற்றுகிறார். அந்தத் தண்ணீர், புனிதமான சரஸ்வதி ஆற்று நீராம். அந்த ஆறு எங்கே இருக்கிறது? அப்படி ஓர் ஆறு இருந்ததாக வேதங்கள் சொல்கின்றன. கண்டவர்களும் இல்லை. நீராடியவர்களும் இல்லை. சொம்புத் தண்ணீரை ஊற்றி, மோடி ஏதோ சங்கல்பம் செய்கிறாராம். எத்தனை கோடி செலவு? அவருடைய இந்து ராஜ்யத்தில், இப்படி இல்லாத நதிகளெல்லாம் கரைபுரண்டு ஓடிக் கொண்டிருக்கின்றன.

குஜராத் சட்டமன்றக் கூட்டத்திற்குக் காங்கிரஸ் உறுப்பினர்கள், ஆளுக்கு ஒரு பலூனைப் பறக்கவிட்டுக் கொண்டு வந்தனர். நரேந்திர மோடியின் திட்டங்களெல்லாம் பலூன் திட்டங்கள்தான். தொட்டால் வெடித்து விடுமென்று சட்டமன்ற வாயிலில் வெடித்துக் காட்டினர்.
அவர்கள் எதற்காகப் பலூன் பவனி நடத்தினர்? மாநிலம் முழுமையும் நவராத்திரி விழாக் கொண்டாட, மோடி நாற்பது கோடி ரூபாய் ஒதுக்கியிருக்கிறார். தன்னை விட்டு விலகிப் போகும் இந்துத்வ சக்திகளை இழுத்துப் பிடிக்க, கஜானாவைக் காலி செய்கிறார்.

இன்னும் ஆயிரமாயிரம் கிராமங்களுக்குக் குடி தண்ணீர் வசதி இல்லை. சாலை வசதி இல்லை. இந்த நிலையில், நாற்பது கோடி ரூபாய் செலவில் நவராத்திரி விழாவா? என்று காங்கிரஸ் கேட்கிறது. நியாயம்தானே? குஜராத்தில் காங்கிரஸ§க்கு உயிர் வந்திருக்கிறது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், குஜராத்தில் நடந்த வகுப்புக் கலவரங்களில் இஸ்லாமிய மக்கள் பயங்கரமாகப் பாதிக்கப்பட்டனர். கிராமப்புறங்களிலிருந்து துரத்தப்பட்டனர். அவர்களுடைய வீடு, வாசல்களை இன்று வரை சங் பரிவாரங்கள் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன. இப்போது அந்தப் பரிவாரங்களை மகிழ்விக்க, நவராத்திரி விழா கொண்டாட நாற்பது கோடி ரூபாய் வாரி இறைக்கப்படுகிறது.

இன்னொரு பக்கம், ராஜஸ்தான் மாநிலம், இன்னொரு குஜராத்தாக உருவாகி வருகிறது.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது, கன்னியாகுமரியிலிருந்து அத்வானி ரத யாத்திரை தொடங்கினார். விழா மேடையில் அவருக்கு வலது பக்கம் ஓர் இஸ்லாமியப் பெரியவரும் இடது பக்கம் ஒரு பாதிரியாரும் அமர்ந்திருந்தனர். ராஜஸ்தான் மாநிலம் ஆஜ்மீர் தர்காவிலிருந்து, அந்த இஸ்லாமியப் பெரியவரை அத்வானி பிடித்துக்கொண்டு வந்தார். ராஜஸ்தான் பயணத்தின்போது ஆஜ்மீர் தர்காவிற்கும் அத்வானி சென்றார்.
சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னர், இஸ்லாமியப் பெரியவர்களை இன்றைய பி.ஜே.பி. முதல்வர் வசுந்தரா ராஜே அழைத்தார். அவர் ஒரு சமஸ்தானத்து மகாராணி. தன்னை நம்பச் சொன்னார். பி.ஜே.பி.க்கு வாக்களிக்கச் சொன்னார். இஸ்லாமிய மக்கள் குழம்பிப் போயினர். ஆனால், இன்றைக்கு அங்கே, அவர்களுடைய நிலை என்ன?

இஸ்லாமியர்களைப் பொறுத்தவரையில் பி.ஜே.பி. அம்மணியின் ஆட்சி, கானலில் பெய்யும் மழை. பாலையில் பவனி வரும் நிலவுதான். உண்மையில் அங்கே ஆட்சி செய்வது ஆர்.எஸ்.எஸ்.தான். அதன் தலைவர்கள் பலர் அரண்மனை ஆலோசகர்களாக இருக்கிறார்கள்.

இந்துக்களும் இஸ்லாமியர்களும் வெகுதூரம் விலக்கி வைக்கப்படுகிறார்கள். மெல்லமெல்ல இஸ்லாமியர்கள் எதிரிகளாகச் சித்திரிக்கப்படுகிறார்கள்.
இஸ்லாமியர்களின் சமூக, பொருளாதார நிலை அறிய, பிரதமர் மன்மோகன்சிங் ஒரு குழு அமைத்திருக்கிறார். அதன் தலைவர் நீதிபதி ராஜீந்தர் சச்சார். அவருடைய குழு, ராஜஸ்தானில் நான்கு நாட்கள் சுற்றுப்பயணம் செய்தது. அவர்களிடம் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் அதிர்ச்சி தரத்தக்கவை.

பில்வாரா மாவட்டத்தில் இஸ்லாமியர்கள் வீடுகளை விட்டு வந்தால், மீண்டும் திரும்புவார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.
நகரங்களில் இஸ்லாமியர்கள் சொத்துக்கள் வாங்க முடியாது. அதற்கு பிற சமூகத்தினருக்குக் கடன் உதவி தரும் வங்கிகள், இஸ்லாமியருக்குத் தருவதில்லை.

சொந்தப் பணத்தில் ஜெய்ப்பூரில் இஸ்லாமியர்கள் வீடு வாங்க முடியவில்லை. அதற்கான பத்திரங்களோடு சென்றாலும், பதிவு அலுவலகங்கள் பதிவு செய்வது இல்லை. பத்திரப் பதிவு அலுவலகங்களுக்கு வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.

கிராமப்புறங்களில் சங்பரிவாரங்கள்தான் ஆட்சி செய்கின்றன. பர்தா அணிந்து வரும் பெண்களுக்குப் பல சரக்கு விற்கக் கூடாது என்பது கடைக்காரர்களுக்கு, அந்தப் பரிவாரங்கள் பிறப்பித்துள்ள கட்டளை. இப்படி அங்கே ஒரு நரகம் உருவாக்கப்படுகிறது.

பி.ஜே.பி. ஆட்சி அமைந்ததும் பள்ளிகளில் உருது மொழி ஆசிரியர்களை நியமிப்பது நின்று போய்விட்டது. இப்போது உருது மொழியைத் தாய் மொழியாகக் கொண்ட மாணவர்கள், இரண்டாவது மொழியாக இன்னொரு மொழியைக் கற்கிறார்கள்.

பில்வாரா மாவட்டத்தில் ஆண்டுதோறும் உர்ஸ் ஊர்வலங்கள் நடைபெறும். கடந்த இரண்டு ஆண்டு காலமாக, அந்த ஊர்வலங்கள் நடைபெறவில்லை. வகுப்புக் கலவரங்கள் வெடிக்கும் என்று காரணம் கூறி, காவல் துறையே அனுமதி அளிப்பதில்லை.

சங்பரிவார இளைஞர்கள் அனைவருக்கும், விஸ்வ ஹிந்து பரிஷத், சூலாயுதங்களை வழங்கியிருக்கிறது. அந்தச் சூலாயுதங்கள் ஏற்கெனவே குஜராத்தில் ரத்தக் குளியல் நடத்தி விட்டன. இங்கேயும் அவை ரத்த நீராட்டு விழாக்களை நடத்தும். காரணம், இங்கேயும் நீதி நித்திரை போய்விட்டது. ஆஜ்மீர் தர்காவிற்கு வந்து ஆசிர்வாதம் வாங்கிய அத்வானியைக் காணோம்.
தன்னை நம்புங்கள் என்று இஸ்லாமிய மக்களுக்கு வாக்குறுதி அளித்த மகாராணி வசுந்தரா ராஜேயையும் காணோம். இவர்களோடு காங்கிரஸ் கட்சியையும் காணோம்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி வாய்ப்பை காங்கிரஸ் இழந்தது. அப்போது முதல்வராக இருந்த அசோக் கெலாட், இப்போது அகில இந்தியக் காங்கிரஸ் செயலாளராக டெல்லியில் வாசம் செய்கிறார். இன்றைக்கும், மக்கள் மன்றத்தில் அவருக்குச் செல்வாக்கு உண்டு. அவர் மிகப் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்.

அதனைக் காரணம் காட்டியே ரஜபுத்திரர்கள், ஜாட் இனத்தவர், பிராமணர்கள், இதர முன்னேறிய ஜாதியினரை பி.ஜே.பி. அணி திரட்டியது. அங்கேயும் காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டிகள் நடந்தன. கடைசி நேரத் திருகு தாளங்கள், காங்கிரஸ் கட்சிக்குத் தோல்வியைத் தேடித் தந்தன. அத்தோடு, காங்கிரஸ் கட்சி காணாமல் போய்விட்டது. அசோக் கெலாட் போன்று ஒரு தலைவர் இல்லை.

இப்போது, இஸ்லாமிய மக்களுக்கு பி.ஜே.பி. மீது கோபம் கொப்பளிக்கவில்லை. இந்தக் காங்கிரஸ் எங்கே போனது என்று குமுறுகிறார்கள். காங்கிரஸ் தோல்விக்கு அவர்களும் ஒரு காரணம் என்பதனை மறுப்பதற்கு இல்லை.

மின் கட்டண உயர்வைக் கைவிடக் கோரி, இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஜெய்ப்பூரில் ஒரு லட்சம் விவசாயிகள், ஒரு வாரம் தர்ணாப் போராட்டம் நடத்தினர். வெற்றி பெற்றனர். காங்கிரஸ் கட்சியைக் காணோம்.
பி.ஜே.பி. அரசு தங்களுக்குப் பெரும் துரோகம் செய்துவிட்டது என்று ஜாட் இன மக்கள் சல்லடம் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சியைக் காணோம்.

இந்தியத் தாய்க்கு இப்போது ஒரு அங்கத்தில் வகுப்பு வெறிப் புற்றுநோய் வந்திருக்கிறது. அந்த அங்கம் ராஜஸ்தான். ஆனால் காங்கிரஸ் கட்சியைக் காணோம். கண்ணில் பட்டால் சொல்லி அனுப்புங்கள்.

