Sunday, April 03, 2005

முஸ்லிம்களும் மீடியாவும் - விவாதம்

தலைப்பின் விளக்கம்:
முஸ்லிம்கள் மீடியாவில் பின்தங்கியிருப்பதன் காரணங்கள்.. .. ..

நோக்கம்:
உலக அளவில் இரண்டாவது மிகப்பெரிய மார்க்கமான இஸ்லாத்தில், அதனை பின்பற்றுபவர்கள், கல்வி, மீடியா போன்ற விஷயங்களில் தூரநோக்கு பார்வை இல்லாமல் பின்தங்கியே இருப்பது கசப்பான விஷயமாகும். அதிக நாட்களுக்கு பிறகு "அல்-ஜஸீரா" என்ற அரபி செய்தி சேனல் வந்தாலும் அதனையும் முடக்குவதற்கு அமெரிக்கா முயன்று வருகிறது. அப்படியிருந்தாலும் தற்போது அரபிமொழி சேனல்கள் பல வந்துவிட்டன.

ஆனால், உலக முஸ்லிம்கள் அனைவருக்கும் பொதுவாக இதுவரை முழுநேர ஆங்கில சேனல் இல்லை. மீடியா என்பது சேனலோடு இல்லாமல் இணையம் மற்றும் இன்னும் பல்வேறு வழிகளில் வியாபித்து இருப்பதும் இனி வியாபிக்க இருப்பதும் அனைவரும் அறிவர். ஆகவே முஸ்லிம்களை தற்போதைய துயில் நிலையிலிருந்து எழுப்பி தன்னைத்தானே சீர்தூக்கி பார்த்து பட்டை தீட்டிக்கொள்வதற்காக நாம் விவாதிக்கலாமா?

கருத்துகளை பதிவு செய்யும் முறை:
1) ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கருத்துகளை பல மறுமொழிகளாக இடலாம்.
2) கருத்துகளை தனி பதிவாக இடவேண்டாம். மறுமொழியாக மட்டுமே இடவேண்டும்.
3) மற்றொருவர் இட்ட கருத்துகளை மறுக்கலாம் அல்லது ஆமோதித்து அதற்கான மேலும் ஆதாரங்களை கொண்டுவந்து வலு சேர்க்கலாம்.
4) ஒரே காரணத்தைப் பிடித்துக்கொண்டு தொங்காமல் பல காரணங்களை முன்வைக்கலாம்.
5) கருத்துகளை தாக்கலாம். கருத்து தெரிவித்தவரை அல்ல.
6) நகைச்சுவைக்கு அனுமதி உண்டு. அளவுக்கு மீறினால் மறுமொழியில் கத்தரி வைக்கப்படும்.
7) கருத்துகளை வைப்பது மட்டுமே உங்களின் பணி. தீர்ப்பு மக்கள் கையில்.

இனி உறுப்பினர்கள் தங்கள் வாதத்தை தொடங்கலாம்.

Notes:
1) தமிழ்முஸ்லிம் விவாத அரங்கில் உறுப்பினராக இணைந்து எழுது விரும்புகிறவர்கள் tamilmuslim@gmail.com என்ற முகவரிக்கு மடலிடவும்.
2) வாசகனாகவே கருத்து தெரிவிக்க விரும்புகிறவர்கள் தங்கள் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்து tamilmuslim@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம். தேர்வு செய்யப்பட்டால் "வாசகன்" என்ற பெயரில் அக்கருத்துகள் பதிவு செய்யப்படும்.

18 comments:

Abu Umar said...

இத்தலைப்பின்கீழ் விவாதம் நல்லதொரு முயற்சி.

நமது மீடியா வீழ்ச்சிக்கான காரணங்களில் ஒன்று, முஸ்லிம்கள் புதிய தொழிற்நுட்பங்களை விரைவில் அங்கீகரிக்காததாகும்.

ஆடியோ கேஸட் மக்கள் புழக்கத்தில் இருந்தபோது,

பதினாரடி வேங்கைப்புலி
படுத்திருக்க கண்டிடவே
சங்கைவுள்ள ஃபாத்திமாவே
பாலை திடுக்கிட்டு ஊத்திடுவார்
டன்டனுக்கு டன்டனுக்கு

அலி(ரலி) புலியாக மாறி நடுத்தெருவில் படுத்து ஃபாத்திமா நாயகி(ரலி) அவர்களை பயங்காட்டினாராம். இந்த கட்டுக்கதையைதான் இஸ்லாம் என்று தலையில் துணிபோட்டு நம் பெண்கள் கேட்டுக்கொண்டிருந்தார்கள். இவ்வாறு ஃபாத்திமா நாயகி கிஸா, நூறுமசாலா, வெள்ளாட்டு மசாலா என்று சாஹுல்ஹமீது அன்டு (மண்டு) சன்ஸ் மூலம் அவிழ்த்துவிட்டார்கள்.

இதே சமயத்தில்

என் மச்சானை பாத்தீங்களா
மடல்வாழை தோப்புக்குள்ளே

என்ற பாடலை பார்த்து ஏங்கியவர்கள் அதில் கொஞ்சம் சோடா கலந்து,

கப்பலுக்கு போனமச்சான்
கண்ணிரண்டு ஆசை மச்சான்
எப்பத்தான் வருவிங்கென்று
எதிர் பார்க்கிறேன்
நான் இரவு பகலும்
தொழுது தொழுது கேட்கிறேன்.

அன்னமே அடிக்கரும்பே.. ஆசை என்னை மீறுதடி
உன்னை அங்கு விட்டுவந்து.. என் உள்மனசு வாடுதடி

என்று இஸ்லாமிய கீதங்கள்?!?! இசைக்க ஆரம்பித்திருந்தனர்.

அடுத்தது டீவி-வீடியோ வந்தது
தப்லீக் காரர்கள் டீவியை தஜ்ஜாலாக ஆக்கி ஹராம் என்றார்கள். (காரணம் தஜ்ஜாலைப்போல் ஒற்றை கண் இருக்கிறதாம். ஹராத்தை ஹலால் என்றும் ஹலாலை ஹராம் என்றும் மக்களை நம்பச்செய்கிறதாம்).

இந்த காலகட்டத்தில்தான் தமிழ்நாட்டில் குர்ஆன் சுன்னா புரட்சி வந்து "அபூர்வ சகோதரர்கள்" பாடல் கேஸட்டுகள் "ஹதீஸ்" கேஸட்டுகளாக மாறின. ஆனால் மீடியா நமக்கென்று நிற்கவில்லை. அது சேனலையும் சி.டியையும் நெருங்கியிருந்தது. பிறகு நாம் வீடியோ கேஸட்டை தஃவாவிற்கு கையில் எடுத்தோம். அதிலும் பல பிரச்சினைகள் இருந்தது. அதாவது தெளிவில்லாத ரிக்கார்டிங், தேய்ந்துப்போன நகல், டீவிக்கு உள்ளே சென்றால்தான் ஆடியோவை கேட்கமுடியும் என பல பிரச்சினைகளால் வேறு வழியில்லாமல் சி.டிக்கு தாவினோம். அப்பொழுது மீடியா டி.வி.டி-க்கு தாவியிருந்தது.

