Saturday, March 24, 2007

ராமதாஸ் ஒரு மோசடித் தலைவர் - வெற்றிகொண்டான்

சமீப காலமாக டாக்டர் ராமதாஸ் தி.மு.க. அரசைக் கடுமையாக விமர்சித்து வருகிறார். ஒரே கூட்டணியில் இருந்து கொண்டே அரசைத் தாக்குவது, தி.மு.க. தரப்பில் பெரும் அதிருப்தியை உண்டு பண்ணியிருக்கிறது. ராமதாஸின் இந்தத் ‘தாக்குதல்’ அரசியலைக் கடுமையாக விமர்சிக்கிறார் தி.மு.க.வின் நட்சத்திரப் பேச்சாளர் வெற்றிகொண்டான்.

‘‘டாக்டர் ராமதாஸ் வில்லன் அரசாங்கம் நடத்தி வருகிறார். இது அவருக்குப் பழக்கப்பட்டதுதான். ஏற்கெனவே பாண்டிச்சேரியில் இப்படிச் செய்து பழக்கமிருக்கிறது. இப்போது தமிழகத்தில் கைவரிசையைக் காட்டத் துவங்கியிருக்கிறார். தன்னையும், தன்னுடைய மகனையும், அரசியலில் வைத்துக் கொண்டு தி.மு.க. ஆட்சியை மிரட்டும் வேலையில் சமீபகாலமாக ஈடுபட்டு வருகிறார்.

இப்படி தி.மு.க. அரசைத் தாக்குவதற்குக் காரணம், தன்னை முன்னிலைப்படுத்தவேண்டும் என்ற எண்ணம்தான். தன்னை முன்னிலைப்படுத்தி ‘கலைஞர் இடத்தை’ப் பிடித்து விடலாம் என்று நினைக்கிறார். ஆனால் கலைஞர் இடத்தைக் கடவுளாலேயே கூட பிடிக்க முடியாது. கடவுளே கலைஞரின் வீட்டு வாயில்படியில் நிற்கும் காலம் வந்துவிட்டது. அதற்கு சத்ய சாய்பாபாவே சாட்சி. கலைஞரை யாரேனும் குறைசொல்லக் கருதினால், தன்னுடைய நாட்டு மக்களை அவமானப்படுத்தியதாக அர்த்தம். யாரையும், எவனையும் நம்பி ஆட்சி நடத்தத் தேவையில்லை. நாடு என் தலைவர் பக்கம் நிற்கிறது. மக்கள் என் தலைவர் பக்கம் நிற்கிறார்கள்.

சாதாரணமாக இவர்களுக்கெல்லாம் கலைஞர் பதில் சொல்லத் தேவையில்லை. ஆனால், கூட்டணி தர்மத்துக்காக தலைவர் அவர்களுக்குப் பதில் சொல்கிறார். நான் கலைஞரைக் கேட்டுக் கொள்கிறேன். பெரியார்தான் ஐயா. இடையில் வருகிற எந்த தலைவனையும் ‘ஐயா’ என்று அழைக்கக் கூடாது. பெரியாரை ஐயா என்ற அழைத்த வாயால் இந்த மாதிரி ஆட்களையெல்லாம் ஐயா என்று சொல்வது அசிங்கம். கலைஞருக்கு எத்தனை பெருந்தன்மை. தன்னைவிட வயதில் சிறியவரான ராமதாஸை, மருத்துவர் ஐயா என்று மேடைதோறும் கூறுகிறார். அந்த மரியாதையைக் கூட தக்க வைத்துக்கொள்ள ராமதாஸ§க்குத் தெரியவில்லை.

இவர் எந்தக் கூட்டணியில் இருந்தாலும் அந்தக் கூட்டணியைப் பற்றி வெளிப்படையாக விமர்சிப்பதுதான் இவரது வாடிக்கை. அரசியல் நாகரிகம் தெரியாதவர். ஆட்சியில் குறைகள் இருந்தால், முதல்வரை நேரில் சந்தித்துச் சொன்னால், அதைக் களைந்துவிடப் போகிறார். ஆனால், அப்படிச் செய்யாமல் பத்திரிகைகளுக்கு அறிக்கைகள் கொடுப்பது ஏன்?