நன்றி: குமுதம்.காம்

Saturday, September 17, 2005

இஸ்லாமிய கொள்கை விளக்க வகுப்பு

தலைப்பு:

ஜகாத் கடமையும்

தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத் (T.N.T.J)-ன்

தவறான கொள்கைகளும்



வழங்குபவர்: எம். முஜீபுர் ரஹ்மான் உமரீ


இடம்: இஸ்லாமிக் சென்டர் - முஷ்ரிஃபா, ஜித்தா (சவுதி அரேபியா)
நாள்: 23-09-2005 வெள்ளிக் கிழமை
நேரம்: சரியாக காலை 9 மணிக்கு (இன்ஷா அல்லாஹ்)

மார்க்க கல்வி பெற அனைவரும் வருக!

(குறிப்பு: 29-07-2005 அன்று ஸப்யீன் சென்டரில் நடைபெற்ற ஜகாத் கருத்தரங்கில் கலந்து கொண்ட சகோதரர்கள் அதன் இரண்டாவது அமர்வாகிய இந்நிகழ்ச்சியில் அவசியம் பங்கேற்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்)


அன்புடன் அழைக்கும்
இஸ்லாமிய அழைப்பகம் - முஷ்ரிஃபா, ஜித்தா

Tuesday, September 13, 2005

பராஅத் இரவும் ஷஃபானும் (தொகுப்பு)

பாவங்களைத் தடுக்கக்கூடிய கேடயம் நோன்பாக இருக்கின்றது. தனிமையிலும் அல்லாஹுவிற்கு அஞ்சும் இறையச்சத்தை அதிகப்படுத்துவது நோன்பு, இரக்க சிந்தனை, மனக்கட்டுப்பாடு போன்ற உயர்பண்புகளுக்கு வழிவகுத்துக் கொடுக்கும் கடமையான நோன்பின் மாதம் ரமலானை எதிர்நோக்கியவர்களாக இருக்கின்றோம்..

நபி(ஸல்) அவர்கள் கடமையான நோன்புகளை நோற்பதோடல்லாமல் ஷவ்வால் மாத ஆறு நோன்புகள், வியாழன், திங்கள் ஆகிய வார நோன்புகள் நோற்பது, ஆஷுரா, அரஃபா போன்ற நோன்புகள் நோற்றுயிருக்கிறார்கள். மேலும் நபி(ஸல்) அவர்கள் ஷஃபான் மாதத்தில் ஏனைய மாதங்களைவிட அதிகமான நோன்புகள் நோற்றிருக்கிறார்கள் என்பதை கீழ்வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகிறது.

நபி(ஸல்) அவர்கள் ரமலானைத் தவிரவுள்ள வேறு எந்த மாதத்தையும் முழுமையாக நோன்பு நோற்றதை நான் கண்டதில்லை. அவ்வாறே ஷஃபான் மாதத்தை தவிர வேறு எந்த மாதங்களிலும் அதிகமாக அவர்கள் நோன்பு நோற்றதையும் நான் பார்த்ததில்லை - அறிவிப்பாளர் : ஆயிஷா(ரலி) அவர்கள், ஆதாரம் : புகாரி, முஸ்லிம்

நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு ஷஃபான் மாதத்தில் அதிகமான நோன்பு நோற்றதன் ரகசியத்தை கீழ்வரும் ஹதீஸ் விளக்குகிறது.

நான் நபி(ஸல்) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதரே! ஷஃபான் மாதத்தில் நீங்கள் நோன்பு நோற்பதைப் போன்று ஏனைய மாதங்களில் நீங்கள் நோன்பு நோற்பதை நான் காணவில்லையே! என்று கேட்டேன். அதற்கவர்கள், அது ரஜபுக்கும், ரமலானுக்கும் இடையில் வரும் மாதமாகும். இம்மாதம் பற்றி மக்கள் கவனயீனமாக இருக்கின்றார்கள். இம்மாதத்தில் அடியார்களுடைய அமல்கள் அல்லாஹ்விடம் எடுத்துக் காட்டப்படுகின்றன. இம்மாதத்தில் நோன்புடன் இருக்கும் நிலையில் எனது அமலும் அல்லாஹ்விடம் எடுத்துக் காட்டப்பட வேண்டும் என்றே நான் விரும்புகின்றேன் எனக் கூறினார்கள். அறிவிப்பாளர் : உஸாமா(ரலி) , ஆதாரம் : அபுதாவூத், நஸஈ, ஸஹீஹ் இப்னு ஹுஸைமா

ஷாஃபான் மாதத்தில் நபி(ஸல்) அவர்கள் அதிகமாக நோன்பு நோற்றிருக்கிறார்கள். அம்மாதத்தில் அடியானின் அமல்கள் அல்லாஹ்விடம் எடுத்துக்காட்டப்படுகின்றன. மேலும் ஷஃபான் மாத நோன்புகள் ரமலான் மாத கடமையான நோன்புகளுக்கு ஒரு பயிற்சியாகவும் அமைந்துவிடுகின்றன. பசி, தாகம் போன்ற உணர்வுகளைக் கட்டுப்படுத்தும் மனக்கட்டுப்பாடு அதில் கிடைத்துவிடுகிறது. இந்த அடிப்படையில் நாமும் அம்மாதத்தில் நோன்பு நோற்றால் அல்லாஹ்விடத்தில் அவை ஏற்றுக்கொள்ளத்தக்கதாகும். அல்லது ஒவ்வொரு மாதம் பிறை 13, 14, 15 ஆகிய தினங்களில் நோன்பு நோற்பதை வழமையாகக் கொண்டிருந்தால் ஷஃபான் மாதமும் பிறை 15 அன்று நோன்பு நோற்பதில் தவறில்லை.

மாறாக நம் நாடுகளில் மக்கள் குறிப்பாக ஷஃபான் மாதத்தின் 15-ஆம் நாள் இரவு "பராஅத் இரவு" என்று வணங்கி வருகிறார்கள். அன்று இரவு பள்ளியை வர்ண விளக்குகளால் அலங்கரித்து, இரவு முழுவதும் தொழுது, பகலில் நோன்பு நோற்பதை வணக்கமாகச் செய்துகொண்டிருக்கிறார்கள். "பராஅத்" இரவு அன்று தொழுது வணங்கினால் அல்லாஹ் நம்முடைய பாவங்களை மன்னிப்பான், உணவு, பொருளாதாரம் போன்றவைகளை பெருக்கிக் கொடுப்பான் என்று கருதி அன்றுமட்டும் விசேஷமாக தொழுவதும், பகலில் நோன்பு இருப்பதும் நம்முடைய சமுதாயத்தில் சிலர் செய்துகொண்டிருக்கின்றார்கள்.

பராஅத் இரவு அன்று மட்டும்தான் அடியானின் அமல்களை அல்லாஹ் காண்கின்றான் என்றும், அன்றுதான் அடியார்களின் உணவு, பொருளாதாரம் மற்றும் அந்த ஆண்டில் மரிப்பவர்கள் மற்றும் பிறப்பவர்களை தீர்மானிக்கின்றான் என்றும் அன்று விசேஷத் தொழுகைகளை தொழுது வருகிறார்கள். அன்று இரவு மஃரிபுக்கும் இஷாவுக்குமிடையில் சூரா யாஸீனை ஓத வேண்டுமெனவும், அவ்வாறு ஓதவதால் ஆயுள் நீளமாக்கப்படுகிறது. ரிஸ்க் விஸ்தீரணமாக்கப்படுகின்றது. பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன போன்ற பலவிதமான பயன்கள் கிடைக்கின்றன எனத் தவறாகக் கருதிவருகின்றனர். இது முற்றிலும் நபி(ஸல்) அவர்கள் வழிமுறைக்கு மாற்றமான செயலாகும் (பித்-அத்தாகும்).

பராஅத் இரவில் தொழுவதும், அன்று பகல் நோன்பு இருப்பதும் சுன்னா என்ற பெயரில் பிற்காலத்தில் தோற்றுவிக்கப்பட்டதாகும். இந்த நாளுக்கு இப்படியொரு பெயரை அல்லாஹ்வோ, அவனது தூதர்(ஸல்) அவர்களோ சூட்டியதற்கு ஆதாரம் எதுவும் இல்லை. அவ்விரவுக்குச் சிறப்பிருப்பதாகக் கருதிச் செய்யப்படும் தொழுகை, பிரார்த்தனை போன்ற வணக்கங்கள் கண்ணியத்திற்குரிய இமாம்களாலும், இஸ்லாமிய அறிஞர்களாலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளன. அஷ்ஷெய்க் முஹம்மது அப்துஸ்ஸலாம் ஹிழ்ர் அஷ்ஷுகைரி என்ற அறிஞர் தமது அஸ்ஸுனன் வல்முப்ததஆத் அல்முதஅல்லகா பில் அத்காரி வஸ்ஸலாத் என்ற நூலில் பின்வருமாறு கூறுகிறார்கள்: ஷஃபான் மாதத்தின் 15 ஆம் நாள் இரவு வந்தால் அவ்விரவில் நீங்கள் நின்று வணங்கி, பகலில் நோன்பு நோற்றுக் கொள்ளுங்கள் (அல்ஹதீஸ்).

இப்னு அபீ பஸ்ரா என்பவர் இதன் அறிவிப்பாளர் வரிசையில் இடம் பெறுவதால் இது ஏற்றுக்கொள்ளப்படாத ஹதீஸாகும். இமாம்களான அஹ்மத்(ரஹ்), இப்னு முஈன் (ரஹ்) ஆகியோர் இந்த இப்னு அபீ பஸ்ரா என்பவர் ஹதீஸ்களை இட்டுக்கட்டக் கூடியவர் எனக் கூறியுள்ளார்கள். மேலும் பராஅத் இரவுத் தொழுகை பற்றி வந்துள்ள ஹதீஸ் பாத்திலானது (தவறானது) என இமாம் ஹாபிழ் அல் இராக்கீ(ரஹ்) தமது அல்மௌழுஆத் (இட்டுக்கட்டப்பட்டவைகள்) எனும் நூலில் குறிப்பிடுகின்றார்கள்.

ரஜப் மாதத்தில் மிஃராஜுக்கென உருவாக்கப்பட்ட தொழுகையும், ஷஃபானின் பராஅத் தொழுகையும் மிக மோசமான, வெறுக்கத்தக்க இரு பித்அத்களாகும் என இமாம் நவவி(ரஹ்) அவர்களும் குறிப்பிடுகின்றார்கள்.

எனவே பராஅத் என்றொரு இரவு இல்லை என்பதும் அதற்கு எவ்வித சிறப்புக்களுமில்லை என்பதும்; அதற்கு எவ்வித சிறப்புக்களுமில்லை என்பதும் நாம் தெளிவாக அறியமுடிகின்றது.. எனவே பராஅத் என்ற அடிப்படையில் நோன்பு நோற்று இன்னும் வேறுபிற அமல்கள் செய்வதைவிட்டும் நம்மை நாம் பாதுகாத்துக் கொள்வோமாக!.

