Friday, December 30, 2005

கடவுள் -  இணையத் தளத்திற்கு எதிர்வினை

கடவுள் - இணையத் தளத்திற்கு எதிர்வினை

வழிகேடர்களில் ஒரு பிரிவினரான ரஷாத் கலீஃபா குழுவினர் 'கடவுள்' - என்ற பெயரில் தமிழில் ஓர் இணையத் தளம் நடத்துகின்றனர். ரஷாத் கலீஃபாவின் குர் ஆன் ஆங்கில மொழிபெயர்ப்பின் முதல் பதிப்பில் தாஹா அத்தியாயத்தின் இறுதி இரு வசனங்களும் உள்ளன. ஆனால், அந்த மொழி பெயர்ப்புக்கு இரண்டாம் பதிப்பு வெளியிடப்பட்ட போது அந்த இரு வசனங்களையும் நீக்கி விட்டார். 19 என்ற எண்ணை வைத்து அவர் போட்ட கணக்கிலும், முதல் பதிப்புக்கும், இரண்டாம் பதிப்புக்கும் வித்தியாசம் உள்ளதாகப் படித்துள்ளேன். அதனை மனிதக் குறைபாடு எனச் சொல்கிறார்கள். சராசரி மனிதனுக்கு அந்த தவறு நிகழலாம். ஆனால், இறைத்தூதராக தன்னைக் கூறிக்கொள்ளும் ஒருவருக்கு இது போன்ற தவறு நிகழலாமா? முஹமது நபி(ஸல்) அவர்களின் ஒழுக்கத்திலும், நேர்மையியிலும் அவரது சமகாலத்து முஸ்லிமல்லாதவர்கள் குறைகாணவில்லை. அவர் பிரச்சாரம் செய்த ஓரிறைக் கொள்கைக்காகவே முஹமது நபி(ஸல்) அவர்களை அக்கால குரைஷிகள் எதிர்த்தார்கள். ஆனால், இக்குழுவினரின் நிறுவனர் ரஷாத் கலீஃபா பேராசிரியராகப் பணியாற்றிய கல்லூரி ஆய்வகத்தில் ஒரு சிறுமியை பாலியில் ரீதியாக துன்புறுத்தியதாக காவல் துறையில் வழக்கு பதிவாகியுள்ளதை விக்கிபீடியாவில் வந்துள்ள அவரைப் பற்றிய கட்டுரையில் படித்து தெரிந்து கொள்ளலாம். விண்வெளிப்பயணத்துக்கு தன் ஆன்மா பயணம் செய்ததாகவும், அங்கு தான், இறைவன் தன்னை தூதராக அறிவித்ததாகவும் ரஷாத் கலீஃபா கூறியுள்ளார். போலிச் சாமியார்கள், போலி அவுலியாக்கள் போன்றோர் கூறுவதற்கும் இதற்கும் என்ன வித்தியாசம்? மவ்லவி பி.ஜெய்னுல் ஆபிதீன் அவர்களோடு நமக்கு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், இக்குழுவினரோடு அவர் நேரடி விவாதம் செய்ததையும், தன் குர் ஆன் தமிழ் மொழிபெயர்ப்பின் அடிக்குறிப்புகளில் இக்குழுவினருக்கு உரிய பதில் அளித்துள்ளதையும் பாராட்டக் கடமைப்பட்டுள்ளோம்.

Wednesday, December 28, 2005

பழைய பத்திரிக்கையும் சாப்பாட்டு மேஜையும்

பழைய செய்தி பத்திரிக்கைகளை சாப்பாடு மேஜைக்கு பயன்படுத்துவது மிகவும் பயனுள்ளதாக தெரிகிறது. பத்திரிக்கை புதிதாக இருக்கும்போது கண்ணுக்கு படாத சில விஷயங்கள் சாப்பிடும்போது பட்டுவிடுகிறதல்லவா.

மார்ச் 17, 2005 தேதியிட்ட சென்னை பதிப்பு தினமணியில் என் கண்ணில் பட்ட செய்தி ஒன்றை இணைய வாசகர்களுக்காக பகிர்ந்துக்கொள்கிறேன்.

Monday, December 19, 2005

அமெரிக்காவை அலட்சியபடுத்தி...

Image hosted by TinyPic.com


இந்தியாவும் பாகிஸ்தானும் உலகத்தின் இரண்டாவது இயற்கை எரிவாயு (LNG) வளத்தைக்கொண்ட ஈரானுடன் கைகோர்த்து ராட்சதகுழாய்கள் மூலம் எரிவாயுவை பாகிஸ்தான் வழியாக இந்தியாவிற்கு கொண்டுவரும் திட்டத்தில் கையொப்பம் இட்டுள்ளது.


Image hosted by TinyPic.com


2600 கி.மீ நீளமுள்ள இந்த கட்டுமானபணி வரும் 2007 ல் துவங்கி 2010 ல் முடிவடைந்து, முதல் குழாய் எரிவாயு வினியோகம் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஈரான் ஆகிய மூன்று நாடுகளின் பொருளாதாரத்தையும், வேலைவாய்ப்புக்கான சூழலையும் பலப்படுத்துவதாக அமையும். மேலும் அண்டை நாடுகளான இந்தியா, பாகிஸ்தான் இடையே நல்லுறவையும் பரஸ்பர நெருக்கத்தையும் பலப்படுத்துவதாக அமையும் என்று நம்பப்படுகிறது.

40 பில்லியன் அமெரிக்க டாலருக்கான ஒப்பந்தத்தில் ஏற்கனவே கையெழுத்திட்ட இந்தியா, ஈரானுடனான தன் உறவை மீண்டும் பலப்படுத்தியுள்ளது.