இன்னொரு பக்கத்தில் சத்தமில்லாமல் "இணையம்" என்ற ஒரு விரல் பரிசத்தில் உலகம் முழுவதும் இணைய ஆரம்பித்திருந்தது. இணையம் பலருக்கு எட்டாத கனியாக இருந்தாலும், வெளிநாட்டு வேலை வாய்ப்பு சிலரை இணையத்துக்கு அழைத்துச்சென்றது. ஆங்கில இணையத்திற்கு பிறகு மெல்ல மெல்ல தமிழ் இணையமும் பிறந்தது. இது சம்பந்தமாக என் நண்பர் என்னிடம் சொன்ன வார்த்தை:

"இன்றுதான் நாம் இணையத்தில் காலடி வைத்திருக்கிறோம்". ஆனால் இஸ்லாமிய எதிர்ப்பாளர்கள் இணையம் தோன்றியவுடனேயே அந்த வாய்ப்பை பயன்படுத்தி இஸ்லாத்திற்கெதிரான கருத்துக்களை பதிய ஆரம்பித்துவிட்டார்கள் என்பதுதான் அது.

தமிழில் அது குறைவு என்றாலும், பல செய்தி தளங்களின் "மின் மன்றத்தில்" இஸ்லாம் கேளி செய்யப்பட்டது. கண்ணில்பட்டதை விஷயம் தெரிந்தவர்கள் எதிர்கொண்டார்கள்.

தமிழ் இணையம் ஒருசில வந்தாலும் எழுத்துரு பிரச்சினைகள் ஓய்ந்த பாடில்லை. ஆனால் தமிழ்பேசும் நல்லுலகம் யுனிகோடு என்னும் புதிய பட்டினத்திற்கு கைபிடித்து அழைத்துச்சென்றார்கள். ஆனால் நம்மில் பலருக்கு "யுனிகோடு எந்த கடையில் கிடைக்கும்?" என்ற நிலைமைதான்.

நம்மவர்களிடம் யுனிகோடு தட்டச்சு செய்ய எ-கலப்பை 2-ஆம் பதிப்பை பயன்படுத்தச் சொன்னால், சாருகேசியில்தான் முரசு கொட்டுவேன் என்கிறார்கள்.

தமிழ் வலைப்பதிவுகள் Rediff-ல் ஆரம்பிக்கப்பட்டு அது பிளாக்கருக்கு மாறிய பின்னர்தான் இஸ்லாமிய தமிழ் வலைப்பதிவுகள் தொடங்கப்பட்டன.

நமது "ஒலி ஒளி" தஃவா பல பரிணாமங்களை அடைந்து விண் டீவி, டான் என வந்திருந்தாலும் சில மணித்துளிகள் வாடகைக்குதான் இவையெல்லாம். ஆனால் அவர்கள் பல மொழி சேனலுக்கு எப்போதே உரிமையாளர்களாக ஆகிவிட்டார்கள்.

நான் இதுவரை சொல்லியவற்றை கவனித்தீர்களென்றால் ஒன்று புரியும். ஒவ்வொரு மீடியா பரிணாமமும் முடியும் தருவாயில்தான் முஸ்லிம்கள் அதனை பயன்படுத்த தொடங்கியிருப்பார்கள் என்பதுதான் அது.

புதிய தொழிற்நுட்பங்களை உள்வாங்க எடுத்துக்கொண்ட கால தாமதத்தினால், இன்று அதற்கான விலையை கொடுத்துக்கொண்டிருக்கிறோம்.

அபூ முஹை said...

அடப் போங்கப்ப! நானே இப்பத்தான் லுங்கியிலிருந்து முழுக்கால் சட்டைக்கு மாறியுள்ளேன். ஆங்கிலம் கற்பது (ஹராம்)விலக்கப்பட்டது, முழுக்கால் சட்டை போடுவது (ஹராம்) தடுக்கப்பட்டது என்று வெள்ளையனின் மொழியையும், ஆடைகளையும் தீவிரமாக எதிர்ப்பதாகச் சொல்லி, இந்த சமுதாயத்தின் தலை மீது வண்டி வண்டியாய் மண்ணள்ளி போட்டார்கள். இப்போ மீடியாவா! அப்படின்ன.?

புகைப்படம் எடுப்பது மார்க்கத்தில் விலக்கப்பட்டது(!?) என்று முல்லாக்களால் முளைச் சலவை செய்யப்பட்ட(நம்ம)வர்களுக்கு, தொலைக்காட்சிப் பெட்டியைப் பார்ப்பதும், இணையத்தளத்தில் ஊடுருவுவதும் சிம்ம சொப்பனமாகத்தான் இருந்தது - இருக்கிறது. அறிவுப்பூர்வமான இஸ்லாம் மார்க்கத்தில், அறிவின் அணு அளவும் தொடர்பில்லாத சட்டங்களை கையால் எழுதி வைத்துக்கொண்டு அதையே மார்க்கம் எனவும் இந்த சமுதாயத்தின் மீது திணித்து மடமையாக்கி வைத்திருந்தார்கள். அறிவோடு சம்மந்தப்படாத முல்லாக்களின் சட்டங்களில் சில..

''ஒருவனுக்கு மூக்கில் தொடர்ந்து இரத்தம் வந்தால், 'அல்ஹம்து' சூராவை மூத்திரத்தால் அவனது நெற்றியில் எழுதலாம்.'' ஆதார நூல்: துர்ருல் முக்தார்.

''எவருடைய பிராணியையும் அபகரித்து குர்பானி கொடுப்பது தவறில்லை.'' ஆதார நூல்: ஷரஹூல் விகாயா.

''எந்தப் பிராணிகளைச் சாப்பிடுவது ஹலாலோ, அவற்றின் முத்திரத்தை சர்வ சாதாரணமாகக் குடிக்கலாம். ஆதார நூல்கள்: துர்ருல் முக்தார், ஹிதாயா, ஷரஹூல் விகாயா.

''ஒன்பது கிண்ணங்கள் மது அருந்திவிட்டு பத்தாவது கிண்ணம் குடிக்கும் போது, போதை வந்தால் பத்தாவது கிண்ணம்தான் ஹராம். ஏனைய கிண்ணங்கள் ஹராமல்ல.'' ஆதார நூல்: துர்ருல் முக்தார்.

''இமாமோ, கலிஃபாவோ, அரசரோ விபச்சாரம் செய்தால் அவர்களுக்கு 'ஹத்' தண்டனை கிடையாது.'' ஆதார நூல்கள்: துர்ருல் முக்தார், ஹிதாய, ஆலம்கீரி, கன்ஸூ.