Monday, September 12, 2005

முழு நேரப் பணி மார்க்கப்படி சரியா?

வேறு தொழில் எதுவும் செய்யாமல் மார்க்க அறிஞராக இருந்து மாதச்சம்பளம், ஜகாத், நன்கொடையால் மட்டும் வாழ்வது சரி தானா? இதனை தவறு என்று சொல்பவர்கள் கூட ஓர் இயக்கத்தில் முழு நேர ஊழியராக இருப்பதை சரிகாண்கின்றனர். அவ்வாறு ஒருவர் முழு நேர ஊழியராக இருந்தால், அவரது செலவுகளை அவரது தந்தையோ, சகோதரரோ, வேறு உறவினரோ, நண்பரோ, ஏற்க வேண்டியிருக்கும். இது சரி தானா? அல்லது இயக்கமே அவருக்கு ஊதியம் கொடுக்கலாம். அல்லது, இயக்கத்தின் சில ஆதரவாளர்கள் ஏற்றுக் கொள்ளலாம். இது சரிதானா? ஒரு மனிதன் அதிகபட்சம் ஓர் இயக்கத்தில் ஈராண்டுகளுக்கு முழு நேர ஊழியனாய் இருக்கலாம். அதற்கு மேல், இருந்தால் அவன், இஸ்லாமியப் பிரச்சாராப் பணியே செய்தாலும், அவனது வாழ்க்கை இஸ்லாமிய வழிமுறைப்படி சரிதானா? இறை நேசர்கள் என்று அழைக்கப் படுபவர்களை விமர்சிப்பவர்கள், இந்த முறையை எப்படி நியாயப் படுத்துகிறார்கள்?

வற்புறுத்த வேண்டாமே?

சில சகோதரர்கள், தங்கள் அமைப்புக்கு நன்கொடை வசூலிக்கும் போதும், அல்லது வேறு சில சகோதரர்கள் மதர்சாக்களுக்கு சந்தா, நன்கொடை வசூலிக்கும் போதும் கட்டயப் படுத்துகின்றனர். நடுத்தரமக்கள் என்றால், அவர்களிடம் ஆயிரக்க கணக்கிலும், சற்று வசதியானவர்கள் என்றால் அவர்களிடம் இலட்சக்கணக்கிலும் கேட்கின்றனர். ஒரே நேரத்தில், பல அமைப்புகளுக்கும், பல மதர்சாக்களுக்கும் நன்கொடை கொடுக்க வேண்டியுள்ள சூழலில் வசதியானவர்களே ஆனாலும் ஒவ்வொருக்கும் எப்படி இலட்சக் கணக்கில் நன்கொடை கொடுக்க முடியும். தவிரவும், ஒவ்வொருவரும் ஜகாத் நிதியில் இருந்து உறவினரில் தேவையுடையோருக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டியுள்ளது. பல்வேறு காரணங்களால் குறைவான தொகையை ஜகாத்தாகவோ, நன்கொடையாகவோ கொடுத்தால் வசூலிப்பவர்கள் வாங்க மறுக்கின்றனர். இது கொடுப்பவரை அவமதிப்பதாய் உள்ளது. இப்படி வற்புறுத்தி நன்கொடை வசூலிப்பது நபி வழிப்படி சரிதானா? தெரிந்தவர்கள் விளக்குங்கள். இப்பழக்கம் உங்கள் உறவினரிடமோ, நண்பரிடமோ இருந்தால் திருத்துங்கள்.

நன்மையின் வழிமுறைகள்.. (பிரார்த்தனையில்)

பிரார்த்தனையில் சிறந்தது அரஃபா நாளில் கேட்கும் பிரார்த்தனையாகும். நானும் எனக்கு முன் வந்த நபிமார்களும் கூறிய திக்ருகளில் மிகச்சிறந்தது

லாஇலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீக்க லஹு, லஹுல்முல்க்கு வலஹுல் ஹம்து, வஹுவ அலா குல்லி ஷைய்யின் கதீர். என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
பொருள்:
அல்லாஹுவைத்தவிர வணங்கப்படுவதற்கு தகுதி உள்ள இறைவன் வேறு யாருமில்லை. அவன் தனித்தவன், அவனுக்கு யாதொரு இணையுமில்லை, ஆட்சி அதிகாரமும் அனைத்துப்புகழும் அவனுக்குரியதே! அல்லாஹுவைத்தவிர வணங்கப்படுவதற்குத் தகுதி உள்ள இறைவன் வேறு யாருமில்லை.
அல்லாஹ்விடத்தில் மிக விருப்பத்திற்குரியது, நான்கு (திக்ருகளாகும்) என ஸஹீஹான ஹதீஸில் வந்துள்ளது.

ஸுப்ஹால்லாஹ், வல்ஹம்து லில்லாஹ், வலாஇலாஹ இல்லல்லாஹ், வல்லாஹு அக்பர்.
பொருள்:
அல்லாஹ் (சகல குறைகளை விட்டும்) மிகத்தூய்மையானவன், எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே! அல்லாஹுவைத்தவிர வணங்கப்படுவதற்குத்தகுதியுள்ள இறைவன் வேறு யாருமில்லை! அல்லாஹ் மிகப் பெரியவன்!

இந்த திக்ருகளையும் வேறு திக்ருகளையும் உள்ளச்சத்தோடும் பயபக்தியோடும் திரும்பத் திரும்ப அதிகமதிகம் ஓதுவதுடன் உங்களின் ஈருலக வெற்றிக்காகவும் உலக முஸ்லிம்களின் வெற்றிக்காகவும் மனம் உருகப் பிரார்த்தியுங்கள். மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட திக்ருகள் துஆக்களை எல்லாக்காலங்களிலும் அதிகமாக ஓத வேண்டும்.

அவைகளில் சில பின்வருமாறு.

சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி சுப்ஹானல்லாஹில் அளீம்.
பொருள்:
அல்லாஹ்வைப் புகழ்வதோடு தூயவன் எனத் துதிக்கவும் செய்கிறேன். கண்ணியமிக்க அல்லாஹ் மிகத்தூய்மையானவன்.

லாஇலாஹ இல்லா அன்த சுப்ஹானக இன்னீ குன்து மினல்லாளிமீன்.
பொருள்:
வணக்கத்திற்குரியவன் உன்னைத்தவிர வேறில்லை. நீயே தூய்மையானவன். நிச்சயமாக நான் அநீதம் இழைத்தோரில் ஒருவனாகிவிட்டேன்.

லாஇலாஹ இல்லல்லாஹு வலா நஃபுது இல்லா இய்யாஹு, லஹுன்னிஃமது வலஹுல்ஃபழ்லு வலஹுத்தனாஉல் ஹஸனு, லாஇலாஹ இல்லல்லாஹு முக்லிஸீன லஹுத்தீன வலவ் கரிஹல்காஃபிரூன்.
பொருள்:
வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹுவைத்தவிர வேறில்லை. அவன் ஒருவனைத்தவிர வேறு யாரையும் நாங்கள் வணங்கமாட்டோம்! அருட்கொடைகள் மற்றும் பேருபகாரங்கள் அனைத்தும் அவனுக்கே! அழகிய புகழும் அவனுக்குரியதே! வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹுவைத்தவிர வேறு யாருமில்லை. கீழ்ப்படிதலை அவனுக்கே உரித்தாக்குகிறோம். நிராகரிப்பாளர்கள் வெறுத்தாலும் சரியே!

லா ஹவ்ல வலாகுவ்வத இல்லா பில்லாஹி.
பொருள்:
நன்மை செய்ய சக்தி பெறுவதும் தீமையை விட்டு விலகுவதும் அல்லாஹ்வின் உதவி கொண்டே தவிர வேறில்லை.

ரப்பனா ஆத்தினா ஃபித்துன்யா ஹஸனத்தன் வஃபில் ஆகிரத்தி ஹஸனத்தன் வகினா அதாபன்னார்.
பொருள்:
எங்கள் இரட்சகனே! எங்களுக்கு இவ்வுலகிலும் மறுவுலகிலும் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக! மேலும் எங்களை நரக வேதனையிலிருந்து பாதுகாத்தருள்வாயாக! (2:201)

உயர்வானவனாகிய அல்லாஹ் (தன் திருமறையில் இவ்வாறு) கூறுகின்றான்.
இன்னும் உங்களுடைய இரட்சகன் கூறுகிறான், நீங்கள் என்னையே அழை(த்துப் பிரார்த்தி)யுங்கள், நான் உங்களு(டைய பிரார்த்தனை)க்கு பதிலளிப்பேன். நிச்சயமாக, என்னை வணங்குவதை விட்டும் பெருமை அடிக்கிறார்களே, அத்தகையோர் அவர்கள் இழிவடைந்தவர்களாய் நரகம் புகுவார்கள். (40:60)

உயர்ந்தவனாகிய உங்களின் இரட்சகன் வெட்கமுள்ளவன், சங்கையானவன் அவனிடம் இருகைகளையும் உயர்த்தினால் (பிரார்த்தித்தால்) அவ்விரண்டையும் வெறுமென திருப்பிவிட அவன் வெட்கப்படுகின்றான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

Saturday, September 10, 2005

நன்மையின் வழிமுறைகள்.. (தொழுகையில்)

ஜமாஅத்தோடு தொழும் தொழுகையின் சிறப்பு

1. நபி (ஸல்) அவர்களிடம் கண்தெரியாத ஒரு மனிதர் வந்து , அல்லாஹுவின் தூதரே! என்னை பள்ளிக்கு அழைத்து வருவதற்கு யாருமில்லை (என்று சொல்லி) வீட்டில்(தனிமையில்) தொழுவதற்கு அனுமதி கேட்டார்கள், நபியவர்களும் அனுமதி கொடுத்து விட்டார்கள். அந்த மனிதர் திரும்பி செல்லும் போது அவரை அழைத்து பாங்கு சப்தம் கேட்கின்றதா? என வினவினார்கள், அதற்கு அவர் ஆம் என்றார். அப்படியானால் தொழுகைக்கு (பள்ளிக்கு) வந்தேயாகவேண்டுமென்றார்கள்.
அறிவிப்பவர் :- அபூ ஹுரைரா (ரலி) - ஆதாரம் :-முஸ்லிம்

2. ஜமாஅத்தோடு தொழும் தொழுகை தனிமையில் தொழும் தொழுகையை விட இருபத்தி ஏழு மடங்கு சிறந்தது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் :- அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி)
ஆதாரம் :- புகாரி, முஸ்லிம்