உலக்காவலனாக தன்னைத்தானே அறிவித்துக்கொள்ளும் அமெரிக்கா, இந்த நடவடிக்கையை எதிர்த்து குரல் எழுப்பியுள்ளது.

இஸ்லாமாபாத்தில் நடந்த பத்திரிகையாளர்கள் கூட்டத்தில் பேசிய பெட்ரோலியத்துறை அமைச்சர் மணிசங்கர ஐயர், அமெரிக்காவின் எச்சரிக்கையை இந்தியா அலட்சியபடுத்தி இத்திட்டத்தில் இறங்கும் என்று கூறியுள்ளார்.

அமெரிக்காவிற்கு எதிராக, அணுஆயுத நாடுகளான பாகிஸ்தானும், இந்தியாவும் ஈரானுடன் நட்புகொண்டு களமிறங்கியிருப்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

Monday, December 12, 2005

லஞ்சம் வாங்கிய பா.ஜனதா-காங். எம்.பிக்கள்

கேள்வி கேட்க லஞ்சம் வாங்கிய பா.ஜனதா-காங். எம்.பிக்கள் சிக்கினர்: 7 பேர் உடனடி சஸ்பெண்டு
புதுடெல்லி, டிச. 12-

இந்திய அரசியலில் மீண்டும் ஒரு லஞ்ச விவகாரம் சூறாவளி போல இன்று கிளம்பி உள்ளது.
இந்த தடவை லஞ்ச ஊழலில் சிக்கி இருப் பவர்கள் பாரதீயஜனதா, காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த 11 எம்.பி.க்களாகும். இவர்களை பிரபல இந்தி செய்திச்சானலான "ஆஜ்தக்'' டி.வி. பொறி வைத்து பிடித்து நாட்டு மக்களுக்கு அடையாளம் காட்டி உள்ளது.

பாராளுமன்ற எம்.பி.க்கள் இதுவரை காரியம் சாதித்து கொடுக்கத்தான் அன்பளிப்பு என்ற பெயரில் லஞ்சம் வாங்கி வருவதை கேள்விப்பட்டு இருக்கிறோம். ஆனால் மக்கள் பிரச்சினைகள் பற்றி பாராளுமன்றத்தில் கேள்விகள் கேட்பதற்கும் கூட அவர்கள் கையை நீட்டி பணம் வாங்குகிறார்கள் என்பதை முதன் முதலாக ஆஜ்தக் டி.வி. படம் பிடித்து இன்று வெட்ட வெளிச்சம் ஆக்கி விட்டது.

ஆஜ்தக் டி.வி.யின் சிறப்பு குழு ஒன்று மிகவும் துணிச்சலாக செயல்பட்டு இந்த லஞ்ச பேர்வழிகளை வீடியோவில் படமாக்கியது. எம்.பி.க்களின் இத்தகைய செயல்பாடு, பா.ஜனதா, காங் கிரஸ் தலைவர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

நாடெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள இந்த சம்பவம் பற்றிய முழு விவரம் வருமாறு:-

பாராளுமன்றத்தில் தினமும் முதலில் கேள்வி நேரம் நடைபெறும். ஒரு மணி நேரம் இந்த கேள்வி நேரத்துக்காக ஒதுக்கப்படுவதுண்டு. அப்போது முக்கிய பிரச்சினைகள் குறித்து எம்.பி.க்கள் கேள்வி எழுப்பி சம்பந்தப்பட்ட துறை மந்திரிகளிடம் இருந்து பதில் பெறலாம்.
ஆனால் கேள்வி நேரத்தில் என்ன கேள்விகள், யாரிடம் கேட்கப் போகிறோம் என்பதை எம்.பி.க்கள் தெளிவாக முன்னதாகவே எழுதிக் கொடுத்து விட வேண்டும். அந்த கேள்விகளுக்கு மத்திய மந்திரிகள் பதில் அளிப்பார்கள்.

அந்த கேள்வி-பதில் தொடர்பாக எந்த உறுப்பினர் வேண்டுமானாலும் துணைக் கேள்விகள் கேட்கலாம் அதற்கும் மந்திரி பதில் அளிப்பார்.

உறுப்பினர்கள் பெரும்பாலும் தங்கள் தொகுதி மக்கள் பிரச்சினை சம்பந்தப்பட்ட கேள்விகளைதான் எழுப்புவார்கள். இப்படி கேள்வி கேட்பதற்கு கூட சில எம்.பி.க்கள் லஞ்சம் வாங்குவதாக கூறப்படுகிறது. சில தனியார் நிறுவனங்கள் அரசின் திட்டங்கள், செயல்பாடுகள் தங்களுக்கு சாதகமாக மாற வேண்டும் என்ற நோக்கத்துக்காக எம்.பி.க்களுக்கு பணம் கொடுத்து கேள்வி கேட்க வைப்பார்கள் என்று கூறப்படுகிறது.

இவை தவிர சபையில் சில கேள்விகளை கேட்க தொழில் அதிபர்கள் லஞ்சம் கொடுப்பதுண்டு.
எம்.பி.க்களின் இந்த லஞ்ச வேட்டையை நாட்டு மக்களுக்கு அம்பலப்படுத்த ஆஜ்தக் டி.வி. முடிவு செய்தது. கேள்வி கேட்பதற்கு தயவு தாட்சண்யம் இல்லாமல், கூசாமல் லஞ்சம் வாங்கும் அரசியல் வாதிகள் யார், யார் என்று அலசி ஆய்வு நடத்தப்பட்டது. அதில் 11 எம்.பி.க்கள் லஞ்ச பெருச் சாளிகளாக இருப்பது தெரிய வந்தது.

லஞ்சம் வாங்கும் எம்.பி.க்களை கையும் களவுமாக `பொறி' வைத்து பிடிக்க அவர்கள் தீர்மானித்தனர். இதற்காக சிறப்புக்குழு ஒன்று உருவாக்கப்பட்டது. அந்த குழுவினர் சாதாரண நபர்கள் போல சென்று குறிப்பிட்ட எம்.பி.க்களை அணுகினார்கள்.