''இஸ்லாமிய ஆட்சியில்லாத நாடுகளில் ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமிடம் வட்டி வாங்குவது கூடும்.'' ஆதார நூல்கள்: ஆலம்கீரி, ஷரஹூல் விகாயா.

''இஸ்லாமிய ஆட்சியில்லாத நாடுகளில் ஒரு முஸ்லிம் பன்றி இறைச்சி, மது போன்றவைகளை மாற்று மதத்தவர்களுக்கு விறபது கூடும்.'' ஆதார நூல்: ஆலம்கீரி.

''அடுத்தவன் மனைவியை ஒருவன் திருமணம் செய்து அவளோடு வாழ்ந்தால் 'ஹத்' தண்டனை இல்லை.'' ஆதார நூல்: துர்ருல் முக்தார்.

''ஒரு பெண்ணின் கணவன் எங்கே இருக்கிறான் என்று தெரியாத நிலையில் 120 வருடங்கள் கழித்து அவன் இறந்து விட்டதாக முடிவு செய்து பின்னர் அவளுக்கு வேறு திருமணம்(?) செய்ய வேண்டும்.'' ஆதார நூல்: ஹிதாயா.

இதையெல்லாம் அறுத்தெறிந்து வெளியேற முஸ்லிம் சமுதாயத்து நிறையவே அவகாசம் வேண்டியிருந்தது - இருக்கிறது. வெளியேறி எட்டிப்பார்த்தால், எல்லோரும் செய்தி ஊடகங்களில் பட்டதாரியாக இருக்கிறார்கள், முஸ்லிம்கள் ஆனா, ஆவன்னா என்று பாலர் பாடத்திலிருந்து இனிமேல்தான் துவங்க வேண்டும்.

(மற்றவை, மற்ற சகோதரர்களின் கருத்துக்குப் பின்..)

Abu Umar said...

//அறிவின் அணு அளவும் தொடர்பில்லாத சட்டங்களை கையால் எழுதி வைத்துக்கொண்டு அதையே மார்க்கம் எனவும் இந்த சமுதாயத்தின் மீது திணித்து மடமையாக்கி வைத்திருந்தார்கள்//

இஸ்லாத்தின் பெயரால் இவர்கள் கட்டிவிட்ட கட்டுக்கதைகளும், கப்ஸா சட்டங்களும் முஸ்லிம்களின் முன்னேற்றத் தடைகற்களில் ஒன்றுதான்.

ஆனால் இன்னும் பல தடைகற்களை ஆராய்ந்து நீக்க வேண்டியிருக்கிறதே!

Abu Umar said...

//சேனலோ, இணையமோ வேணும்னா துட்டு இல்லாம முடியுமா சார்.//

உண்மைதான். சேனலோ, இணையமோ வேண்டுமேன்றால் பொருளாதாரம் இல்லாமல் முடியாது.

ஒரு கோடி பட்ஜெட்டில் பள்ளிவாசல் கட்ட முடியும். ஆனால் முஸ்லிம்களுக்கென்று உருப்படியான தினசரியோ சேனலோ உண்டாக்கமுடியாதா?

பள்ளிவாசல் அவசியம் என்று தெரிந்த நமக்கு முஸ்லிம்களின் செய்திகளையும், இறைத்தூதர் நம்மிடம் அமானிதமாக ஒப்படைத்த விஷயங்களையும் மற்றவர்களுக்கு தெரிவிக்க மீடியா அவசியம் என்று ஏன் உணரமுடிவதில்லை?.

வணக்கத்தில் ஈடுபடுவது, அறிவை(கல்வி) கற்று கொடுப்பது இவையிரண்டில் நபியவர்கள் முக்கியத்துவம் கொடுத்தது இரண்டாவதைத்தான். காரணம் நபியவர்கள் அனுப்பப்பட்டதன் முக்கிய நோக்கம் மக்களுக்கு அறிவை போதிக்கவேயாகும். ஆனால் அவை இன்று முஸ்லிம்களிடமிருந்து திருட்டுபோய்விட்டதோ என்று நினைக்கத் தோன்றுகிறது.

திருடவந்தவர்கள் அலமாரியில் உள்ள துணிமணிகளை திருடிக்கொண்டு அதே அலமாரியில் வைக்கப்பட்ட விலைமதிப்புள்ள வைரங்களை சாதாரண பளிங்கு கற்கள் என நினைத்து விட்டுச்சென்றதை போலத்தான்.

வைரம்போன்ற மதிப்புமிக்க ஈமானும், இபாதத்துகளும் நம்மிடம். இஸ்லாம் கற்றுக்கொடுத்த நற்பண்புகள் என்றும் ஆடைகள் சிலவற்றை அவர்கள் கைப்பற்றிக்கொண்டார்கள்.

நமது கடமை தொழுகையோடு நின்றுவிட்டது என நினைக்கிறோம். ஆனால் அவர்கள் எதைச்செய்தாலும் தூரநோக்கு பார்வை, கவனம், திட்டமிடல் என்று இஸ்லாத்திற்குறிய பண்புகளை நடைமுறைப்படுத்தி வருகிறார்கள்.

ஆகவே பொருளாதாரத்துடன் தூரநோக்கு பார்வை, திட்டமிடல், அறிவு(கல்வி) போன்ற இத்தகைய விஷயங்களை (அவர்களிடம் இருந்து திருடவேண்டாம்) மீண்டும் சம்பாதித்து மீடியாவை நமது கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும்.

அபூ முஹை said...

சகோதரர் அதிரையார் அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

செய்தி ஊடகங்கள் என்பது இணையத்தில் மட்டுமில்லை. வானொலி, தொலைக்காட்சி, மற்றும் தினசரி, வாரம், மாதப்பத்திரிகைகளாகவும், பல துறைகளைப் பற்றிய செய்தித் தொகுப்பாகத் தனி மனிதர்களின் புத்தக வெளியீடாகவும் விரிவடைந்து ஆழமாக தன் வேர்களைப் பாய்ச்சியுள்ளது.

உண்மை உட்கார்ந்த இடத்திலிருந்து எழுவதற்கு முன், பொய் இந்த உலகத்தையே சுற்றி வந்து விடுகிறது. அந்த அளவுக்கு சுருங்கிய உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். உலக மக்கள் தொகையில் மூன்றிலொரு பங்கு மக்கள் தொகையாக முஸ்லிம்கள் இருந்தும் சொல்லிக் கொள்கிற மாதிரி செய்தி ஊடகங்களில் முஸ்லிம்கள் முன்னேற முடியவில்லையே ஏன்? இதை ஒவ்வொருவரும் அசை போட்டு தங்களின் கருத்துக்களை முன் வைக்கவும் நிர்வாகி கேட்டிருந்தார்.

இது ஒரு முயற்சிதான், ஆழ்கடல் சென்று வலை விரிக்கும் முயற்சியல்ல. வந்தால் வரட்டும் என்று கரையில் அமர்ந்து தூண்டிலைப்போட்டு மிதப்பில் கண் வைத்திருப்பவரின் முயற்சி.