ஆரம்ப வரிசையில் தொழுவதின் சிறப்பு
பாங்கு சொல்வதிலும், முந்திய வரிசையில் (தொழுவதிலும்) கிடைக்கும் நன்மையை மனிதர்கள் அறிந்து கொண்டால், சீட்டுப்போட்டுத்தான் முதல் வரிசையில் இடம் கிடைக்குமென்றிருப்பினும் சீட்டுப்போட்டாவது அதை அடைந்து கொள்ள முயற்சிப்பார்கள் என்று நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் :-ஜாபிர் (ரலி) - ஆதாரம் :- முஸ்லிம்

சுன்னத்து தொழுகைகளின் சிறப்பு
ஒவ்வொரு நாளைக்கும் யார் 12 ரக்அத் சுன்னத்து தொழுகை தொழுகின்றாரோ அவருக்கு அல்லாஹ் சுவர்க்கத்தில் ஒரு மாளிகையை கட்டுகின்றான் என்று நபி (ஸல்) அவர்கள் சொல்ல நான் கேட்டிருக்கின்றேன் என்று உம்மு ஹபீபா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
ஆதாரம் :-முஸ்லிம்

12 ரக்அத்துக்களின் விபரங்கள் பின்வருமாறு

ஸுப்ஹுக்கு முன் இரண்டு ரக்அத், லுஹருக்கு முன் நான்கு ரக்அத், லுஹருக்கு பின் இரண்டு ரக்அத், மஃரிபுக்கு பின் இரண்டு ரக்அத், இஷாவுக்கு பின் இரண்டு ரக்அத்

குறிப்பு :- இவைகளுக்கு சுன்னத்துல் முஅக்கதா என்று சொல்லப்படும், அதாவது நபியவர்கள் விடாமல் தொழுது வந்த சுன்னத்து தொழுகைகள். இன்னும் இது அல்லாத முன் பின் சுன்னத்துக்கள் உள்ளன என்பதை கவனத்தில் வைத்து கொள்ள வேண்டும்.

அல்லாஹ் நம் அனைவருக்கும் தொழுகையை பேணி நடக்க வாய்ப்பளிப்பானாக,

Saturday, September 03, 2005

வக்ஃபுச் சொத்துக்கள் - இறைவழிச் செலவுகள்

நாயனின் நேசம் நன்மை புரிவோர்க்கே!

1) அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யுங்கள்!
(உங்களை நீங்களே ஆபத்திற்குள்ளாக்கிக் கொண்டு) உங்களது கரங்களை அழிவின் பக்கம் கொண்டு செல்லாதீர்கள். (பிறருக்கு) நன்மை செய்யுங்கள்! (பிறருக்கு நன்மை செய்வோரை நிச்சயமாக அல்லாஹ் நேசிக்கிறான்.(2:95)

2) அந்த நாள் வருமுன் ...?
விசுவாசம் கொண்டோரே! எந்த விதமான பேரமும், நட்பும், பரிந்துரையும் இல்லாத நாள் வருமுன் உங்களுக்கு நாம் அளித்தவற்றிலிருந்து செலவு செய்யுங்கள். (2:254)

3) உயர்தரமானதை உயர்ந்தவன் வழியில்..
விசுவாசிகளே! நீங்கள் சம்பாதித்தவற்றிலிருந்தும் உங்களுக்கு பூமியிலிருந்து நாம் வெளிப்படுத்தியவற்றிலிருந்தும் நல்லவைகளையே தர்மமாகச் செலவு செய்யுங்கள்!

4) புண்ணிய வழிச் செலவு!... பூரணமாய் ... கூலி!
அல்லாஹ்வுடைய பாதையில் நீங்கள் எதைச் செலவு செய்த போதிலும் அதன் கூலி உங்களுக்குப் பூரணமாகவே வழங்கப்படும்.


வக்ஃபுச் சொத்தெழுதும் வரைமுறைகள்

1) உயர்தரமான தோட்டம்
உமர்(ரலி) அவர்கள் "தம்ஃக்" என்றழைக்கப்பட்ட தம்முடைய சொத்து ஒன்றை அல்லாஹ்வின் தூதருடைய காலத்தில் தர்மம் செய்தார்கள். அது ஒரு பேரீட்சைத் தோட்டம். அல்லாஹ்வின் தூதரே! நான் பெற்றுள்ள செல்வங்களிலேயே உயர்தரமான "தம்ஃக்" தோட்டத்தைத் தர்மம் செய்திட விரும்புகிறேன் என்றார்கள். நபி(ஸல்) அவர்கள், அதன் நிலத்தை எவருக்கும் விற்கக் கூடாது. அன்பளிப்பாகவும் தரக்கூடாது. அதற்கு எவரும் வாரிசாகவும் முடியாது. அதன் வருவாய் மட்டுமே செலவிடப்படவேண்டும். என்ற நிபந்தனைகளுடன் தர்மம் செய்துவிடு. என்று கூறினார்கள். எனவே உமர்(ரலி) அவர்கள் அதனை தர்மம்(வக்ஃபு) செய்துவிட்டார்கள்.

அது அல்லாஹ்வின் பாதையிலும், அடிமைகளை விடுதலை செய்யவும், வழிப்போக்கர்களுக்காகவும், உறவினர்களுக்காகவும் வழங்கப்பட்டது. நிர்வாகம் செய்பவர் அதிலிருந்து பொது வழக்கப்படி (நியாயமான் முறையில்) உண்பதில், அல்லது விரயம் செய்யாமல் நண்பருக்கு உண்ணக் கொடுப்பதிலும் குற்றமில்லை, என்றும் (அது தொடர்பான ஆவணத்தில்) அவர்கள் குறிப்பிட்டு இருந்தார்கள்.
அறிவிப்பாளர்: இப்னு உமர்(ரலி), ஆதாரம் : புகாரி

பள்ளிக்கென ... நிலம் வக்ஃபு
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் மதீனா நகரத்திற்கு வந்தபோது ... "பள்ளிவாசல் கட்டும்படி" கட்டளையிட்டு விட்டு "பனூ நஜ்ஜார் குலத்தாரே! உங்களுடைய இந்தத் தோட்டத்திற்கு விலை சொல்லுங்கள்" என்றார்கள். அதற்கு அவர்கள் "நாங்கள் விலை கூறமாட்டோம்" அல்லாஹ்வின் மீது ஆணையாக அதன் விலையை நாங்கள் "அல்லாஹ்விடமே எதிர்பார்க்கிறோம்" என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக்(ரலி), ஆதாரம் : புகாரி

வக்ஃபுக்கென பண முதலீடு
ஒருவர் ஆயிரம் தீனார் தங்க நாணயங்களை அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்து அதை வியாபாரியான தனது பணியாள் ஒருவரிடம் அதனை முதலீடு செய்து வியாபாரம் செய்யச் சொல்லி அதன் இலாபத்தை ஏழை எளியவர்களுக்கும் உறவினர்களுக்கும் தர்மம் செய்கிறார் இந்த மனிதர் அந்த ஆயிரம் தீனார்களின் வாயிலாகக் கிடைக்கும் இலாபத்திலிருந்து கொஞ்சம் தானும் உண்ணலாமா...? அவர் தர்மத்திற்குரியவர்க்ளைக் குறிப்பிடும் போது ஏழைஎளியவர்களுக்கு தர்மம் செய்யும் படி குறிப்பிடவில்லை என்றாலும் கூட அவருக்கு அதிலிருந்து உண்ண அனுமதியுண்டா? என்று ஸுஹ்ரீ(ரஹ்) அவர்களிடம் கேட்கப்பட்ட அவர்கள் "அனுமதியில்லை" என்று தீர்ப்பளித்தார்கள். அறிவிப்பாளர் :அனஸ் பின் மாலிக்(ரலி) ஆதாரம் : புகாரி

குதிரை (வாகனம்) வக்ஃபு
உமர்(ரலி) தமக்குச் சொந்தமான குதிரை ஒன்றின் மீது ஒரு மனிதரை ஏற்றி அல்லாஹ்வின் பாதையில் (போரிடுவதற்காக தருமம் செய்து) அனுப்பி வைத்தார்கள். அந்தக் குதிரை நபி(ஸல்) அவர்கள் உமர்(ரலி) அவர்களுக்குக் கொடுத்திருந்தார்கள். அந்த மனிதர் அதை விற்பதற்காகச் சந்தையில் நிறுத்தி வைத்திருப்பதாக, உமர்(ரலி) அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. உடனே அல்லாஹ்வின் தூதரிடம் அந்தக் குதிரையை தாமே வாங்கிக் கொள்ள (அனுமதி) கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள் அதை நீங்கள் வாங்க வேண்டாம். "உங்கள் தருமத்தை ஒரு போதும் திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டாம்" என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் : இப்னு உமர்(ரலி), ஆதாரம் : புகாரி

வீடு வக்ஃபு
அனஸ்(ரலி) ஒரு வீட்டை வக்ஃபு செய்தார்கள். (மதீனாவிற்கு) வரும் போதெல்லாம் அதில் அவர்கள் தங்குவார்கள். (தானும் பயன்படுத்த உரிமை உண்டு என நிபந்தனையிட்டிருந்ததால்) ஸுபைர்(ரலி) அவர்கள் தம் வீடுகளைத் தர்மம் செய்தார்கள். தமது பெண் மக்களில் விவாகரத்து செய்யப்பட்ட ஒரவருக்கு "நீ இதில் தீங்கிழைக்காமலும், தீங்குக்கு ஆளாகமலும் தங்கலாம். மறுமணம் செய்து தன்னிறைவு பெற்று விட்டால் இதில் தங்க அனுமதியில்லை" என நிபந்தனை விதித்தனர்.
அறிவிப்பாளர் : இப்னு உமர்(ரலி), புகாரி

கிணறு வக்ஃபு
யார் "ரூமா" என்னும் கிணற்றை (விலைக்கு வாங்கி) தூர் வாரி (பொது மக்கள் நலனுக்காக வக்ஃபு செய்து) விடுகிறாரோ அவருக்கு சுவனம் கிடைக்கும். என அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூற, உஸ்மான்(ரலி) அவர்கள் அதை விலைக்கு வாங்கி தூர் வாரி வக்ஃபாக ஆக்கினார்கள். அறிவிப்பாளர் : அபூ அப்திர் ரஹ்மான்(ரலி), ஆதாரம் : புகாரி

