Wednesday, January 18, 2006

ஹெச்.ஜி.ரசூலுக்கு எதிர்வினை-2

ஹெச்.ஜி.ரசூலுக்கு எதிர்வினை௨-2

திண்ணையில் ஹெச்.ஜி.ரசூல் என்பவரின் கட்டுரை படித்தேன்.
இரண்டு வகை இஸ்லாம் உண்டு என்று 'கண்டுபிடித்த' முன்னாள் பிரதமர் வாஜ்பாய் வழியில் சிந்தித்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டியுள்ளது.

இந்திய முஸ்லிம்களைப் பொறுத்த வரை, பரம்பரை பரம்பரையாக முஸ்லிம்களாகத் தொடர்பவர்களில் சமீப காலங்களாகத்தான் சரியான இஸ்லாமை ஆய்ந்தறிந்து பின்பற்றுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்பது உண்மை.

இந்தியாவில் இஸ்லாம் பரவத்தொடங்கியப் போது ஆர்வத்தின் காரணமாக சில முஸ்லிம்களால் செய்துக்கொள்ளப்பட்ட 'சமாளிப்புகள்'(Adjustments) இஸ்லாமிய சமூகம் மீதான பண்பாட்டுத் தாக்குதலுக்கு வழி வகுத்தன. (இவ்வாறு இஸ்லாமிய நெறியிலிருந்து பிறழ்ந்த சில முஸ்லிம்களின் செயல்பாடுகளை வைத்தே இஸ்லாமை இரண்டாக்கிப்பார்க்க நினைக்கின்றன ஆதிக்க சக்திகள்).

இதன் விளைவாகத்தான் இந்திய முஸ்லிம் சமூகத்தில் இஸ்லாமல்லாத பழக்க வழக்கங்கள் (எ.கா., தாலி, தர்கா வழிபாடு, அத்வைத கோட்பாடு போன்றவை) செல்லுபடியாயின.எனினும் அவை இஸ்லாமின் அடிப்படையான ஓரிறைக் கோட்பாட்டையும் சாதிகளற்ற;அடிமைத்தனமற்ற சமுதாயத்தையும் பெரிதாக பாதிக்க இயலவில்லை. (முஹம்மது நபிக்கு ஒரு சிலை வைத்து தர முடியவில்லையே என்ற ஆதங்கம் தான் முஸ்லிம்கள் மீதான 'அவாள்களின்' இத்தனை "கரிசனத்"துக்கும் காரணம் என்ற கி.வீரமணியின் கூற்று இங்கு நினைவுகூரத்தக்கது)

சமூக மேலாதிக்க மனப்பான்மையில் ஊறிய சக்திகள் கிறிஸ்தவத்திலும் சாதியை புகுத்தி இந்திய கிறிஸ்தவத்தை 'இந்து மயமாக்கியதைப் போல இஸ்லாமிய சமூகத்தில் சாதியை புகுத்துவதில் வெற்றி காண முடியாத நிலையில், 'கலாச்சார வண்ணத்தை' மாற்றிக்கொண்ட முஸ்லிம்களை (தற்காலிகமாக) விட்டு வைப்போம், சரியான இஸ்லாமைப் பின்பற்றுகிறவர்களை முதலில் கவனிப்போம் என்று 'நேசமாக' ப் புறப்பட்டனர். 'அடிப்படை' விளங்காத தீவிரவாதிகளுடன் 'சரியான முஸ்லிம்களையும் இஸ்லாமையும் சம்பந்தப்படுத்தி 'தான் சார்ந்த' நலன்களுக்காக வரிந்து கட்டுகின்றனர்.

இதன் தொடர்ச்சியாகத்தான் மு.பி.வாஜ்பேயியின் 'இரண்டு வகை இஸ்லாம்' பற்றிய பேச்சையும், 'இந்தியாவில் முஸ்லிம்கள் வாழ வேண்டுமானால் ராமனையும் கிருஷ்ணனையும் ஏற்றுக்கொண்டு வாழட்டும்' என்ற பரிவாரக் கூச்சல்களையும் நாம் பார்க்க வேண்டும்.

வஹாபிஸம் என்ற பெயரால் ஹெச்.ஜி.ரசூல்களால் பழிக்கப்படும் சரியான இஸ்லாம் தான் இன்றைக்கும் வரதட்சணை, புரோகிதம், வட்டி, சிசுக்கொலை, (பெண்)கருக்கலைப்பு போன்ற தீமைகளுக்கு எதிராக போராடி வருகிறது.(கிரெக்க புராண அத்வைத பூச்சுக்களிலிருந்து முஸ்லிம்களை மீட்டெடுத்த ஒரு அறிஞரின் பெயராலாயே வஹாபிசம் என்ற வார்த்தை வழங்கி வருகிறது.)

இன்றைக்கு 'பண்பாட்டு இஸ்லாம்' என்பதை பேசுகிற ஹெச். ஜி. ரசூல்களின் கூப்பாடு சமூக மேலாதிக்க மனப்பான்மை கொண்டவர்களுக்குத்தான் 'புரோகிதத்தை'யும் பூர்ஷ்வாதனத்தையும் வளர்க்க உதவும்.

1 comment:

அருளடியான் said...

நேசகுமார், சிஃபி.காமில் தான் எழுதியுள்ள கட்டுரையை அவரே பாராட்டி தன் வலைப்பதிவில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அக்கட்டுரையில் கவிஞர் ஹெச்.ஜி. ரசூலின் 'வகாபிசமும் நவீன முதலாளித்துவமும்' என்ற திண்ணை கட்டுரையை உச்சி மோந்து பாராட்டியுள்ளார். இவர் கிருஷ்னகுமார் என்பவருக்கு கொடுத்த நேர்காணலில், வரதட்சனை வாங்காமல் திருமணம் செய்து கொள்ளும் முஸ்லிம் இளைஞர்களை பயங்கரவாதிகளாகாச் சித்தரித்துள்ளார். இப்படியே போனால், அவர் தீண்டாமைக்கு எதிராக சாதிமறுப்பு திருமணம் செய்து கொள்ளும் இந்துக்களையும் தேசவிரோதிகள் என்று சொல்வாரோ?