பிரச்னைகளை வளர்க்க வேண்டுமென்பதற்குத்தானே! என்னுடைய கோட்டை என்று இறுமாப்புடன் கூறிவந்த ராமதாஸ§க்கு, விருத்தாச்சலத்தில் ஒரு நடிகர் கொடுத்த அடியிலிருந்து இன்னும் மீளாமல் ஏதோதோ உளறிக் கொண்டு இருக்கிறார். இப்படியெல்லாம் பேசுவது, அறிக்கை விடுவது எல்லாம் ராமதாஸின் தலைக்கனத்தின் அறிகுறி.

ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். அரசியல் தலைவராக டாக்டர் ராமதாஸை எந்தக் காலத்திலும் யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இவருடைய மகன் டாக்டர் அன்புமணி கூட மக்களின் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்படவில்லை. எங்கள் கட்சியிடம் இருந்த ஒரே ஒரு ராஜ்ய சபா சீட்டைக் கூட கலைஞர் அவர் மகனுக்காக விட்டுக் கொடுத்தார். இது எவ்வளவு பெரும்தன்மை! அதையெல்லாம் கொஞ்சமாவது ராமதாஸ் நினைத்துப் பார்த்ததுண்டா?

நானும் ராமதாஸ் மீது நிறைய குற்றச்சாட்டுகளைச் சொல்ல முடியும். எந்த அறிவாளியையும் தன் பக்கத்தில் வைத்துக்கொள்ள ராமதாஸ் விரும்பியதில்லை. பண்ருட்டி ராமச்சந்திரன், பேராசிரியர் தீரன். இவர்களெல்லாம் உதாரணங்கள். ‘ராமதாஸ§க்கு எங்களால் கப்பம் கட்ட முடியவில்லை’ என்று இவர் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர்களே சொல்லியிருக்கிறார்கள்.

இந்த லட்சணத்தில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்காகச் செயல்படுகிற தலைவன் என்றார். இப்படி மோசடியான தலைவர் யாரும் இருக்க முடியாது.

தானே பாண்டிச்சேரி முதல்வர், தானே தமிழ்நாட்டு முதலமைச்சர், தானே இந்தியாவின் பிரதமர் இப்படியெல்லாம் கற்பனை செய்து கொண்டு ராமதாஸ் தூங்குகிறார். எந்த நேரத்தில் யாருக்கு நண்பன், யாருக்கு விரோதி என்று அடையாளம் காணமுடியாத ஒரு நபர் இந்தியாவில் இருக்கிறாரென்றால் அது ராமதாஸ்தான்.

நேருவை, இந்திராவைக் கடந்து வந்தவர் கலைஞர். ஜெயப்பிரகாஷ் நாராயணனைக் காப்பாற்றிய தலைவர். இந்த மாதிரி சின்ன ஆட்களுக்கெல்லாம் அவர் பதில் சொல்லத் தேவையில்லை. ஒரு விஷயத்தை இங்கே சொல்றேன். எங்களை மாதிரி தோற்றவர்களும் யாருமில்லை. எங்களை மாதிரி ஜெயித்தவர்களும் யாரும் இல்லை. உயர்வு, தாழ்வு எல்லாவற்றையும் பார்த்துவிட்டோம். அதனால் இதெல்லாம் எங்களுக்கு சாதாரண விஷயம்.

நொடிக்கு நொடி சுய மரியாதை பேசி வரும் ராமதாஸ், தன்னையும் தன் மகனையும், ஐயா, சின்ன ‘ஐயா’ என்று அழைப்பதைத்தான் விரும்புகிறார். இதையெல்லாம் மாற்றிவிட்டு கலைஞரையும் தி.மு.க.வையும் விமர்சனம் செய்யட்டும். என்னைப் பொறுத்த வரை கூட்டணியில் இருந்து கொண்டு அந்தக் கட்சியையும், ஆட்சியையும் விமர்சனம் செய்யும் ராமதாஸ், ஒரு பிளாக் மெயில் அரசியல்வாதி. தி.மு.க. என்பது ஒரு பனங்காட்டு நரி. அது ராமதாஸ் போன்றவர்களின் சலசலப்புக்கு அஞ்சாது’’ என்று சொல்லி முடிக்கும்போது வெற்றிகொண்டானின் கண்களில் உண்மையான தி.மு.க. தொண்டனின் சீற்றம்.