போர்நிதி வக்ஃபு
எவர் பொருளாதார நெருக்கடியிலிருக்கும் (தபூக் போருக்கான) படையை (பொருளுதவி செய்து) தயார் படுத்துகின்றாரோ அவருக்கு சுவனம் கிடைக்கும் என நபி(ஸல்) அவர்கள் கூற, உஸ்மான்(ரலி) அவர்கள் (பொருளுதவி செய்து) அப்படையைத் தயார் செய்ய உதவினார்கள். அறிவிப்பாளர்: அபூ அப்திர்ரஹ்மான், ஆதாரம் : புகாரி
வக்ஃபு நிர்வாகமுறை

உமர்(ரலி) அவர்கள் "வக்ஃபு" செய்த போது "இதை நிர்வாகம் செய்பவர் இதிலிருந்து(எடுத்து) உண்பதில் தவறில்லை" எனக் குறிப்பிட்டார்கள். "வக்ஃபு" செய்தவரே கூட அதை நிர்வாகமும் செய்யலாம். மற்றவர்களும் அதற்கு நிர்வாகியாக இருக்கலாம், ஆக (அதை) நிர்வகிக்கும் எவருக்கும் அதிலிருந்து உண்ண அனுமதியுண்டு. அறிவிப்பாளர் : அபூ அப்திர்ரஹ்மான், ஆதாரம்: புகாரி

தொகுப்பு : அதிரை உமர்
யுனிகோடு பதிவு: அபூ உமர்

Monday, August 22, 2005

பிரிவுகளின் பின்னணியில்

சட்டம் (விளக்கம்)
ஹதீஸ்கள் - நபிமொழிகள் ஆரம்பத்தில் எழுதப்படாததினால் நபிமொழிகளை தெரிந்து கொள்ள நபித்தோழர்களையும், அவர்களின் மாணவர்களையும் தேடிச்சென்று பல ஆண்டுகள் அவர்களுடனேயே இருந்து மார்க்கத்தை கற்றுக் கொள்ளும் நிலை இருந்தது. மார்க்கத்தைக் கற்க பல தியாகங்கனை செய்து (கஷ்ட்டப்பட்டு) கஷ்ட்டப்பட்டவர்களில் நான்கு இமாம்களும் அடங்குவர்.

இவ்வாறு பல வருடங்கள் கல்வியைக் கற்று(சொந்த) ஊர் திரும்பும் அவர்களிடம் மக்கள் தங்களுக்கு எழும் (மார்க்க) சந்தேகங்களை அவர்களிடம் கேட்டு தெரிந்துக் கொள்ளவார்கள் இதனடிப்படையில் அந்தந்த இமாம்களிடம் கல்வியைக் கற்பவர்கள் அவரவர்கல்வி கற்ற இமாமைச் சார்ந்தவர்கள் என்ற பொருள் பட ஷாஃபியி, மாலிகியி என்று கூறலாயினர்.

ஒவ்வொரு தீர்ப்புக்குப்பின்னும் நான்கு இமாம்களும் (ஒரு விஷயத்தில்) சரியான ஹதீஸ் எங்களுக்கு கிடைத்து விட்டால் அதுவே எங்களின் வழியாகும் என்ற பொருள்பட கூறினார்கள்.

இமாம்கள் தங்களுடைய வாழ்நாட்களை மார்க்கத்தை கற்கவும், போதிக்கவும் அரசர்கள் செய்யும் தவற்றை துணிந்து விமர்ச்சிக்கவும் அதனால் ஏற்படும் துன்பங்களை பொறுமையாக ஏற்றுக் கொண்டும் கழித்ததுடன், அவர்கள் பல நூல்களையும் எழுதியுள்ளார்கள்.
(உம்) இமாம் மாலிக் அவர்களின் "முஅத்தா"
இமாம் அஹ்மத் அவர்களின் "முஸ்னத் அஹ்மது"

இன்றைய மத்ஹபுகள்:
இன்று நம் சமுதாயத்தில் உள்ள மத்ஹபுகளுக்கும், இமாம்களின் வழிமுறைகளுக்கும் பெயரளவில் தவிர வேறு எந்தத் தொடர்பும் இல்லை.

இன்று மத்ஹபு நூல்களாக மதரசாக்களில் படித்துக்கொடுக்கப்படும் நூல்களுக்கும், இமாம்கள் கைப்பட எழுதிய நூல்களுக்கும் எந்த வித தொடர்பும் இல்லாதது மட்டுமின்றி அவர்கள் எழுதிய சட்டத்திற்கு முரணான சட்டங்களே அதிகம் உள்ளன. இந்நூல்கள் எல்லாம் சுமார் மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டவையே. முகலாயர் ஆட்சிக்காலத்தில் அவர்களின் சுகபோக வாழ்க்கைக்கு தடையாக இருக்கும் ஹராமானவற்றை (மது அருந்துவது, பொது சொத்துக்களை அபகரிப்பது, விபச்சாரம், திருடுதல்) ஹலாலாக்குவதற்காக வேண்டி எழுதப்பட்டவைகளும் உண்டு.

உதாரணம்:
ஹனஃபி- துர்ருல் முக்தார், ஹிதாயா, ஆலம்கிரி
ஷாஃபி- ஃபத்ஹுல் முயீனா, இயானா, மகானி.

கொள்கை வேறுபாடுகள்:ஹிஜ்ரி 37 வரை அலி(ரலி) அவர்களின் ஆட்சியின் ஒருப்பகுதி, சமுதாயத்தில் கொள்கை ரீதியாக எந்த வேறுபாடும் வரவில்லை.

அலி(ரலி) அவர்களின் ஆட்சிக்காலத்தில் அரசியலை அடிப்படையாக வைத்து இரண்டு பிரிவினர்கள் உருவானார்கள் 1. ஷியா 2. கவாரிஜ்
கொள்கையை அடிப்படையாக வைத்து அ) கத்ரியா ஆ) முர்ஜியா என இருபிரிவாக பிரிந்தார்கள்.

காரிஜியாக்கள் (வெளியேறியவர்கள்) ஹிஜ்ரி 37

அலி(ரலி) அவர்கள் தங்களுக்கு மத்தியில் ஏற்பட்ட பிரச்சனைக்கு தீர்ப்பு கூற இரண்டு நீதிபதிகளை நியமித்தார்கள். அப்பொழுது (குர்ஆனை) அல்லாஹ்வின் சட்டங்களை விட்டுவிட்டு மனிதர்களின் சட்டங்களை ஏற்றுக் கொண்டுவிட்டார். அப்படி ஏற்றவர் காஃபிர் ஆவார். அவர் அல்குர்ஆனின் பக்கம் வரும் வரை அவருடன் போர் செய்ய வேண்டும் என்று கூறி அலி(ரலி) அவர்களை விட்டு வெளியேறியவர்களே காரிஜியாக்கள்.

காரிஜியாக்களின் கொள்கை
1. பெரும் பாவம் செய்பவர் காஃபிர் ஆவார், அவருடைய உயிரும், உடமையும் ஹலால் ஆகும்
2. முஃமின்களில் இருசாரார் தங்களுக்குள் சண்டை செய்து கொண்டால், அவ்விருசாராருக்கிடையில் சமாதானம் உண்டாக்குங்கள். பின்னர் அவர்களில் ஒரு சாரார் மற்றவர் மீது அக்கிரமம் செய்தால், அக்கிரமம் செய்வோர் அல்லாஹ்வுடைய கட்டளையின் பால் திரும்பும் வரையில், (அவர்களுடன்) போர் செய்யுங்கள்; அவ்வாறு, அவர்கள் (அல்லாஹ்வின் பால்) திரும்பி விட்டால் நியாயமாக அவ்விரு சாராரிடையே சமாதானம் உண்டாக்குங்கள். (இதில்) நீங்கள் நீதியுடன் நடந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீதியாளர்களை நேசிக்கிறான் (49:9)

ஷியா (ஆதரவாளர்கள்)அபூபக்ர்(ரலி), உமர்(ரலி) அவர்கள் காலத்தில் (பிரிவினை) தனிப்பட்ட ஆதரவாளர்கள் இல்லை. அவர்களுக்குப் பிறகு உஸ்மான்(ரலி) அவர்காலத்தில்தான் உஸ்மான்(ரலி), அலி(ரலி) இவர்களில் யார் ஆட்சிக்கு தகுதியானவர் என்று கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவருக்கும் தனித்தனி ஆதரவாளர்கள் தோன்றினார்கள். இவர்களில் யாரும் ஒருவரையொருவர் விமர்சிக்க, பழிக்க முன்வரவில்லை. ஆதரவைமட்டும் தான் தெரிவித்தார்கள். அலி(ரலி) அவர்களின் ஆதரவாளர்கள் வழிகெடுத்தவன் அப்துல்லாஹ் பின் ஷபா இவன் இராக்கைச்சேர்ந்த யூதனாவான். இவன் தான் இஸ்லாத்தில் இணைந்து விட்டதாகவும், நபி(ஸல்) அவர்கள் குடும்பத்தைச்சார்ந்தவர்களை மிகவும் நேசிக்கக்கூடியவனென்றும். நபி(ஸல்) அவர்களுக்கு பிறகு ஆட்சிக்கு தகுதியானவர் அலி(ரலி) தான் என தவ்ராத்தில் இருப்பதாகக் கூறி சமுதாயத்தில் பிளவை, குழப்பத்தை உண்டு பண்ணினான். பிறகு அலி(ரலி) அவர்களையே நபி என்றும் மேலும், அவர்களையே நாயன்(அல்லாஹ்) என்றும் கூறினான். இந்தக் கூட்டத்தில் தான் மறுபிறவி, மறைவானவற்றை அறிதல், கிலாபத்திற்காக வஸியத் செய்தல் ஆகிய கொள்கைகள் உருவாயின. இதேக்கூட்டம் பல தவறான கொள்கைகளுடன் 10-க்கும் அதிகமான பிரிவுகளாக பிரிந்தது.

கத்ரியாக்கள் (விதியை மறுப்பவர்கள்)
1. "சூசன்" இவர்களை வழிகெடுத்தவன்
2. ஒரு செயல் நடப்பதற்கு முன் அல்லாஹ் அதுபற்றி அறியமுடியாது. மனிதன் அனைத்து செயல்களையும் சுயமாகவே செய்கிறான்(விதி ஏதும் இல்லை).
3. இக்கொள்கையை முஸ்லீம் சமுதாயத்தில் நூழைத்தவன் மஃபத் அல் ஜஹ்னி. இவன் சூசன் என்ற கிருஸ்தவத்தில் இருந்து இஸ்லாத்திற்கு மாறி திரும்பவும் கிருஸ்த்தவத்திற்கே சென்றுவிட்டவனிடமிருந்து இக்கொள்கையை கற்றான். மஃபத்திடதிருந்து கைலான் இக்கொள்கையைக் கற்று பிரச்சாரம் செய்தான் விதியைப் பற்றி இஸ்லாமிய சமுதாயத்தில் தவறான விளக்கம் அளித்தவன் மஃபத்தே.