தொலைக்காட்சிப் பெட்டியைத் தஜ்ஜாலாக ஒப்பிட்டு தொலைக்காட்சிப் பெட்டியைப் பார்ப்பது (ஹராம்) மார்க்கத்தில் விலக்கப்பட்டது என்று தப்லீக் இயக்கத்தினர் தீர்ப்பு வழங்கினார்கள். இதைத்தான் சகோதரர் அபூ உமரும் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள்.

இதை அறியாமலேயே சகோதரர் அபூ உமர் தப்லீக்கைத் தாக்கி எழுதி விட்டதாக, சகோதரர் அதிரையார் அவர்கள் தவறாக விளங்கிக்கொண்டார்கள் என்றே நாம் கருதுகிறோம்.

தஜ்ஜால் ஒற்றைக் கண்ணன் என்றாலும் இருகண்ணில் ஒன்று குருடாக இருக்கும், இரு புருவத்தின் நடுவில் காஃபிர் என்று அரபியில் எழுதப்பட்டிருக்கும் என்பதும் நபி (ஸல்) அவர்களின் முன்னறிவிப்பாகும். இதையெல்லாம் பரிசீலிக்காமல் தொலைக்காட்சிப் பெட்டியை ஒற்றைக் கண்ணாக சித்தரித்து அதைப் பார்ப்பது ஹராம் என்று தப்லீக் இயக்கத்தினர் அவசர அவசரமாகத் தீர்ப்பு வழங்கியது இஸ்லாம் நவீனங்களைத் தடை செய்கிறது என்ற அவலத்தைத்தான் இஸ்லாத்தின் மீது சுமத்தியது.

தொலைக்காட்சிப் பெட்டியை பார்க்கக்கூடாது என்று பல காரணங்களை சொல்லிக்கொண்டு பல அறிஞர்கள் பலதரப்பட்ட மார்க்கத் தீர்ப்புகளை வழங்கினார்கள் - இன்னும் தீர்ப்பு வழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
அதுபோல் இணையத்திலும் ஊடுருவுவதும், ஆ.. இண்டர் நெட்டா? அது ''ஹராம்'' என்றும் தீர்ப்பு வழங்கும் மார்க்க அறிஞர்களும், அதைப் பின்பற்றும் மனிதர்களும் இன்றும்வரை இருக்கிறார்கள். இவர்கள் வரும் காலங்களிலும் இருப்பார்கள்.

இவையெல்லாம் இஸ்லாத்தோடு உரசிப் பார்க்காமல், இஸ்லாம் தடை செய்த ''நவீனங்கள்'' என்ற பொய் முத்திரை குத்தப்பட்டதாகும். முஸ்லிம்கள் செய்தி ஊடகங்களில் முன்னேறாததற்கு இந்தப் பொய் முத்திரைகளும் காரணமாக இருக்குமோ? என்ற கண்ணோட்டமும் சகோதரர் அபூ உமர் அவர்கள் முன் வைத்த கருத்தில் தொக்கியிருப்பதை விளங்கிக் கொண்டால் சரியாகிவிடும்.

அதிரையார் தவறாக விளங்கிக் கொண்டதால் அதன் வெளிப்பாடாகிய கீழ்கண்டது போன்ற மற்றக் கருத்துக்களை விட்டும் விலகியிருக்கிறோம்.

//என்னமோ தப்லீக்வாதிகள்! (தவ்ஹீத்வாதிகளின் எதிரி?) கட்டுக்கதைகளையும், வெட்டிவேலையையும் செய்து கொண்டு ஊர் சுற்றுவது மாதிரியும். இண்டர்நெட் அறிந்த தவ்ஹீதுவாதிகள்தான் மார்க்கத்தை கட்டிக் காப்பது போலவும் போகிற போக்கில் சீண்டி விட்டு சென்றுள்ளார்.//

குறிப்பு:- முழுக்க முழுக்கப் பின்பற்றத் தகுதியான ஒரே மாமனிதர் நபி (ஸல்) அவர்கள் மட்டுமே. எவ்வளவு பெரிய மார்க்க அறிஞராக இருந்தாலும் அவர் பின்பற்றத் தகுதியானவரல்ல. அறிஞர்களின் விளக்கங்களை குர்ஆன், சுன்னவோடு ஒப்பிட்டு ஏற்க வேண்டும் என்பதே நாங்கள் கொண்டதும், பிறருக்கு எத்தி வைக்கும் கொள்கையாகும். இங்கே P.J தாசன்கள் யாருமில்லை.

இப்னு ஹம்துன் said...

இப்போது தான் பார்த்தேன். இது நல்லதொரு விவாதக்களம். பொறுமையாக பின்னர் வந்து கலந்துக்கொள்கிறேனே.

அபூ முஹை said...

//எல்லா இயக்கத்திலும் ஏதாவது குறை இருக்கிறது, ஆதலால் நாம் நடு நிலையுடன் இருந்து எந்த ஒரு இயக்கத்தையும் சாடாமல் நல்லதை எடுத்துக் கொள்வதுதான் நன்மை பயக்கும் என்பது என் கருத்து.//

அபூ யாசிர், சரியாகச் சொன்னீர்கள்!

Abu Umar said...

மீடியாவில் "ஏன் பின்தங்கியிருக்கிறோம்" என்ற தலைப்பின் ஊடே "ஏன் அவசியம்" என்ற தலைப்பும் சேர்ந்துவருவதால் தலைப்பை விட்டு விலகுவது போன்று தோன்றலாம்.

என் முதல் வாய்ப்பில், ஒரு குறிப்பிட்ட மீடியாவை, அதன் அடுத்த பரிணாமத்தில் கால் எடுத்துவைத்த பிறகுதான் தாமதமாக அதனை ஏற்றுக்கொள்ளும் மனநிலையை அடைகிறோம் என்றும் அதற்கு காரணம் மீடியா பற்றி தவறான எண்ணம் முஸ்லிம் சமூகத்தில் விதைக்கப்பட்டதும் என குறிப்பிட்டிருந்தேன்.

இரண்டாவது வாய்ப்பில், ஒரு முஸ்லிம் என்பதால் நமக்கு இருக்கவேண்டிய திறமை, திட்டமிடல் போன்ற உயர்ந்த குணங்கள் இல்லாததால் நாம் பின்தங்கியிருக்கிறோம் என்று குறிப்பிட்டிருந்தேன்.

வருமுன் காப்போம்

மூன்றாவதாக நமது மீடியா முன்னேற்றத்திற்கு தடையாக இருப்பது நம்மிடம் உள்ள அலட்சிய குணங்களும் ஒன்று.