"பாராளுமன்றத்தில் எங்களுக்காக கேள்விகள்கேட்க வேண்டும். எவ்வளவு எதிர்பார்க்கிறீர்கள்?'' என்று அப்பாவியாக கேட்டனர். அவர்களை நம்பிய எம்.பி.க்கள் பேரம் பேசினார்கள். ஒவ்வொரு கேள்விக்கும் தங்களுக்கு ரூ.30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை தர வேண்டும் என்று எம்.பி.க்கள் கேட்டதாக தெரிகிறது.

இதை டி.வி. நிருபர்கள் குழு ஏற்றுக் கொண்டது.

சமீபத்தில் ஒரு நாள் ஆஜ்தக்குழு குறிப்பிட்ட 11 எம்.பி.க்களை பணத்துடன் சந்தித்தது. என்னென்ன கேள்விகள் கேட்க வேண்டும் என்ற ரசீதுடன் பணக் கட்டுக்களையும் கொடுத்தனர். எம்.பி.க்களும் அதை சிரித்த முகத்துடன் வாங்கிக் கொண்டனர்.

இதை ஆஜ்தக் குழுவின் ஒரு பிரிவு மிக துணிச்சலாக ரகசியமாக வீடியோவில் படம் பிடித்தது. சில நிமிடங்களே இந்த காட்சிகள் ஓடுகிறது. `ஆஜ்தக்' டி.வி. இன்று இந்த காட்சிகளை ஒளிபரப்பியது.

எம்.பி.க்கள் லஞ்சம் வாங்கிய காட்சிகளைப் பார்த்த பல்வேறு கட்சித் தலைவர்களும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். நாடெங்கும் இந்த செய்தி காட்டுத் தீ போல பரவியது. லஞ்சம் வாங்கிய எம்.பி.க்கள் யார், யார்? என்பதை அறிந்து கொள்ள நாட்டு மக்களிடம் ஆர்வமும், எதிர்பார்ப்பும் ஏற்பட்டது.

நீண்ட ஆய்வுக்குப்பிறகு லஞ்சம் வாங்கிய 11 எம்.பி.க்கள் பெயர் விவரம் தெரியவந்தது. இதில் 6 எம்.பி.க்கள் பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர்கள். ஒருவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்.
3 பேர் பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்தவர்கள். மற்றொருவர் ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்தவராவார்.

லஞ்சம் வாங்கிய சிக்கி உள்ள 11 எம்.பி.க்களின் பெயர் விவரம் வருமாறு:-
1.அன்னா சாகேப் பாட்டீல் (மராட்டியம்), 2. ஒய்.ஜி. மகாஜன் (மராட்டியம்), 3. பிரதீப் காந்தி (சத்தீஷ்கர்), 4. சுரேஷ் சந்தல் (இமாசல பிரதேசம்), 5. சந்திர பிரதாப்சிங் (மத்திய பிரதேசம்), 6. மேல் சபை எம்.பி. சந்திரபால்சிங் லோதா (ஒரிசா), (இவர்கள் 6 பேரும் பா.ஜனதாவை சேர்ந் தவர்கள்.)

7. ராம்சேவாக் சிங் (குவாலியர்) இவர் காங்கிரஸ் எம்.பி., 8. மனோஜ்குமார் (ஜார்க்கண்டு),(இவர் ராஷ்டீரியா ஜனதா தளம் எம்.பி.).

9. நரேந்திர குமார் குஸ்வகா (உத்தரபிரதேசம்), 10. லால்சந்திரா (உத்திரபிரதேசம்), 11. ராஜாராம் பால் (உத்திர பிரதேசம்) (இவர்கள் மூவரும் பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்தவர்கள்).
பா.ஜனதா எம்.பி.க்கள் லஞ்சம் வாங்கிய தகவல் அறிந்ததும் மூத்த தலைவர்களான வாஜ்பாயும், அத்வானியும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் 6 பா.ஜனதா எம்.பி.க்களை கட்சியில் இருந்து சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டனர். இதை பா.ஜனதா தலைவர் எல்.கே.அத்வானி இன்று டெல்லியில் நிருபர்களிடம் உறுதிப்படுத்தினார்.

அவர் மேலும் கூறியதாவது:-
பொது வாழ்க்கையில் ஈடுபடுபவர்கள் தூய்மையாக இருக்க வேண்டும், ஒழுக்கத்துடன் செயல்பட வேண்டும் என்று இப்போது நமது நாட்டில் விவாதங்கள் நடந்து கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் எம்.பி.க்கள் லஞ்சம் வாங்கி இருப்பது வெட்கக் கேடானது. இது மிகவும் முக்கியமான பிரச்சினையாகும்.

எம்.பி.க்கள் லஞ்சம் வாங்கிய பிரச்சினை குறித்து நான் இன்று காலை சபாநாயகர் சோம்நாத் சாட்டரஜியை தொடர்பு கொண்டு பேசி னேன். எம்.பி.க்கள் லஞ்சம் வாங்கியது பற்றி கட்சியின் உயர்மட்டக்குழு விசாரணை நடத்தும். இதை மிக முக்கிய மான பிரச்சினையாக அலசவ உத்தரவிட்டுள்ளேன்.

தேவைப்பட்டால் நாங்கள் இதுபற்றி பாராளுமன்ற உரிமைக்குழுவுக்கும் பரிந்துரை செய்வோம். இன்னும் இது தொடர்பாக எனக்கு முழுமையான விவரம் வரவில்லை. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரத்தில் இந்த பிரச்சினைக்கு விடை காணப்படும்.
இவ்வாறு எல்.கே.அத்வானி கூறினார்.