நேர்காணல்: திருவேங்கிமலை சரவணன்
நன்றி: குமுதம் 28 மார்ச் 2007

Wednesday, March 21, 2007

இந்திய மரபும் பார்ப்பன திரிபும்

நூல்: இந்திய மரபும் பார்ப்பன திரிபும்
பேராசிரியர் பெரியார் தாசன் உரையின் எழுத்து வடிவம்
வெளியீடு: கீழைக்காற்று வெளியீட்டகம்
10 அவுலியா தெரு
எல்லீசு சாலை
சென்னை - 600 002
40 பக்கங்கள்
விலை ரூ. 12

"இந்துத் தத்துவ மரபு என்பது பார்ப்பன மரபு. இந்தியத் தத்துவ மரபு தமிழர், தெலுங்கர், மராத்தி, குஜராத்தி... மக்களின் மரபு. இது பார்ப்பன மரபு அல்ல.

வாழ்க்கை நெறியாகவும், சிந்தனையின் தெளிவாகவும் விளங்குவதே தத்துவம். இது தான் இந்தியத் தத்துவ மரபு. இந்த அறிவே இல்லாமல் வாழ்வே மாயம்; மண்ணாவதே திண்ணம் என்று பிதற்றுகிறது இந்துத் தத்துவ மரபு"

இந்நூல் 2003ஆம் ஆண்டில் - தஞ்சாவூரில், மக்கள் கலை இலக்கியக் கழகம் நடத்திய 'பார்ப்பன பயங்கரவாத எதிர்ப்பு மாநாட்டில், "இந்தியத் தத்துவ மரபு, இந்துத் தத்துவ மரபில்லை; இல்லை; இல்லவே இல்லை!" என்ற தலைப்பில் பேராசிரியர் பெரியார் தாசன் ஆற்றிய கருத்தரங்க உரை.

Tuesday, March 20, 2007

இட ஒதுக்கீடு - ஒரு மார்க்சிய லெனினியப் பார்வை

நூல்: இட ஒதுக்கீடு - ஒரு மார்க்சிய லெனினியப் பார்வை
வெளியீடு: புதிய ஜனநாயகம்
110 என்.எஸ்.கே. சாலை
கோடம்பாக்கம்
சென்னை - 600 034
124 பக்கங்கள்
விலை ரூ. 30

சமூக நீதிக்காரர்களால் உரிமை பாராட்டப்படும் இட ஒதுக்கீடு எப்படி, எப்போது, யாரால் கொண்டு வரப்பட்டது?

எந்த நோக்கங்களுக்காக எந்த அடிப்படையில், எந்த சாதி-வர்க்க நலன்களுக்காக நடைமுறைப்படுத்தப்படுகிறது?

இட ஒதுக்கீடு என்பது சமூக விடுதலைக் கோட்பாடா? இது பார்ப்பனியத்தை வீழ்த்துமா?

இட ஒதுக்கீடு தான் பெரியாரியத்தின் உயிராதாரமா?

பார்ப்பனரல்லாத அனைவரும் சூத்திரர்கள்-பிற்பட்டவர்கள் என்பது சரியா?

இட ஒதுக்கீடு விவகாரத்தில் பார்ப்பனர்களுக்கும், சூத்திர ஆதிக்க சாதிகளுக்குமிடையே நடக்கும் சண்டையில் சூத்திர ஆதிக்க சாதிகளை ஆதரிக்க மறுப்பது மறைமுக பார்ப்பனியமா?

-இவற்றுக்கும் இட ஒதுக்கீடு தொடர்பான இதர கேள்விகளுக்கும் விளக்கமளிப்பதோடு, இட ஒதுக்கீடு பற்றிய மார்க்சிய-லெனினியவாதிகளின் நிலைப்பாட்டையும் நடைமுறைச் செயல்பாட்டையும் சுருக்கமாகத் தொகுத்தளிக்கிறது, இந்நூல்.