இந்தியாவில் முஸ்லிம்கள் அனைவரும் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் என்றும், தீவிரவாதிகள், பிற்போக்கு வாதிகள் என்றும் ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதிகளால் பிரச்சாரம் செய்யப்படுகிறது. இதனையே உலக அளவில் அமெரிக்காவும் பிரிட்டனும் சி.என்.என், பி.பி.சி போன்றவற்றின் உதவியுடன் முன்வைக்கிறது.

மாற்றான் தவறு செய்தால் அத்தவறுகளை அவனளவிலும், ஒரு முஸ்லிம் தவறு செய்துவிட்டால் இஸ்லாம் அவ்வாறு பயிற்சிவிக்கிறது போன்ற பிம்பத்தை உண்டாக்க "முஸ்லிம் தீவிரவாதிகள்", "இஸ்லாமிய அடிப்படைவாதிகள்" என்று போற்றுவது இவர்களுக்கு கைவந்த கலை.

குஜராத் போன்ற கலவரங்களை உண்டாக்கி அக்கலவர நேரத்தில் முஸ்லிம்களுக்கு நடுநிலை சகோதரர்கள்கூட உதவ முன்வரக்கூடாது என்ற பாசிச நோக்கில் இஸ்லாத்தைப்பற்றியும், முஸ்லிம்கள் பற்றியும் தவறான கருத்துகள் கட்டவிழ்த்துவிடப்படுகிறது.

இப்படியே போனால் நம் நிலைமைதான் என்ன?
இந்திய முஸ்லிம்களும் அகதிகளாக ஆக்கப்பட்டப்பிறதுதான் கண்விழிக்க வேண்டுமா?
இதற்கு ஸ்பெயின், பாலஸ்தீனம், குஜராத் படிப்பினைகள் நமக்கு போதாதா?
நாம் நமது குழந்தைகளுக்கு சேர்த்து வைப்பது சொத்த மட்டும்தானா? பாதுகாப்பு வேண்டாமா?

தமிழ் ஈழ போராளிகள் அகதிகளாக ஆக்கப்பட்ட பிறகும் அவர்களின் பாதிப்பின் ஆழம் அவர்களை கூனி குறுகிபோய்விடாமல் மீடியாவில் முன்னேறச் செய்கிறது. ஏன் நாம் வரும்முன் காக்கக்கூடாதா?

ஆகவே நமது அலட்சியங்களை கைவிட்டு நம்மீது கட்டவிழ்த்துவிடப்படும் அநியாயங்களை உலகிற்கு பறைசாட்டவும், இஸ்லாம் மீதான தவறான குற்றச்சாட்டுகளை களையவும் மீடியாவில் முன்னேறலாமா?

-அபூ உமர்-

Abu Umar said...

இஸ்லாம் சம்பந்தமான மீடியா என்றாலே "குர்ஆன், ஹதீஸ்" மட்டும்தான் இருக்கவேண்டும் என்று மக்கள் எண்ணுகிறார்கள்.

இதுதான் நமது மீடியாக்கள் மண்ணை கவ்வுவதற்கு இன்னொரு காரணம். அப்படியென்றால் சினிமாவும், பாட்டும், சிம்ரனின் பேட்டியும் போடலாம் என்கிறீர்களா? என்ற கேள்வி வரும்.

ஏன் டாகுமென்டரி காட்டக்கூடாது.
சி.என்.என்., பி.பி.சி, அல்ஜஸீரா போன்று சேனல் தொடங்கினால் என்ன?

மருத்துவ குறிப்புகள், செய்திகள், ஆராய்ச்சி கட்டுரைகள், வியாபார குறிப்புகள், விஞ்ஞான செய்திகள், மாணவ செய்திகள், சிறுவர் கதைகள், சுற்றுலா தகவல்கள், கணினி கட்டுரைகள் போன்ற செய்திகள் அடங்கிய இணையதளம் இருக்கக்கூடாதா?

இஸ்லாமிய தளம் என்றால் "கதை", "கவிதை" இவற்றிற்கு என்ன வேலை என்று கேட்பவர்களும் உண்டு.
இஸ்லாம் ஒரு முழுமையான வாழ்க்கை திட்டம் என்கிறோம். ஆனால் வணக்க வழிபாடு மட்டுமே இஸ்லாம் என்பதுபோல் தனிப்பட்ட வாழ்விலும், நமது மீடியாக்களிலும் நடந்துக்கொள்கிறோம். இப்படி இருந்தால் வெற்றி எப்படி வரும்?

-அபூ உமர்-

Abu Umar said...

தேவையான பயிற்சி இல்லாமை
இதுவும் ஊடகத்துறையில் நாம் பின்தங்கியிருப்பதன் காரணத்தில் ஒன்றாகும். உலகம் மிகச்சுருங்கி விட்டது. இன்று உங்களின் ஊடகத்தில் வெளிப்படுத்திய செய்தி, இன்னொரு ஊடகத்தில் விவாதமாக நடந்துக்கொண்டிருக்கும். முடிந்தவரை இதனை எதிர்கொள்ளவேண்டிய முறைகளை நன்கு அறிந்திருக்க வேண்டும்.

டார்வினின் பரினாமக்கொள்கை நிரூபிக்கப்படாத ஒன்று என்று அனைவரும் அறிந்ததே. இதுதான்இஸ்லாம்.காம் தளத்தில் இது சம்பந்தமாக வந்த கட்டுரைக்கு மறுப்பு தெரிவித்து டார்வினுக்கு ஆதரவாக ஒருவர் கடிதம் எழுதியிருந்தார். அவருக்கு சரியான கோணத்தில் மறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.

எனக்கும் இதில் அனுபவம் உண்டு. சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முஸ்லிம்கள் செய்த உதவிகளைப் பார்த்து முஸ்லிமல்லாதவர்கள் நடத்தும் பத்திரிக்கைகளும் அமைப்புகளும் மூக்கில் விரல் வைத்து ஆச்சரியப்பட்டன. இந்த நேரத்தில் அதனைப்பற்றி எனது வலைப்பதிவில் எழுதியிருந்ததற்கு, நாகப்பட்டிணம் மாவட்டத்தில் அப்படி ஒன்றும் நடக்கவில்லை என்று மறுப்பு எழுதியிருந்தார். அடுத்த சில மணிநேரங்களில் இணையத்திலிருந்தே தேடி அவருக்கு ஆதாரத்தை எழுதினேன்.

இதுபோன்றவர்களை எதிர்கொள்ளவும் தெரிந்திருக்கவேண்டும். அப்படியில்லையென்றால் உங்களின் ஊடகத்தை பாடையில் ஏற்றிவிடுவார்கள்.

இப்பொழுதெல்லாம் முஸ்லிம்கள் நடத்தும் வார/மாத இதழ்களில் இதழியல் பயிற்சி பற்றிய விளம்பரங்களை பார்க்கும்போது சந்தோசமாக இருக்கிறது.
-அபூ உமர்-

அதிரைக்காரன் said...