பா.ஜனதாவின் அதிரடி நடவடிக்கையை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியும் லஞ்சம் வாங்கிய தன் கட்சி உறுப்பினரை அதிரடியாக சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டது. காங்கிரஸ் எம்.பி. நீக்கப்பட்ட தகவலை காங்கிரஸ் பொது செயலாளர் அம்பிகாசோனி நிருபர்களிடம் தெரிவித்தார்.

Sunday, December 11, 2005

புரட்சித் தலைவியும் கண்ணீர்த் துளிகளின் சாபமும்

புரட்சித் தலைவியும் கண்ணீர்த் துளிகளின் சாபமும்

சக்கரியா

அப்துல் நாசர் மதனி என்னும் குடிமகனும் பிற குடிமக்களும் குற்றப்பத்திரிகையோ விசாரணையோ இல்லாமல் கோயமுத்தூர் சிறையில் அடைக்கப்பட்டு ஏழு நீண்ட வருடங்கள் கழிந்துவிட்டன. இந்த விஷயத்தில் மதனியின் பெயர் எடுத்துச் சொல்லப்படுவது அவர் ஓர் அரசியல் கட்சியின் தலைவர், பிரபலமானவர் என்பதனால் மட்டுமே. மற்ற கைதிகளும் குடியுரிமைகளும் குடும்பங்களும் மனித உறவுகளும் கொண்டவர்களே.

இவர்கள் ஒவ்வொருவரும் ஆட்சியமைப்பு, தனது கைகளால் நடத்திக்கொண்டிருக்கும் மறைவற்ற, நம்ப முடியாததென்று தோன்றக்கூடிய, மனித உரிமை மீறýன் இரைகள். நாம் குற்றவாளிகளாக இருந்தாலும் இல்லையென்றாலும் உங்களுக்கோ எனக்கோ இது நேர்ந்திருக்கலாம்; இனி நேராது என்றும் சொல்வதற்கில்லை.

நாம் நம்பிக்கை வைத்திருக்கும் ஜனநாயக அமைப்பு எந்த அளவுக்குத் தொட்டால் நொறுங்கிவிடக்கூடியது என்றும் நாம் ஓட்டுப்போட்டு உருவாக்கும் ஆட்சியமைப்புகள் எந்த அளவுக்கு இதயமில்லாதவை என்னும் அச்சம் தரும் உண்மையின் கொடூர உதாரணங்கள்தாம் மதனியும் அவர் கூட்டாளிகளும்.

ஏழு ஆண்டுகள் கழிந்துவிட்ட இந்த மனித உரிமை அழிப்புக்கு முன்னால் ஊடகங்களும் அறிவுஜீவிகளும் சமூகப் பணியாளர்களும் மெüனமாக நிற்பதைக் காணலாம். கோக்கோகோலா போன்ற முட்டாள் பானத்துக்கு எதிராகச் சிலர் நடத்தும் போராட்ட நாடகங்களைப் பார்க்கும்போது என் ரத்தம் கொதிப்பதும் இந்தக் காரணத்தால்தான். கோக்கோ கோலாவைவிட எத்தனையோ மடங்கு வýமை கொண்ட, பயங்கரங்கொண்ட ஆக்கிரமிப்பாளர்களாகத்தான் நமது ஆட்சியமைப்புகள் பெரும்பாலும் நடந்துகொள்கின்றன. நமது அரசு அமைப்புகளின் வஞ்சனைக்கும் வாக்குறுதி மீறலுக்கும் கபடத்துக்கும் கொடூரத்துக்கும் பக்கத்தில் வர எந்த கோக்கோ கோலாவால் முடியும்? எந்த பெப்ஸியால் முடியும்?

மதனியும் சக கைதிகளும் செய்த குற்றம் என்னவென்று சொல்ல அவர்களைச் சிறை வைத்திருப்பவர்களின் நாவு எழுவதில்லை. அதே சமயம் ஏழு ஆண்டுகளாக அவர்களுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டிருக்கிறது. மதனி தீவிர நோய்க்கு ஆளாகியிருப்பவர். மற்ற கைதிகளும் அவரவர்களுடைய கடுமையான வாழ்க்கைச் சிக்கல்களை அனுபவித்துக்கொண்டிருப்பவர்கள். அவர்கள் குற்றம் புரிந்தவர்கள் என்று வைத்துக்கொண்டாலும், அவர்களுக்குக் கிடைக்கக் கூடியதைப் போலவோ அதைவிட அதிகமாகவோ தண்டனைக் காலத்தைச் சிறையில் கழித்திருக்கிறார்கள். குற்றப் பத்திரிகை வழங்குவதில் மட்டும் அவர்களுக்கு விலங்கு பூட்டிய கரங்களுக்கு பலவீனம். நீதிமன்றத்தின் முன் விசாரணைக்காக அவர்களை ஆஜர்படுத்துவதில் யாருக்கோ பயம்.

யாருடைய நெஞ்சங்களோ அதை நினைத்து அடித்துக்கொள்கின்றன. ஒருவேளை இந்த நபர்களின் சிந்தனை இப்படியிருக்கலாம்:

கட்டுக்கதைகள் அம்பலமாகும் அந்த பயங்கர நாளை எதிர்கொள்வதைவிட மதனியையும் சக மனிதர்களையும் விலங்குகளைப் போல் கூண்டில் அடைத்து வைப்பதே நல்லது - 'மோத'லுக்கு (என்கவுன்டருக்கு!) இரையாக அவர்களது சடலங்களை செüகரியமான ஒரு நாள் பார்க்கும்வரை. நாம் வாழ்வது இருபத்தி யொன்றாம் நூற்றாண்டின் இந்தியாவிலாம்! சுதந்திரத்தின் ஐம்பத்தெட்டு ஆண்டுகளைக் கடந்த இந்தியாவிலாம்!