முர்ஜியா (தாமதப்படுத்தவர்கள்) கொள்கை:
ஈமான் என்பது அல்லாஹ்வை அறிவதுமட்டுமே. ஈமானுக்கும், செயல்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
(உ.ம்) மார்க்கத்திற்கு முரணான செயலும்கூட ஈமானுக்கு எந்தபாதிப்பையும் ஏற்படுத்தாது. எனவே, யாரையும் காஃபிர் என்று சொல்லுதல் கூடாது. இந்தக்கருத்தை முதலில் கூறியவர் ஹசன் பின் முஹம்மத் அல்ஹனபியா. இவர் கொள்கையை உருவாக்கக் காரணம் காரிஜியாக்கள் அலி(ரலி) அவர்களையும் அவர்களைச்சார்ந்தவர்களையும், நீதிபதிகளையும் காஃபிர்கள் என்று கூறி அவர்களோடு போர் செய்ய வேண்டும் என்று கூறியதை மறுக்கவே இவ்வாறு கூறினார். இவர் இறந்த வருடம் 99 ஹிஜ்ரி. இவர் இறப்பதற்கு முன் தவ்பா (பாவமன்னிப்பு) செய்துக் கொண்டார்.

ஹிஜ்ரி 100 முதல் 150 வரை:

1) வாஸில் பின் அதா
(கொள்கை)
முஃதஜிலா (நீங்கியவன்) பெரும்பாவம் செய்தவன் மூஃமினும் இல்லை, காஃபிரும் இல்லை. மாறாக நடு(நிலை)வில் இருக்கிறான். சஹபாக்களில் ஒரு பிரிவினர் பாவிகள் என்று கூறினான். இக்கொள்கையுடையவர்களின் ஹதீஸ் அறிவிப்பு ஏதும் ஏற்றுக்கொள்ளப்படாது.

2) ஜஅத் பின திர்ஹம்
(கொள்கை)
குர்ஆன் படைக்கப்பட்ட(பொருள்)து. குர்ஆனை அல்லாஹ்வுடைய வார்த்தை எனில் அது ஒரு நாள் அழிந்து விடும். (அல்லாஹ்வின் ஒரு தன்மை அழியுமானால் அல்லாஹ்வும் அழியக்கூடியவன் என்றாகிவிடும்). குர்ஆனும் நம்மைப் போன்று படைக்கப்பட்டதே என்பது அவனுடைய தவறான கருத்து.

3) ஜஹம் பின் ஸஃப்வான் (கொள்கை) அல்லாஹ்வின் தன்மைகளை நிராகரித்தான். (நமக்குள்ள நடத்தல் பார்த்தல் போன்ற பண்புநம்மிடம் உள்ளதால்) சொர்க்கம், நரகம் இரண்டுக்கும் அதற்குரியவர்கள் சென்றபின் சொர்க்கம், நரகம் இரண்டும் சிறிது காலத்திற்குபின் அழிந்துவிடும். ஏனெனில் அதற்கு பிறகும் ஒரு வாழ்க்கை இருக்கு மென்பதை (அவனுடைய) அறிவு ஏற்றுக் கொள்ளவில்லை.
4) முகாதில் பின் ஸுலைமான்: அல்லாஹ்வின் தன்மையை ஏற்றாலும் (நம்மைப்போன்றுதான் என்ற) உருவம் கொடுத்தவன். இக்கொள்கையை யூத, கிருஸ்தவர்களிடம் இருந்து பெற்றான்.

தற்கால கொள்கை வேறுபாடான காதியானிகள், மெய் வழி, பைஜி என இப்பட்டியல் நீண்டுக்கொண்டே போகிறது.

Sunday, August 21, 2005

கிறிஸ்துவ பாதிரியார், இஸ்லாத்தைத் தழுவினார்!

மன்னர் பஹத் அவர்களின் இறுதி சடங்கு நிகழ்ச்சிகளை டிவி ஒளிபரப்பில் கண்ட இத்தாலிய நாட்டின் பிரபலமான கிறிஸ்துவ பாதிரியார், இஸ்லாத்தைத் தழுவியுள்ளார்.

உலகமே வியக்கும் வகையில் மிகச் சாதாரணமான முறையில் நடந்த மாமன்னர் பஹத் அவர்களின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சிகளே தன்னை இஸ்லாத்தின் பால் ஈர்த்தது என்று கூறியுள்ளார் இவர்.

மேலும் படிக்க:

gulfnews.com

arabnews.com

Friday, August 19, 2005

கோடைகால ஜித்தா கடற்கரை நிகழ்ச்சி

இறைவனின் அருளால் ஆகஸ்ட் 19, 2005 அன்று மாலை 4 முதல் 7 மணிவரை கோடைகால இஸ்லாமிய தமிழ் நிகழ்ச்சி இனிதே நடைபெற்றது. நிகழ்ச்சியை ஷேக் இப்ராஹீம் மதனி தொகுத்து வழங்க, சகோதரர் முஜிபுர்ரஹ்மான் உமரி வரவேற்புரை வழங்கினார்.

தாயிஃப் இஸ்லாமிய அழைப்பாளர் இப்ராஹீம் காசிமி அவர்கள் 'இவனைத் தெரிந்துக்கொள்ளுங்கள்' என்ற தலைப்பிலும் ரியாத் இஸ்லாமிய அழைப்பாளர் மஃப்ஹூம் மதனீ அவர்கள் 'பணிவும் உயர்வும்' என்ற தலைப்பிலும் சிறப்புறையாற்றினார்கள்.

நிகழ்ச்சிக்கு முஸ்லிம் மற்றும் முஸ்லிம் அல்லாத சகோதரர்கள் பலர் கலந்துக்கொண்டு சிறப்பித்தார்கள். நிகழ்ச்சியின் வீடியோ ஆடியோ இணையத்தின் மூலம் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.

Monday, August 15, 2005

இதற்கு எவரும் விதிவிலக்கல்ல!

வஞ்சிக்கப்பட்ட பெரியார்கள் எனும் பதிவில் அபூ உமர், நபிகளாரின் வழிமுறைக்கு முற்றிலும் மாற்றமான, உயர்த்தப்பட்ட கல்லறைகளில் இறந்தவர்களிடம் கையேந்துவது பற்றி குறிப்பிட்டிருந்தார்.

ஒரு பக்கம் இப்படி இருக்க, நீண்ட நெடிய காலம், நீண்டதொரு நிலப்பரப்பை கால் நூற்றாண்டுகளுக்கும் மேலாக அரை நூற்றாண்டுகளுக்கு மத்தியில் ஆட்சி செய்த மன்னர் ஃபஹத் பின் அப்துல் அஜீஸ் அவர்களின் இறுதிச் சடங்குகள் இங்கு புகைப்படமாக உங்கள் முன் வைக்கப்பட்டுள்ளது.


மன்னர் அவர்களுக்கான ஜனாஸா தொழுகை


மன்னர் அவர்களின் மிகச் சாதாரண மண்ணறை



இவ்வுலகில் எவ்வளவு உயர்ந்த அந்தஸ்த்துகளை வகித்தாலும், பதவி பட்டங்களை வாங்கிக் குவித்தாலும் இறுதியில் சென்று சேரும் இடம் மிகச் சாதாரணமானது. இதற்கு எவரும் விதிவிலக்கல்ல! எனும் அரிய தத்துவத்தை இஸ்லாம் எவ்வளவு எளிமையாக நடைமுறை வாழ்க்கையில் செயல்படுத்துகிறது என்பதற்கு மேற்கண்ட புகைப்படங்களே சாட்சி.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் ஜனாஸாத் தொழுகை
தொழுவீர்களேயானால் இறந்தவருக்காக பிராத்தனையை உரித்தாக்குங்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்கள்: அபூதாவூத், இப்னு ஹிப்பான்

நபி(ஸல்) அவர்கள் ஜனாஸாவுக்கு தொழுவிக்கும் போது பின்வருமாறு ஓதுபவர்களாக
இருந்தனர்:

அல்லாஹும்மக்ஃபிர் லிஹய்யினா
வமய்யிதினா வஷாஹிதினா
வகாயிபினா வஸம்ரின, வகபீரினா வதகரினா வவுன்ஸானா
அல்லாஹும்ம மன் அஹ்யைதஹு மின்னா ஃபஅஹிஹு
அலல் இஸ்லாம் வமன் தவஃப்ஃபைதவு
மின்னா ஃபதவஃபவு அலல் ஈமான் அல்லாஹும்ம
லாதஹரிம்னா அஜ்ரவு வலாதுளில்லினா
பஅதஹு


பொருள்:
யா அல்லாஹ்! எங்களில்
உயிரோடிருப்பவர்களையும் மரணித்து விட்டவர்களையும் இங்கே வந்திருப்பவர்களையும்,
வராமலிப்பவர்களையும், எங்களில் சிறுவர்களையும், பெரியவர்களையும் எங்களில்
ஆண்களையும், பெண்களையும் மன்னித்துவிடுவாயாக! இறைவா! எங்களில் உயிரோடு இருப்பவர்களை
இஸ்லாமிய அடிப்படையில் வாழச் செய்வாயாக!
எங்களில் மரணித்துவிடுபவர்களை ஈமானுடனே
மரணிக்க செய்வாயாக! இறைவா! இந்த மய்யத்தின் நற்செயல்களுக்குரிய கூலியை எங்களுக்கு
தடுத்துவிடாதே! இவருக்கு பிறகு எங்களை வழிதவறச் செய்து விடாதே!

அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்: அபூதாவூத், திர்மிதி



புகைப்படம்: நன்றி

Sunday, August 07, 2005

ஹிரோஷிமாவில் அணுகுண்டுவீசிய 60-வது ஆண்டு நினைவு தினம்


ஜப்பானில் ஹிரோஷிமா நகரில் அமெரிக்கா அணுகுண்டு வீசி தாக்குதல் நடத்திய 60-வது ஆண்டு நினைவுதினம் சனிக்கிழமை (06-08-2005) அனுஷ்டிக்கப்பட்டது.

ஜப்பான் பிரதமர் ஜுனிசிரோ கொய்சுமி உள்பட ஆயிரக்கணக்கான மக்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு குண்டுவீச்சில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

ஆனால் இந்த ஆண்டு அமெரிக்கா சார்பில் எந்த பிரதிநிதியும் கலந்துகொள்ளாதது குறித்து ஜப்பான் அதிர்ச்சி தெரிவித்துள்ளது. இந்த நிகழ்ச்சி குறித்து அமெரிக்க ராணுவத்துக்கு முன்கூட்டியே தகவல் தெரிவித்து, அழைப்பிதழ் அனுப்பியும் எவரும் கலந்துகொள்ளாதது வருத்தம் அளிக்கிறது என்று ஹிரோஷிமா குண்டுவீச்சு நினைவுதினக் குழு தலைவர் பிலிப் மெண்டியோலா லாங் தெரிவித்தார்.

கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஹிரோஷிமா குண்டுவீச்சில் பலியானவர்கள் குடும்பத்தினர் மற்றும் உயிர்பிழைத்தவர்கள் குடும்பத்தினர் காலையில் 8-15 மணிக்கு அமைதி நினைவுப் பூங்கா முன்பு கூடி மௌன அஞ்சலி செலுத்தினர்.

அனைத்து கோயில்கள் மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்களில் மணி ஒலித்தது. சாலையில் காரில் சென்றவர்கள், நடந்து சென்றவர்கள் என அனைவரும் ஒரு நிமிடம் தங்கள் செயலை நிறுத்திவிட்டு தலை குனிந்து குண்டுவீச்சில் பலியானவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தினர்.

60 ஆண்டுகளுக்கு முன் அதாவது 1945 ஆகஸ்ட் 6. காலை 8.15 மணிக்கு அமெரிக்காவின் பி-29 விமானம் ஜப்பானிய நகரமான ஹிரோஷிமாவின் மீது உலகின் முதல் அணுகுண்டை வீசியது. இந்த அணுகுண்டுக்குச் சூட்டப்பட்ட பெயர் "குட்டிப் பையன்' (Little boy). நான்கு லட்சம் மக்கள் வாழ்ந்து கொண்டிருந்த ஹிரோஷிமா நகரின் மையப்பகுதியில் 580 மீட்டர் உயரத்தில் இந்த அணுகுண்டு வெடித்தது. 3 மீட்டர் நீளமும் 71 செ.மீ அகலமும் கொண்ட இந்தக் குண்டின் எடை 4 டன் ஆகும். 12,500 டன் எடை கொண்ட டி.என்.டி.க்கு (Trinitro tolune - TNT) இணையான வெடிதிறன் படைத்த இந்த அணுகுண்டு வெடித்ததும் கண்களைக் குருடாக்கும் வெளிச்சம் வான்வெளியில் நிறைந்தது. காற்றின் வெப்பநிலை 7,000 டிகிரி செல்சியசுக்கு உயர்ந்தது. மணிக்கு 400 கி.மீ. வேகத்தில் சூறாவளி ஊழித் தீயாய்ப் புறப்பட்டது. குண்டு வெடித்த 15 மணித்துளியில் 12,000 மீட்டர் உயரத்திற்கு ராட்சதக் காளானாகக் கதிர்வீச்சுப் புகைமண்டலம் எழுந்து நின்றது. மரங்கள் தீப்பந்தங்களாக எரிந்தன. இரும்புத்தூண்கள் உருகி ஓடின. ஹிரோஷிமாவில் இருந்த 76,000 கட்டடங்களில் 68 விழுக்காடு சாம்பலாகின. குண்டு வெடித்த ஒரே நிமிடத்தில் 80,000 மனிதர்கள் இறந்தனர். 70,000க்கு மேற்பட்டவர் காயம் அடைந்தனர். இவர்களில் 60,000 பேர் ஓராண்டு முடிவதற்குள்ளாகவே மரணமடைந்தனர்.

மீண்டும் இரண்டு நாள்கள் கழிந்த பின்னர் - ஆகஸ்ட் 9ஆம் நாள் முற்பகல் 11-02 மணிக்கு, "குண்டு மனிதன்' (Fat man) என்று பெயரிடப்பட்ட மற்றோர் அணுகுண்டு நாகசாகி நகரின் மீது வீசப்பட்டது. நகரின் மையப்பகுதியில் 500 மீட்டர் உயரத்தில் வெடித்த இந்தக் குண்டு 22,000 டன் TNT க்கு இணையான வெடிதிறன் படைத்தது. 3.25 மீட்டர் நீளமும், 1.5 மீட்டர் அகலமும் கொண்டிருந்த இந்தக் குண்டின் எடை 4.5 டன் ஆகும். 2,80,000 மக்கள் வாழ்ந்த நாகசாகியில் குண்டு வெடித்ததும் 40,000 மக்கள் உடனடியாக இறந்து போயினர். மேலும் 34,000 பேர் காயமுற்றதாலும், கதிர்வீச்சினாலும் ஓராண்டு முடிவதற்குள் உயிரிழந்தனர். ஹிரோஷிமாவில் 13 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், நாகசாகியில் 6.7 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும் முற்றிலும் எரிந்து சாம்பலாகின. அக்கினிச் சூறாவளியில் ஹிரோஷிமா தொடர்ந்து ஆறு மணி நேரம் எரிந்தது. தொடர்ந்து கடும் மழை தொடங்கியது. சாதாரண மழையல்ல; பெரும் கதிர்வீச்சு நிறைந்த, எண்ணெய்ப் பசையோடு கூடிய திரவ மழை ஊழித் தாண்டவம் ஆடியது. இதனை வரலாறு கருப்பு மழை (Black rain) என்று பதிவு செய்துள்ளது. இன்று வரையில் அந்தப் பகுதிகளில் புல்கூட முளைப்பதில்லை. பாயும் புனலும் பாழாய்ப் போனது; வீசும் காற்றும் விஷமாய்ப் போனது. பிறக்கும் குழந்தைகள் ஊனமுற்றவர்களாகவே பிறந்து வருகிறார்கள்.

நேச நாட்டுப் படைகளிடம் பிடிபட்டு விடுவோமோ என்று அஞ்சி, ஹிட்லர் 1945 ஏப்ரல் 30 அன்று தற்கொலை செய்து கொண்டார். அதைத் தொடர்ந்து அவரது படைகளும் சரணடைந்தன. போர் முடிந்து இரு மாதங்களுக்கு மேலான நிலையில் ஜப்பான் மீது, அமெரிக்கா இந்தக் குண்டுகளை வீசியது. முதல் அணுகுண்டின் கோரத் தாண்டவத்தைச் சுழன்றடித்த நெருப்புச் சூறாவளியில் பல்லாயிரவர் கருகியதைக் கண்ட பின்னரும் மீண்டும் இரண்டு நாள்கள் கழித்து நாகசாகியின் மீது மற்றோர் அணுகுண்டை வீசிய கொடுமையினை என்னென்று சொல்ல?

புதியதாகக் கண்டுபிடித்த அழிவாயுதமாம் அணுவாயுதத்தைப் பரிசோதித்துப் பார்க்கவும், உலக நாடுகளை அச்சுறுத்தித் தனது மேலாண்மையை உறுதிப்படுத்தவும் அமெரிக்கா முற்பட்டது என்பதில் பெருமளவு உண்மை உள்ளது. குண்டு வீச்சில் தமது சொந்தங்களை இழந்து தனிமரமாகிப் போன "சான் கிச்சி டோகே' (San Kichi Toge, 1917 - 1953)என்ற கவிஞர் ""என் தந்தையைத் திருப்பிக் கொடு'' (Give me back my Father) என்ற கவிதையை எழுதியுள்ளார். காலத்தின் இருண்ட பள்ளத்தாக்குகளில் இருந்து கேட்கும் அவரது கவிதைக் கதறல் இதோ:

என் தந்தையைத் திருப்பிக் கொடு
என் அன்னையைத் திருப்பிக் கொடு
என் தாத்தாவை, பாட்டியைத் திருப்பிக் கொடு
என் பிள்ளைகளை, பெண்களைத் திருப்பிக் கொடு
என்னையே எனக்குத் திருப்பிக் கொடு
மனித குலத்தைத் திருப்பிக் கொடு
ஒவ்வொருவரையும் அவரவர்களிடம் திருப்பிக் கொடு
இந்த வாழ்க்கை நீடிக்கும் வரை அமைதியை எங்களுக்குத் திருப்பிக் கொடு நிரந்தரமான அமைதியைத் திருப்பிக் கொடு
'' ஹிரோஷிமா! ஓ! ஹிரோஷிமா!
உலகப் போரின் உச்சகட்டக் கொடுமையை மனிதகுலத்துக்கு என்றென்றும் நினைவூட்டும் வரலாற்றுச் சோகமே!
உனது சாம்பலில் இருந்து, ஃபீனிக்ஸ் பறவையாக,
நிரந்தரமான உலக அமைதி,
உறுதியாக ஒருநாள் எழுந்து வரும்.

நன்றி: தினமணி (06-08-2005)

Saturday, August 06, 2005

திருச்சி - கஸ்டமா? கஷ்டமா? (Follow-up)

திருச்சி - கஸ்டமா? கஷ்டமா? எனும் தலைப்பில் திருச்சி ஏர்போர்ட்டில் நடைபெறும் அக்கிரமங்களை குறிப்பிட்டு எழுதியிருந்தோம்.

அதன் தொடர்ச்சியாக, சமீபத்திய எமது பயணத்தில் கண்ட(கண்கொள்ளாக்) காட்சி இதோ:




"சுங்க இலாகா அதிகாரிகள், விமான நிலைய அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் உங்களுக்கு ஏதேனும் சிரமங்களோ, துன்புறுத்தல்களோ கொடுத்தால் தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்: " என்று ஆங்கிலம் மற்றும் தமிழில் (24 மணி நேர சேவையாக) உயர்அதிகாரிகளின் பெயர் குறிப்பிட்ட லோக்கல் மற்றும் செல்போன் நம்பர்களின் மிக நீண்ட பட்டியல் உள்ள தகவல் பலகைகள் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளது.

தவிர இ-மெயில் மூலம் வரும் புகார்களை உடனுக்குடன் விசாரிக்கவும், நடவடிக்கை எடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. (இ-மெயில் முகவரி: trichycustoms@eth.net)

அது மட்டுமின்றி சுங்க இலாகா அதிகாரிகளிடையே பயணிகளை நடத்தும் விதத்தில் கண்கூடாகத் தெரிந்த மாறுதல் மனதிற்கு தெம்பை அளித்தது.
__________
பின்குறிப்பு: தமிழ்முஸ்லிம் வலைப்பதிவு வாசகர்களுக்கு ஆதாரம் அளிக்க வேண்டுமென்ற எண்ணத்தில் நம் கையிலிருந்த மொபைல் போன் மூலம் க்ளிக்கி புகைப்படம் எடுத்தும், பெயர்களும் எண்களும் தெளிவில்லாமல் போனதில் மனதிற்கு கொஞ்சம் வருத்தமே!

Friday, August 05, 2005

வஞ்சிக்கப்பட்ட பெரியார்கள்

அடக்கஸ்தளங்களை வணங்காதே என்ற பெரியவருக்கு
வணக்கஸ்தளத்தை ஏற்படுத்தி பழிவாங்கிவிட்டார்கள் எம்மவர்கள்.