சகோதரர் மாலிக் சொல்கிறார்:
//நீங்க சொல்றதைப் பார்த்தால் ஊர், ஊரா அலைந்து சென்று சொல்லனும் என்கிறீர்களா? //
பின்னிட்டிங்க போங்க. ஊர் ஊரா இல்லை சகோதரரே தேவைப்பட்டால் தெருத்தெருவாக கூட போயி சொல்வதுதான், தஃவா (இஸ்லாமிய அழைப்பு) என்று பெயர். அவ்வாறுதான் இஸ்லாம் அரேபியாவிலிருந்து இந்தியாவரை எடுத்து வரப்பட்டது.
T.V.யை தஜ்ஜாலாக ஒப்பிட்டது அறியாமையின் வெளிப்பாடு மட்டுமின்றி ஆடல்களும் பாடல்களும் தான் T.V. யின் பிரதான நிகழ்சிகளாக இருந்த கால கட்டத்தில் சொல்லப் பட்ட உவமை. இதுதான் சாக்கு என்று தப்லீக் காரர்களை போட்டு தாக்குவதுதான் ஏன்? என்பதுதான் என் வாதம்.
மீடியா என்பது விசுவலாக ஒரு செய்தியை சொல்லும் ஊடகம். டைனோசாரைப் பற்றி சொன்னால், Stephen Spielberg கின் Jurassic Park டைனோசார்தான் ஞாபகத்திற்கு வரும். அந்த அளவிற்கு மீடியாவின் தாக்கம் இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.
மீடியாவில் முஸ்லீம்கள் முன்னேறி இருந்தால் இத்தகைய இழி நிலைக்கு ஆழாகி இருக்க மாட்டோம் என்பது ஒரு புறம் உண்மையாக இருந்த போதிலும், மீடியா இல்லாத கால கட்டத்திலும் இஸ்லாம் சர்வ சாதாரணமாக பரவி வந்து இருக்கிறது என்பதை மறுக்க முடியாது.
யூதர்கள் கையில் தான் பிரபலமான மீடியாக்களெல்லாம் இருக்கின்றன. எனினும் யூத மதம் எத்தனை நாடுகளில் பரவி விட்டது? கிறிஸ்தவர்களும் மதப் பிரச்சாரத்தை மீடியாவில் செய்த போதிலும், கிறிஸ்தவர்களான ஜார்ஜ் புஸ்ஸும், டோனி பிளேயர் போன்ற அரசியல்வாதிகள் செய்த கொடுமைகள் நியாயப் படுத்தப் படவில்லை.
இஸ்லாத்தின்பால் மக்களை அழைக்க மீடியா அவசியம் என்றால் இஸ்லாத்திலிருந்து உலகமயமாக்களாலும் இன்னும் பிற காரணங்களாலும் வெளியேறிக் கொண்டிருப்பவர்களை யார் எடுத்து சொல்லி தடுப்பது? முஸ்லிம்களுக்குள்ளேயே இஸ்லாத்தை எடுத்து சொல்லி வருவதைதானே தப்லீக்வாலாக்கள் செய்து வருகிறார்கள்.
கல்வியும் அதிகாரமும் இருக்கும்போதே சங்கராச்சாரிகளிடம் மண்டியிட்டு ஆசீர்வாதம் வாங்கும் முஸ்லிம் ஜனாதிபதிகளை எந்த மீடியாவால் திருத்த முடியும்? அவர்கள் இஸ்லாத்தைவிட்டு வெளியேறி விட்டார்கள் என்று பரிகசித்து விட்டு ஒதுங்கி விடுவதா? அவர்களுக்கும் மீண்டும் மீண்டும் இஸ்லாத்தை எடுத்து சொல்வது யார்?
என் அபிப்ராயம் என்னவெனில், முஸ்லிம்கள் மீடியாவில் மட்டுமல்ல எந்த துறையிலும் முன்னேறாமல் இருப்பது, மஸாயில்களில் தர்க்கம் செய்து கொண்டிருப்பதால்தான். முதலில் இருக்கும் முஸ்லிம்கள், முழு முஸ்லிமாக இருக்காவிட்டாலும், இஸ்லாத்திலிருந்து விலகாமால் இருந்தால் அதுவே போதும்.
நாம் இந்த அளவாவது இஸ்லாத்தைப் பற்றி விவாதித்துக் கொண்டைருப்பது யாரோ சிலர் நமக்கு எடுத்து வைத்ததால்தான். ஓட்டையாகிப் போன படகை சரி செய்கிறேன் பேர்வழி என்று, அறியாமல் ஓட்டை போட்டவனை நடு ஆற்றில் இறக்கி விடுவது என்ன நியாயம்?வந்தமாட்டையும் கட்டாமல் போன மாட்டையும் தேடாமல் இருப்பது அறிவுடைமை ஆகாது. தப்லீக் காரர்களை வந்த மாட்டை கட்டுபவர்களாக எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் போன மாட்டை தேடுங்கள். தயவு செய்து வந்த மாட்டை கட்டமாட்டேன் போன மாட்டை மட்டும் தேடுவேன் என்று சொல்லாதீர்கள்.
இஸ்லாத்தை பரப்ப மீடியா அவசியம் என்றால் அதற்கு சாடிலைட் சானல்கள் மட்டும் அவசியமில்லை சகோதரரே, அதைவிட குறைந்த செலவில் ஒரு ஈமெயில் போதும். முஸ்லிம்களுக்கு எதிரான குற்றச் சாட்டுகள் காலம் காலமாக இருந்து வருகிறது. அதற்கு மீடியா மூலம்தான் பதில் தரவேண்டும் என்பது சாக்கடையில் இறங்கி சுத்தம் செய்வது போல்தான்.
எதார்த்தமாக சொல்வதென்றால், முஸ்லிம்களே கூட இஸ்லாமிய நிகழ்சிகளை பார்க்க மாட்டார்கள். பிறகு எப்படி மாற்று மதத்தவர்களிடம் எடுபடும்?. ஏனெனில் தற்கால மீடியா என்பது சந்தைப் பொருளாதாரத்தின் கோர முகம்தான். அறைகுறை ஆடைகளுடன் வந்தால்தான் அழகு படுத்தும் சாதனங்கள் கூட விளம்பரப் படுத்த முடியும். எயிட்ஸ் ஒழிக்க கூட ஒரு சினிமா நடிகை சொல்ல வேண்டிருக்கிறது.
முஸ்லிம்கள் கல்வியிலும், அறிவிலும் சிறந்து விளங்கிய காலங்களில் அவர்கள் துறை விற்பன்னராக மட்டுமின்றி உண்மையான முஸ்லிமாகவும் இருந்தார்கள். நாம் என்று உலக கல்வியிலும் உலக அரசியலிலும் கவனம் திருப்பப் பட்டர்களோ, அன்றுதான் முஸ்லிகளின் வீழ்ச்சி தொடங்கியது.
மாற்றுக்கருத்து சொல்பவர் அறியாமையில் இருக்கிறார் அல்லது தவராக புரிந்து கொண்டுள்ளார் என்று ஒதுக்கி/ஒதுங்கி விடாதீர்கள். அது கருத்து திணிப்பாகும். அல்லது விவாததிற்கு தயாரா என்று சவால் விட்டு உங்கள் ஆளுமையை காட்ட முயற்சிக்காதீர்கள். நமது குறிக்கோல் கடலைக் கடப்பது மட்டுமல்ல, பயணமும் வெற்றியாக வேண்டும்.
சகோதரர்களே, விவாத தலைப்பு "முஸ்லிம்கள் மீடியாவில் பின்தங்கியிருப்பதன் காரணங்கள்" சில சகோதர்கள் விவாத பாதையிலிருந்து வேறு விவாதங்களுடன் குழப்பிக் கொண்ட்டுள்ளார்களோ என நினைக்கிறேன்.