இந்தக் கைதிகள் அடைக்கப்பட்டிருப்பது திருவள்ளுவரின் தமிழ்நாட்டில். சுப்ரமணிய பாரதியின் தமிழ்நாட்டில். பெரியாரின் தமிழ்நாட்டில். தமிழ்நாட்டின் இரண்டு அரசுகள்தாம் இந்தக் கொடூரமான அரசியல் அமைப்புச் சட்டமீறலுக்கும் மனித உரிமை மீறலுக்குமான பொறுப்பைப் பங்கிட்டுக்கொள்கின்றன. அவர்களைக் கைது செய்ததும் குற்றப்பத்திரிகையில்லாமல் இரண்டாண்டுகளுக்கு மேலாகச் சிறையில் தள்ளியதும் தி.மு.க. அரசு. கலைஞர் கருணாநிதியென்ற பண்பாட்டு நாயகரும் அறிவாளியுமான நபர் முதல்வராக இருந்த அரசு. தி.மு.க. அரசிடமிருந்து இந்தப் பிசாசுத்தனமான மரபை அ.இ.அ.தி.மு.க. ஏற்றுக் கொண்டும் ஐந்தாண்டுகள் கடந்துவிட்டன. 'புரட்சித் தலைவி'யும் சந்தேகமில்லாமல் ஆட்சித் திறனில் நிபுணருமான செல்வி ஜெயலýதாதான் முதல்வர். ஆனால், ஜெயலýதாவும் இந்த அவலமான போý நாடகத்தைத் தொடர அவருக்கேயான காரணங்களும் இருக்கலாம். இந்தக் கைதிகளின் வாழ்க்கையை நசுக்கித் தேய்த்து உருவான ரத்தத் திரைக்குப் பின்னால் யாரெல்லாமோ காப்பாற்றப்படுகிறார்கள். யார் யாருடையதோ பாவங்களும் குற்றங்களும் பொய்களும் என்றென்றைக்குமாக மறைக்கப்படுகின்றன. அவர்கள் எந்த அளவுக்கு வýமையானவர்களாக இருக்க வேண்டும்! இல்லையென்றால் இந்த அளவுக்கு வெளிப்படையான அப்பட்டமான அரசியல் சட்ட மீறலுக்கு இரண்டு முதலமைச்சர்களை விளக்குப் பிடிக்கவைக்க அவர்களால் எப்படி முடிந்தது?

இந்தக் கைதிகளின் மேல் சுமத்தப்பட்டிருக்கும் குற்றம் 1998இல் கோயமுத்தூரில் எல்.கே. அத்வானி பங்கேற்ற நிகழ்ச்சியில் நடந்த குண்டுவெடிப்பு. அந்த குண்டுவெடிப்பால் மிக அதிக ஆதாயம் பெற்றது அத்வானியின் கட்சியும் அது தலைமை தாங்கிய முன்னணியுமே என்று தமிழ்நாட்டில் கண்களைத் திறந்து வைத்திருக்கிற எந்தச் சிறுபிள்ளைக்கும் தெரியும்.

சுவாரஸ்யமான, ஆனால் அச்சம் தரக்கூடிய ஒரு புள்ளிவிவரத்தை அண்மையில் காண நேர்ந்தது. பி.ஜே.பி. ஆட்சிக் காலத்தில் இந்தியாவில் பொதுக் கூட்ட நிகழ்ச்சிகளில் நடந்த குண்டுவெடிப்புகளின் கணக்குகள் அவை. நவீன இந்தியாவின் வரலாற்றில் எந்த ஆட்சிக் காலத்திலும் இந்த அளவு குண்டு வெடிப்புகள் நிகழ்ந்ததில்லையாம். அது மட்டுமல்ல ஒவ்வொரு சம்பவமும் குறிதவறாததும்கூட. அதாவது ஆட்சிப் பீடத்தை அவ்வப்போதைய சிக்கல்களிýருந்து புகைத்திரை மூலம் காப்பாற்றியவை, ஊடகங்களின் கவனத்தையும் மக்களின் கவனத்தையும் திசை திருப்பியவை.

தமிழ்நாட்டில் 1998இல் பி.ஜே.பி. துளிர்விட்டதற்குப் பின்னால் என்னென்ன உண்மை வெடிகள் மறைந்திருக்கின்றவென்று யாருக்குத் தெரியும்? அவர்களுக்குத் தமிழ்ச் சூரியனின் கீழே ஓர் இடம் கொடுத்தது கலைஞரின் வலுவான கரங்களாக இருக்கலாம். திராவிடத் தன்மானத்துக்கும் மதச் சார்பின்மைக்கும் முற்போக்குக் கொள்கைகளுக்கும் உயர்த்தியிருந்த அந்தக் கரங்கள் ஒருபோதும் செய்யக் கூடாத பாவம் அது. மதனியும் சக கைதிகளும் அனுபவிக்கும் நீதி மறுப்பு, மனித உரிமை மறுப்புப் பற்றி தி.மு.க. அர்த்தமுள்ள மெüனத்தைக் கடைப்பிடிக்கிறது என்பதும் கவனத்துக்குரியது.