கையேந்தப்படுவது ஹனஃபி மத்ஹபு இமாம்களில் ஒருவரான அபூ யூசுஃப் அவர்களின் அடக்கஸ்தளத்தில் (ஈராக்).

அபூ யூசுஃப் இவர்களை இரட்சிப்பாரா?
போர் விமான குண்டுகளிலிருந்து
மண்ணறையை காப்பாற்றுவாரா?

ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டால்கூட
தனது கல்லறையை உடைக்காமல்
விட மாட்டார் என்று நம்புவோமாக

Monday, July 25, 2005

வெல்லத் தான் வேண்டுமா?

சமரசம் இதழில் அடிக்கடி இதயங்களை வெல்வது தான் நமது நோக்கமே தவிர வாதத்தில் வெல்வதல்ல என எழுதுவார்கள். இஸ்லாத்துக்கெதிரானப் பிரச்சாரங்களுக்கு நமது வலைப்பதிவர்கள் உரிய பதில்களை அளிக்க தங்கள் நேரத்தையும், உழைப்பையும் செலவிடுகிறார்கள். அவர்களது பதில்களில் அவர்களது பொது அறிவையும், இஸ்லாமிய அறிவையும் அறிய முடிகிறது. எல்லாம் வல்ல இறைவன் அவர்களுக்கு இவ்வுலகத்திலும், மறுமையிலும் அனைத்து சிறப்புகளையும் அருள துஆ செய்கிறேன்.

அவ்வாறு இஸ்லாமிய எதிர்ப்பு பிரச்சாரங்களுக்கு உரிய பதில் அளித்து முடித்த பின்னும், அவதூறாக தொடரும் பிரச்சாரங்களுக்கு நமது நேரத்தையும், உழைப்பையும் செலவிட வேண்டுமா? என்பதையும் நாம் யோசித்து பார்க்க வேண்டும்.

நபி முஹமது(ஸல்) அவர்களிடமே இறைவன், தூதுத்துவத்தை மக்களுக்கு விளக்குவதோடு அவர்களது பணி முடிந்ததாக கூறுகிறான். இஸ்லாத்திற்கு எதிரான பிரச்சாரங்களில், நாத்திகப்பிரச்சாரம், கிறித்துவப் பிரச்சாரம், இந்துத்துத்துவ பிரச்சாரம் என பல பிரச்சாரங்களும் ஒரே நேரத்தில் இஸ்லாத்தின் மீது தாக்குதல் தொடுத்துள்ளதை உணர முடிகிறது.

இவர்களுக்கு நாம் பதில் அளித்த பின்னும் தொடர்ந்து வரும் தாக்குதல்களுக்கும், நம் நேரத்தையும் உழைப்பையும் செலவளிக்கத் தேவையில்லை. இஸ்லாமிய மகளிர் தொடர்பான விவாதங்களுக்கும் இது பொருந்தும். இறைவனின் சட்டத்துக்கான காரணங்கள், குர்ஆனிலும், ஹதீஸிலும் உள்ளது தவிர நாம் கூறும் காரணங்கள் எல்லா நேரங்களிலும் பொருத்தமாக இருப்பதில்லை. உரிய காரணங்களை இறைவனே அறிவான். சில சட்டங்களை நாம் ஏற்க வேண்டும். இறைவன் அவற்றை நம் நன்மைக்கே வகுத்துள்ளான் என நம்ப வேண்டும். அவ்வளவு தான்.

என் கருத்தை யாரும் தவறாகப் புரிந்து கொள்ள வேண்டாம். அதனை மீண்டும் சுருக்கித் தருகிறேன். நாம் இஸ்லாத்திற்கெதிரான பிரச்சாரங்களுக்கு விரிவான அளவில் உரிய பதில் அளித்த பின்னும் தொடரும் பிரச்சாரங்களுக்கு பதில் அளிக்க நம் நேரத்தையும், உழைப்பயும் செலவளிக்க வேண்டியதில்லை.

Sunday, July 24, 2005

ஆர். எஸ். எஸ் காரர்கள் பயன்படுத்தும் சொல்

சமீபத்தில் எனக்கு ஒரு மின் அஞ்சல் வந்தது. சில மாதங்களாக இரு தரப்பினருக்கு இடையே நடக்கும் கருத்து மோதலின் தொடர்ச்சியே இந்த மின் அஞ்சல். அந்த மின் அஞ்சலில் எதிர் தரப்பினரைக் குறிப்பிட 'மொட்டையன்' என்ற சொல்லை ஒருவர் பயன்படுத்தி உள்ளார். முஸ்லிம்கள் கத்னா செய்யப்பட்டதைக் குறிப்பிட ஆர். எஸ். எஸ் காரர்களும், தமிழ் நாட்டில் இந்து முன்னணியினரும் பயன்படுத்தும் சொல் அது. எனவே, அந்த சொல்லை தவிர்த்து கொள்ளுமாறு அந்த மின் அஞ்சலை எழுதியவரிடம் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். அத்துடன், சமூக ஒற்றுமையைக் கருதி இந்த கருத்து மோதலை உடனடியாக நிறுத்துமாறு இரு தரப்பினரையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

Thursday, July 21, 2005

இந்திய முஸ்லிகளின் தேசியப்பற்று

கடந்த புதன்கிழமை(19-07-2005)வாஷிங்டனில் நடந்த பத்திரிக்கையாளர் கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங் இவ்வாறு கூறியுள்ளார்.






"இஸ்லாமிய நம்பிக்கைகளைக் கடைபிடிக்கும் 150 மில்லியன் முஸ்லிம்கள் பிரஜைகள் இந்தியாவில் இருக்கிறார்கள். இந்திய முஸ்லிகளின் தேசியப்பற்று பற்றி சொல்ல வேண்டுமானால் இத்தனை முஸ்லிம்களில் ஒரே ஒருவர் கூட அல்-காய்தாவோ அல்லது பிற தீவிரவாத அமைப்புகளிலோ சார்ந்து இல்லை என்பதை இங்கே இறுமாப்புடன் சொல்லிக் கொள்கிறேன்."

ஆங்கிலத்தில் அவர் ஆற்றிய இந்த உரையை CNN உள்பட அனைத்து டிவி சேனல்களும் ஒளிபரப்பிய போது செய்தியாளர்கள் அவையில் பலத்த கரகோஷம் எழும்பியது.

ஆனால், தினமலம் உள்பட சில தமிழ் பத்திரிக்கைகள், பிரதமர் பேசிய முழு உரையையும் குறிப்பிட்டுவிட்டு மேற்கண்ட வரிகளை மட்டும் கத்திரி போட்டுள்ளது ஏனோ?

Friday, June 24, 2005

பிளாக்கரின் உதவியும் உபத்திரவமும்

படங்களை Tinypic மூலம் வலைப்பதிவில் ஏற்றும் முறை பற்றி கடந்த மார்ச் மாதம் ஒரு பதிவு இட்டிருந்தேன். ஆனால் தற்போது பிளாக்கரே படங்களை "பதிவேற்ற வசதி" செய்து தருகிறது. இதனை நண்பர்கள் பயன்படுத்துகிறார்களா என்று தெரியவில்லை. செய்திகளை இடும் அந்த பக்கத்தில் b i என்று எழுதப்பட்டிருக்கும் வரிசையில் என்ற படமும் இருக்கும். அதனை சொடுக்கி பயன்படுத்தி பாருங்கள்.

பிளாக்கரின் இன்னொரு வசதியையும் பலபேர் பயன்படுத்துவதில்லை. நீங்கள் மேற்கோள் காட்டும் செய்திகளை வாசகர்களுக்கு எடுத்துக்காட்ட நீங்கள் சுட்டிக்காட்ட விரும்பும் வார்த்தைகளை Select செய்த பிறகு என்ற படத்தை சொடுக்கவும். பிறகு கீழ்கண்டவாறு தெரியும்.
உதாரணத்திற்கு
இவ்வளவு வசதிகளையும் வழங்கிய இந்த பிளாக்கரின் உபத்திரவம் என்னவென்றால் புதிதாக பதியும் செய்திகள் மற்றும் மறுமொழிகளில் இட்டவரின் பெயர்கள் யுனிகோடு தமிழில் தெரிவதற்கு பதிலாக "???????" என்று தெரிகிறது.

இப்பிரச்சினையிலிருந்து விடுபட பெயரை ஆங்கிலத்தில் தெரியும்படி மாற்றினேன். புதிய பதிவுகளும், முன்பு தமிழில் பெயர் தெரிந்த பெயர்களும் மாறுகிறதே தவிர "???????" என்று தெரிந்த பதிவுகள் அப்படியேதான் தொடர்கிறது.

இதனை வைத்து சில நண்பர்கள் பிளாக்கர் பிறகு காசு கேட்டாலும் கேட்குமோ என்று சந்தேகத்தை எழுப்புகிறார்கள். அதற்கு வாய்ப்பு இல்லை என்றே எண்ணுகிறேன். காரணம் இலவச வலைப்பதிவு அளிப்பவர்களில் இதுவரை பிளாக்கரை தட்டிக்கொள்ள யாரும் இல்லை. படிப்படியாக எத்தனையோ வசதிகளையும் நமக்கு தந்திருக்கிறது. இதனை தருபவர்களும் சாதாரண ஆட்களும் இல்லை. இதுவல்லாமல் வலைப்பதிவு வசதிகளை msn மற்றும் Yahoo உட்பட பல தளங்கள் தர ஆரம்பித்திருக்கிறது. . ஆகவே போட்டிகள் இருக்கும்வரை நமக்கு கவலை இல்லை என நம்புவோமாக.

Monday, June 13, 2005

இணையதளம் ஒன்றை தாக்கல் செய்ய

ஒவ்வொரு தேடு தளமும் இணைய தளங்களை தலைப்புவாரியாக தொகுத்து தருகிறது. இதனை தொகுப்பதற்கு தானாக முன்வரும் நபர்களை அவர்கள் கொடுக்கும் விபரங்களில் இருந்து தேர்ந்தெடுக்கிறார்கள். இதில் http://www.dmoz.org/ தொகுக்கும் குறிப்புகளை வைத்தே பல தேடல்தளங்களும் தமது தொகுப்புகளை வழிநடத்திச் செல்கிறது.

நீங்கள் தமிழில் இஸ்லாம் சம்பந்தமான இணையதளமோ, வலைப்பதிவுவோ நடத்துபவர்களாக இருந்தால் அப்பக்கத்தை தாக்கல் செய்ய இந்த சுட்டியைசொடுக்கி உங்கள் தளத்தின் விபரங்களை இணைக்கவும்.

இஸ்லாம் பற்றிய Dmoz தொகுப்பை பார்வையிட இங்கு சொடுக்குங்கள்.