இப்னு ஹம்துன் said...

அந்தக் காலத்தில் மைக் ஹராம் ஆங்கிலம் ஹராம் என்று சொன்னதுப் போல இப்போது சொல்ல முடியாது.'துர்' முக்தாருக்கெல்லம் இன்று இடமிருப்பதாகத் தெரிய்வில்லை. காரணம், ஓரளவுக்கேனும் நமது சமூகத்தார் விழிப்புணர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.குர் ஆனும் ஹதீஸும் இன்று எல்லோரையும் சென்றடைகிற நிலையில் இருந்தாலும் நமது சமூகத்தைப் பொறுத்தவரை இவை போதா.

இங்கு நான் சொல்ல வருவது முதலில் சமுதாயம் முழுமையாக'முஸ்லிம்' என்பதை உணர வேண்டும். அதன்படி இன்றைக்கு நடக்கிற விவாதங்கள் கேள்வி பதில் நிகழ்வுகள் - மாற்றாருடனான கலந்துரையாடல்கள் அதிகப்படவேன்டும். இன்றைக்கும் 'கண் தானம் கூடுமா?' என்று விளங்காத ஆலிம்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பது ஒரு அவலமே. மாற்று மத சகோதரர்களிடம் கலந்துரையாடுவதில் நம்மவர்களும் நிறைய விளங்கிக் கொண்டார்கள்.

அன்றைக்கிருந்த 'மீடிய' என்பதன்படி மலைகளின் உச்சியில் நின்றுக்கொண்டு நபி(ஸல்)அவர்கள் மக்களிடம் தஃவ செய்தார்கள். இன்றைக்கு TV யும் இணையமும் என்றாகிவிட்டது. நாம் முதல் அடி எடுத்து வைத்துவிட்டோம். இன்ஷா அல்லாஹ் இனி வெல்லுவோம்.

அபூ முஹை said...

முஸ்லிம்களுக்கென்று செய்தி ஊடகங்கள் (மீடியா) இல்லாதது பேரிழப்பாகும் என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. முஸ்லிம்களை நசுக்கவும், இஸ்லாத்தை அழிக்கவும் திட்டமிடும் இஸ்லாத்தின் எதிரிகளுக்கு செய்தி ஊடகங்களே பக்க பலமாக பொய்யான செய்திகளை மக்களிடம் சேர்க்கிறது.

கொயபல்ஸ் தத்துவம் என்று சொல்வார்கள், இல்லாததைத் திரும்ப திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தால் அதை இருப்பதாக மக்கள் நம்பி விடுவார்கள். இஸ்லாம் ஒரு தீவிரவாத மதம், முஸ்லிம்கள் அனைவரும் தீவிரவாதிகள் என கொயபல்ஸ் தத்துவமாக இல்லாததை, திரும்பத் திரும்ப எதிரிகள் செய்தி ஊடகங்கள் வழியாக மக்கள் முன் வைக்கிறார்கள்.

துரதிஷ்டம், இதை எதிர்த்து தக்கப் பதிலடி கொடுப்பதற்கு சொல்லிக் கொள்கிற மாதிரி பிரபல்யமான மீடியா என்று முஸ்லிம்களிடம் எதுவுமில்லை. யானைப்பசிக்கு சோளப்பொறி மாதிரி அங்கொன்று, இங்கொன்றாக பத்திரிகை மீடியா, அதுவும் முஸ்லிம்களுக்குள்ளேயே தான் செய்தி ஊடுருகிறதே தவிர, மீடியா வழியாக இஸ்லாத்தின் மீது எதிரிகள் விதைக்கும் விஷக் கருத்துக்குத் தக்க பதிலாக, இஸ்லாத்தைப் பற்றிய அவதூறைத் துடைக்கும் நோக்கில் முஸ்லிம் அல்லாத மக்களுக்கு செய்திகளைச் சேர்க்கும் பரந்த, வலுவான மீடியா என்பது இல்லை.

மின் வழியாக வீட்டிற்குள் நுழைந்து செய்திகளை நேரில் சொல்வதில் தொலைக்காட்சிக்கு நிகர் TV தான். தொலைக்காட்சியில் சொல்லப்படும் செய்திகளைக் கேட்டு விளங்கிக் கொள்வதற்கு படிப்பறிவு வேண்டும் என்பதில்லை. பாமரனும் விளங்கிக் கொள்ளும் செய்திகளைக் கொண்டு சேர்ப்பதில் தொலைக்காட்சியே இன்று முண்ணனி வகித்து மக்கள் மத்தியில் நீங்கா இடம் பெற்றுள்ளது.

தொலைக்காட்சி மீடியாவுக்கு விளம்பரங்களே முதுகெலும்பாக இருக்கிறது. தொலைக்காட்சியில் விளம்பரங்களை வெளியிடுவதும், விளம்பரத்துக்கேற்ற இசையைச் சேர்ப்பதும் தவறல்ல, இஸ்லாம் விதிக்கும் நிபந்தனைக்குட்பட்டு இவைகளை சேர்த்துக் கொள்வதை ''ஹராம்'' என்று நாமறியவில்லை.

சகோதரர் அதிரையார் அவர்களுக்கு!
T.V ஐ தப்லீக் இயக்கத்தினர் தஜ்ஜாலோடு ஓப்பிட்டதை ஒரு செய்தியாக - தகவலாகத்தான் குறிப்பிடப்பட்டிருக்கிறது, நீங்கள் புரிந்து கொண்டது போல தப்லீக் ஜமாத்தைப் போட்டு தாக்கும் எண்ணத்தில் அது எழுதப்படவில்லை. தப்லீக் இயக்கத்தினர் தொலைக்காட்சியை தஜ்ஜால் என்று தீர்ப்பளித்தது உண்மையா? இல்லையா? என்பதை மட்டும் நீங்கள் அறிந்து கொண்டால் போதும்.