எல்லா மத நூல்களும் ஒரே குரýல் எடுத்துச் சொல்கிற ஓர் உண்மை: நீதிமானின் சாபம் குலத்தை நாசமாக்கும். ஏழு ஆண்டுகளாகக் குற்றப்பத்திரிகையோ விசாரணையோ இல்லாமல் சிறையிலடைக்கப்பட்டுள்ள மதனியும் சக மனிதர்களும் குற்றமற்றவர்கள் என்றால் புரட்சித் தலைவி கொடூரமான தார்மீக அச்சுறுத்தலை எதிர்கொள்ள நேரும். ஒருவேளை இந்த விஷயத்தில் அவர் ஆதரவற்றவராகவும் இருக்கலாம். அவரது கைகளைக் கட்டிப்போடும் வýமையுள்ளவர்கள் இதன் பின்னால் இருக்கலாம். ஆனால், பிரஜைகளின் ரத்தத்தின் பொறுப்பு அரசியின் மீதே படியும். இந்தக் கைதிகளின் குடும்பத்தினர் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஒவ்வொன் றும் அணையாத தீச்சுவாலைகளாக, புரட்சித் தலைவி ரட்சிப்புத் தேடும் ஆலயங்களுக்கும் ஆன்மீகச் சன்னி தானங்களுக்கும் உண்மைக்காகச் சாட்சி சொல்லப் பின்தொடர்ந்துகொண்டேயிருக்கும். நீதியின் சாபத்தைவிட, கண்ணீரின் சாபத்தைவிட அழிவில்லாத இன்னொரு சாபமில்லை.


தமிழில்: சுகுமாரன் நன்றி: காலச்சுவடு டிசம்பர் 2005

Saturday, December 10, 2005

குர்பானிச் சட்டங்கள்

குர்பானியின் பிராணிகள்

நபி(ஸல்) அவர்கள் உயர்தரமான கொம்புள்ள ஆட்டைக் குர்பானி கொடுத்தார்கள். வாய், கால்கள், கண்கள் ஆகியவை கறுப்பு நிறமாக அந்த ஆடு இருந்தது.
அறிவிப்பாளர் : அபூஸயீத் (ரலி)
நூல்கள் : திர்மிதி,அபூதாவுத், நஸயீ, இப்னுமாஜா

நாங்கள் ஹுதைபியா உடன்படிக்கையின் போது 7 பேர் ஒரு ஒட்டகத்தையும், 7 பேர் ஒரு மாட்டையும் அறுத்தோம்
அறிவிப்பாளர் : ஜாபிர் (ரலி)
நூல்கள் : முஸ்லிம், அஹ்மத், திர்மிதி,அபூதாவுத், நஸயீ, இப்னுமாஜா

குர்பானி பிராணிகளின் வயது

"முஸின்னத்" என்ற பருவமுடையத் தவிர மற்றதை நீங்கள் அறுக்க வேண்டாம். அது கிடைப்பது உங்களுக்கு சிரமமாக இருந்தால் "ஜத்அத்" பருவமுடைய பிராணிகளை அறுக்கலாம் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர் : ஜாபிர் (ரலி)
நூல்கள் : முஸ்லிம், அஹ்மத், அபூதாவுத், நஸயீ, இப்னுமாஜா

முஸின்னத் என்றால் 5 வயதான ஒட்டகத்திற்கும் 2 வயது முடிந்த ஆடு, மாடுகளுக்கும் கூறப்படும். ஜத்அத் என்றால் 4 வயதான ஒட்டகத்திற்கும் 1 வயது முழுமையடைந்த ஆடு, மாடுகளுக்கும் கூறப்படும் என இப்னுல் அஸீர் கூறுகிறார்கள்.

குர்பானி கொடுப்பது ஒட்டகமாக இருந்தால் அது 5 வயது முழுமையாகியதாக இருக்கவேண்டும். ஆடுமாடுகளாக இருந்தால் அவை இரண்டு வயதை முழுமையாகியதாக இருக்கவேண்டும். இவ்வாறு இல்லாதிருப்பின் இது போன்ற வயதில் பிராணி கிடைக்காதிருப்பின் நான்கு வயது முடிந்த ஒட்டகத்தையோ, ஒரு வயது பூர்த்தியடைந்த ஆட்டையோ, மாட்டையோ குர்பானி கொடுக்கலாம்.

பிராணிகளை நன்கு பராமரித்தல்

நாங்களும், இதர முஸ்லிம்களும் மதீனாவில் குர்பானிப் பிராணியைக் கொழுக்கச் செய்வோம்
அறிவிப்பாளர் : உமாமா (ரலி)
நூல்கள் : புகாரி

ஒரு குடும்பத்திற்கு ஒன்று போதும்

நபி(ஸல்) அவர்களின் காலத்தில் உங்களுடைய குர்பானி கொடுக்கும் பழக்கம் எப்படி இருந்தது? என்று அபூ அய்யூப் அல் அன்சாரி (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் நபி(ஸல்) அவர்கள் காலத்தில் ஒருவர் தனக்காகவும் தன் குடும்பத்தினருக்காகவும் ஒரு ஆட்டைக் குர்பானி கொடுப்பார். அதை அவர்களும் உண்பார்கள், பிறருக்கும் உண்ணக் கொடுப்பார்கள். தற்போது மக்கள் பெருமைக்காக செய்யும் நிலை இன்று ஏற்பட்டுவிட்டது. (அதாவது ஒரு குடும்பத்தினரே பல ஆடுகளை குர்பானி கொடுக்கும் நிலை ஏற்பட்டுவிட்டது) என்று பதில் கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அதாஉ இப்னு யஸார் (ரலி)
நூல்கள் : திர்மிதி, இப்னுமாஜா, அல்முஅத்தா

நபி(ஸல்) அவர்களின் குடும்பத்தினர் ஒரு ஆட்டையோ, இரண்டு ஆட்டையோ குர்பானி கொடுத்தனர் என்ற சுன்னத்தை நான் அறிந்த பிறகு (நான் ஒரு ஆட்டை குர்பானி கொடுப்பதால்) என்னை என் குடும்பத்தினர் "கல் நெஞ்சன்" என்று கருதுகின்றனர். (நான் பல ஆடுகளை கொடுக்காததால்) என் அண்டைவீட்டார் என்னை "கஞ்சன்" என்கின்றனர்.
அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)
நூல்கள் : இப்னுமாஜா

குர்பானி கொடுக்கத் தகுதியற்ற பிராணிகள்

கொம்பில், காதில் பாதி அளவோ அல்லது அதை விட கூடுதலாகவோ உடைந்த, அறுபட்டவைகளை (ஆடு, மாடுகளை) குர்பானி கொடுப்பதை நபி(ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.
அறிவிப்பாளர் : அலி (ரலி)
நூல்கள் : அஹ்மத், அபூதாவுத், திர்மிதி, நஸயீ, இப்னுமாஜா

நன்கு வெளியில் தெரியும் படியான நோய், நன்கு வெளியில் தெரியும் படியான நொண்டி, கால் எலும்புக்குள் மஜ்ஜை இல்லாத அளவுக்கு ஒடிந்த கால் ஆகிய நான்கு பிராணிகள் குர்பானி கொடுக்க அனுமதிக்கப்படாதது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர் : பரா இப்னு ஆஸிப் (ரலி)
நூல்கள் : அஹ்மத், அபூதாவுத், திர்மிதி, நஸயீ, இப்னுமாஜா

முழுமையாக காதில்லாதவை, அடியோடு கொம்பில்லாதவை, பார்யோ தெரியாதவை, பலவீனத்தால் தானாக எழுந்து நடக்க இயலாதவை, கால் ஒடிந்தவை ஆகியவைகளை குர்பானி கொடுத்திட நபி(ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.
அறிவிப்பாளர் : உத்பா இப்னு அப்தஸ்ஸீலமிய்யி (ரலி)
நூல்கள் : அஹ்மத், அபூதாவுத்

கொம்பில் பாதி ஒடிந்த பிராணி.
காதில் பாதி அறுப்பட்டது.
தெளிவாகத் தெரியும் படியான மாறுகண் உள்ளவை.
தெளிவாகத் தெரியும் நோய் உள்ளவை.
நன்கு தெரியும் படியான நொண்டி.
கால் எலும்பு முறிந்து விட்ட நொண்டி.
காதில்லாதவை.
கொம்பில்லாதவை.
பார்வையில்லாதவை.
தானாக எழுந்து நடக்க முடியாத பலவீனமானவை.
இவைகளை கண்டிப்பாக குர்பானி கொடுக்கக்கூடாது.

காயடிக்கப்பட்ட பிராணிகள் கூடும்

காயடிக்கப்பட்ட இரண்டு பெரிய கொம்புகளுடைய இரண்டு ஆடுகளை நபி(ஸல்) அவர்கள் குர்பானி கொடுத்தார்கள்.
அறிவிப்பாளர் : அபூ ராபிஉ (ரலி)
நூல்கள் : அஹ்மத், ஹாகீம்

இரண்டு பெரிய கொம்புகளுடைய நன்கு கொழுத்த இரண்டு ஆடுகளை நபி(ஸல்) அவர்கள் குர்பானி கொடுத்தார்கள்.
அறிவிப்பாளர் : ஆயிஷா (ரலி)
நூல்கள் : அஹ்மத், இப்னுமாஜா, பைஹகீ, ஹாகீம்

அறுக்கும் நேரம்

ஹஜ்ஜுப்பெருநாள் அன்று நபி(ஸல்) அவர்களுடன் நான் தொழுதேன். தொழுதுமுடித்து நபி(ஸல்) அவர்கள் திரும்பிய போது, அங்கே எலும்புகளும், அறுக்கப்பட்ட குர்பானி பிராணிகளும் கிடந்தன. தொழுகை முடியும் முன்பே இவை அறுக்கப்பட்டுவிட்டன என்பதை அறிந்த நபி(ஸல்) அவர்கள் "தொழும் முன்பு அறுத்தவர் அதே இடத்தில் வேறு ஒன்றை அறுக்கட்டும். தொழும் வரை அறுக்கவில்லையானால் அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்கட்டும்" என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் : ஜீன்துப் இப்னு ஸீப்யான் (ரலி)
நூல்கள் : புகாரி, முஸ்லிம்

தொழும் முன் குர்பானி கொடுத்தால் (அதற்கு பகரமாக) மீண்டும் அறுக்கட்டும் என்று ஹஜ் பெருநாள் அன்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அனஸ் (ரலி)
நூல்கள் : புகாரி, முஸ்லிம்


அறுக்கும் போது கூற வேண்டியவை

நபி(ஸல்) அவர்கள் இரண்டு பெரிய கொம்புகளுடைய இரண்டு ஆடுகளை குர்பானி கொடுத்தார்கள். அப்போது அவர்கள் தன் பாதங்களை அந்த இரண்டு ஆடுகளின் கழுத்தில் வைத்து மிதித்துக் கொண்டு "பிஸ்மில்லாஹ்" என கூறி "அல்லாஹுஅக்பர்" என்று கூறியும் அவ்விரண்டையும் தன் கையால் அறுத்ததை நான் பார்த்தேன்.
அறிவிப்பாளர் : அனஸ் (ரலி)
நூல்கள் : புகாரி, முஸ்லிம், அஹ்மத், அபூதாவுத், நஸயீ, திர்மிதி, இப்னுமாஜா

அறுத்த பிறகும் துஆச் செய்யலாம்

ஆயிஷாவே! கத்தியை கொண்டு வா! அதை கல்லில் நன்கு தீட்டு! என்று கூறி நபி(ஸல்) அவர்கள் ஆட்டைப் பிடித்தார்கள். அதை சாய்த்து படுக்க வைத்தார்கள். பின்பு அறுத்தார்கள். பின்பு "பிஸ்மில்லாஹ் அல்லாஹும்ம தகப்பல் மின் முஹம்மதின் வஆல முஹம்மதின், வமின் உம்மதி முஹம்மதின்" என்று கூறினார்கள். குர்பானி கொடுத்தார்கள்.
அறிவிப்பாளர் : ஆயிஷா (ரலி)
நூல்கள் : முஸ்லிம், அஹ்மத், அபூதாவுத்

ஒட்டகத்ததை நிற்க வைத்து அறுக்க வேண்டும்

ஒரு மனிதர் ஒட்டகத்தை படுக்க வைத்து அறுப்பதைக் கண்ட இப்னு உமர் (ரலி) அவர்கள், "அதை நீ எழுப்பி நிற்க வைத்து முஹம்மது (ஸல்) அவர்கள் வழியில் அறுப்பீராக!" என்றார்கள்.
நூல்கள் : புகாரி, முஸ்லிம்

குர்பானி இறைச்சியை உண்ணலாம், சேமிக்கலாம்

மூன்று நாட்களுக்கு மேல் குர்பானி இறைச்சியை உண்ண நபி(ஸல்) அவர்கள் தடை செய்திருந்தார்கள். பின்பு உண்ணுங்கள், சேமித்து வைத்துக் கொள்ளுங்கள், தர்மம் செய்யுங்கள் என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் : ஜாபிர் (ரலி)
நூல்கள் : புகாரி, முஸ்லிம், நஸயீ

உரிப்பவருக்கு குர்பானி இறைச்சியோ தோலையோ கூலியாக தரக்கூடாது

நபி(ஸல்) அவர்கள் குர்பானி கொடுத்த ஒட்டகங்களை மேற்பார்வையிட என்னை நியமித்தார்கள். அதன் இறைச்சி, தோல், அதன் மீது கிடந்த (கயிறு போன்ற) பொருட்களை தர்மம் செய்யுமாறும், அதை உரித்தவருக்கு அவற்றில் எதையும் கூலியாகக் கொடுக்கவும் கூடாது என்றும் கட்டளையிட்டனர். நாங்கள் அதற்கு தனியாக கூலி கொடுப்போம்.
அறிவிப்பாளர் : அலி (ரலி)
நூல்கள் : புகாரி, முஸ்லிம்

குர்பானி கொடுப்பவர் கடைபிடிக்க வேண்டியவை

உங்களில் குர்பானி கொடுக்க எண்ணியவர், துல்ஹஜ் பிறையை கண்டால் அவர் தமது நகங்களை, மயிர்களை (குர்பானி கொடுக்கும் வரை) களையக் கூடாது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர் : உம்முஸலாமா (ரலி)
நூல்கள் : முஸ்லிம், அஹ்மத், நஸயீ, இப்னுமாஜா, திர்மிதி, அபூதாவுத்

குர்பானி கொடுக்கப்பட வேண்டிய நாட்கள்

அய்யாமுத் தஷ்ரீக் முழுவதும் அறுப்பதற்கு ஏற்ற நாளாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்
அறிவிப்பாளர் : இப்னு முத்இம் (ரலி)
நூல்கள் : இப்னுஹிப்பான்

Friday, December 02, 2005

ஜனாஸா குளிப்பாட்டுபவர் கவனத்திற்கு

1. மூன்று முறை குளிப்பாட்டுதல் வேண்டும். தேவைக்கேற்ப அதிகரித்துக் கொள்ளலாம்.

2. ஒற்றைப் படையாகவே குளிப்பாட்டுதல் அமைய வேண்டும்.

3. குளிப்பாட்டும் நீரில் இலந்தை இலை அல்லது உடலை சுத்தப்படுத்தக் கூடிய சோப்பு போன்றவற்றை பயன்படுத்தலாம்.

4. கடைசித்தடவையாக குளிப்பாட்டும் தண்ணீரில் ஏதாவது வாசனைப் பொருட்களை உபயோகிக்கலாம். (ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டியநிலையில் மரணித்தவரைத்தவிர)

5. கொண்டைகளை அவிழ்த்துவிட்டு நன்றாக கழுவவேண்டும்.

6. தலைமுடியை தொங்க விட வேண்டும்.

7. பெண்களுக்கு மூன்று பின்னல் போட்டு தொங்க விடவேண்டும்.

8. வலது பக்கமிருந்து குளிப்பாட்டுதலை தொடங்க வேண்டும்.

9. ஏதாவது நிர்பந்தம் ஏற்பட்டாலே தவிர ஆண் ஜனாஸாவை ஆண்களும் பெண் ஜனாஸாவை பெண்களும் குளிப்பாட்ட வேண்டும். (கணவன் மனைவி இதற்கு விதிவிலக்கு)

10. மரணித்தவரின் எல்லா ஆடைகளையும் நீக்கி ஒரு துணித் துண்டினால் தேய்த்து கழுவ வேண்டும்.

11. ஆண் ஆண்களுடன் இருக்கும் போது மறைக்கவேண்டிய மற்றும், பெண் பெண்களுடன் இருக்கும் போது மறைக்கவேண்டிய உருப்புகளை மறைத்து அதில் கண்படாது, கைபடாது கவனமாக இருக்க வேண்டும்.

12. மையத்திடம் காணும் குறைபாடுகளை பகிரங்கப்படுத்தக்கூடாது.

13. குளிப்பாட்டுவதற்காக இறைவனின் திருப்பொருத்தத்தை தவிர கூலியை எதிர்ப்பார்க்கக்கூடாது.

14. குளிப்பாட்டியவர் குளித்துக்கொள்ளுதல் சுன்னத் ஆகும். (கட்டாயமல்ல)

15. குளிப்பாட்டும் முன்பு குளிக்கதேவையில்லை. கைகளை கழுவிக்கொண்டாலே போதும்.

இன்னும் பல விஷயங்களை அருகில் உள்ள மார்க்க அறிஞர்களைக் கேட்டுத் தெரிந்துக்கொள்ளுங்கள்.

நன்றி: COCG