சகோதரர் இப்னு ஹம்துன் அவர்களுக்கு!
மத்ஹபுகள் இருப்பதே ''துர்ருல் முக்தாரும்'' இருக்கிறது என்பதற்கான ஆவணமாகும். இந்த கிதாபுகளின் பிரதிகள் இன்னும் புதுப்பிக்கப்பட்டுக் கொண்டுதானிருக்கிறது. ஒரு மாதிரிக்கு, அதிகாலைக் காட்சியாக தொலைக்காட்சியில் ரமளான் மாதத்தில் ''ஸஹர் நேர சிந்தனைகள்'' என்று இஸ்லாமிய நிகழ்ச்சிகளை ஒளிபரப்பினார்கள். (நான் பார்த்ததில்லை கேள்விப்பட்டேன்) இந்நிகழ்ச்சியைப் பார்க்கக்கூடாது என்று பள்ளிவாசல்களில் சுற்றறிக்கை அச்சிட்டு விளம்பரப் பலகையில் ஒட்டியிருந்தார்கள். இன்னும் அந்த சுற்றறிக்கை இருந்து கொண்டுதானிருக்கிறது. தமிகழத்தில் முஸ்லிம் சமுதாயம் முழுக்க முழக்க ஒரிறைக் கொள்கையை ஏற்றுக் கொண்டு விடவில்லை என்பதை உங்களுக்கு நினைவூட்டுகிறேன்.

இப்னு ஹம்துன் said...

அன்பின் அபூ முஹை,
//தமிகழத்தில் முஸ்லிம் சமுதாயம் முழுக்க முழக்க ஒரிறைக் கொள்கையை ஏற்றுக் கொண்டு விடவில்லை என்பதை உங்களுக்கு நினைவூட்டுகிறேன்.//
அதைத் தான் நானும் சொல்கிறேன். நமது சமுதாயம் முழுமையாக இஸ்லாத்தை உணரவேன்டும் என்று.
அதே சமயம் 'துர்' முக்தாரிலிருந்து எடுத்துக்காட்டப்பட்டுள்ள 'செய்திகளை' மத்ஹபுவாதிகளே இண்றைக்கு மேற்கோள்காட்ட முன்வர மாட்டார்கள் என்பதும் உண்மை தானே.
முஸ்லிம்கள் மீடியாவில் கோலோச்சுவதுப்பற்றி பேசும் போது அவர்கள் சரியான இஸ்லாத்தை அறிமுகப்படுத்த வேன்டுமே என்கிற கவலையும் எழத்தானே செய்கிறது. (குர்-ஆனின் வசனங்களை க்கொண்டே இஸ்லாத்தை (அறியாமையாலும் அதீத ஆர்வத்தாலும்) தவறாக அறிமுகப்படுத்தவும் செய்வதும் இந்த முஸ்லிம்களால் தானே. கைர். விரிவா பிறகு எழுதுகிறேன்.

Abu Umar said...

புதிய நுட்பங்களை பயன்படுத்த தவறுவது
ஒரு குறிப்பிட்ட மீடியாவை உபயோகிக்கும்போது அந்தந்த காலத்திற்கு ஏற்ப புதிய தொழிற்நுட்பங்களை அதில் புகுத்தவில்லையென்றால் பின்னடைவுதான் ஏற்படும். சிறிய உதாரணம்:

மின்னஞ்சல் மூலம் தமக்கு வந்த "செய்திகளை" தம்மிடம் உள்ள அனைத்து மின்னஞ்சல் முகவரிகளுக்கும் Forward செய்வது பலருக்கு வழக்கம். சில நண்பர்கள் அலுவலகத்துக்கு வந்ததும் முதல் வேலையாக இவைகளை செய்து முடித்தபின்னர்தான் மற்றதெல்லாம். அந்த அளவுக்கு ஆர்வம்.

ஒரு சிலர் மட்டுமே இதுபோல் செய்துவந்த காலம்போய், பலபேர் இவ்வாறு செய்ய ஆரம்பித்ததால் சில சிக்கல்களும் வந்தன.

1) பல மின்னஞ்சல் முகவரிகளை வைத்திருக்கும் ஒரே நபருக்கு, அவரின் அத்தனை மின்னஞ்சல் முகவரிகள் மூலம் அனுப்பிவைக்கப்படுவது. (ஆயிரக்கணக்கில் மின்னஞ்சல் முகவரிகள் இருந்தால் இப்படித்தான்).
2) யாஹு/ஹாட்மெயில் வழியே தனக்கு Forward செய்யப்பட்ட இணைப்பு கோப்புகள் (Attachment Files) அடங்கிய மின்னஞ்சல்களை மீண்டும் யாஹு/ஹாட்மெயில் வழியே Forward செய்யும்போது இணைப்பு கோப்புகள் (இமேஜ் கோப்புகள் உட்பட) கலங்கி படிக்க முடியாததாகிவிடும்.
3) அலுவலக மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்துபவர்கள், திடீரென விடுமுறையிலோ அல்லது மாற்றலாகியோ செல்லும்போது அந்த மின்னஞ்சல் வரவுகளை உடனே தடுக்க முடியாது. (அனுப்புனருக்கு இவர் அனுப்பும் செய்தி எட்டினால் மட்டுமே உண்டு).
4) மின்னஞ்சல் வரவுகள் அதிகமானதால் தனக்கு வந்த மின்னஞ்சல்களில் என்ன இருக்கிறது என்று படிக்காமலேயே மற்றவர்களுக்கு Forward செய்வதுண்டு. இதனால் தவறான சில செய்திகள்கூட பரவ வாய்ப்புண்டு. பொய்யான செய்திகளை மற்றவர்களுக்கு பரப்பக்கூடாது என்பது இஸ்லாமிய கோட்பாடும்கூட.
5) சிலர் அனைத்து மின்னஞ்சல் முகவரிகளையும் Bcc-யில் இடாமல் To-வில் இட்டு Forward செய்வார்கள். யாருக்கெல்லாம் மின்னஞ்சல் அனுப்பப்பட்டதோ அத்தனை முகவரிகளும் பெறுநருக்கு கிடைத்துவிடும். அம்முகவரிகளை சேமித்துக்கொண்டு அவர் ஏதேனும் அனுப்ப முற்படுவார்.

மீடியாவில் புது தொழிற்நுட்பங்களை பயன்படுத்தவில்லையென்றால் நமக்கு பின்னடைவுதான் என்பதற்காக கொடுக்கப்பட்ட சிறிய உதாரணமே இது.

மாற்றுவழிகள்/புதிய தொழிற்நுட்பங்கள்:
a) யாஹு மடலாற்குழுமங்களை (Yahoogroups) பயன்படுத்தலாம்.
b) செய்திகளை வலைப்பதிவில் பதிந்து அதன் சுட்டியினை (Link) மட்டும் மின்னஞ்சலில் அனுப்பலாம்.

அதுபோல புதிய தமிழ் இணையதளம் ஆரம்பிப்பவர்கள் யுனிகோடில் ஆரம்பித்தல் நலம். முக்கியமாக இயக்கங்கள் மற்றும் செய்தி நிறுவனங்கள் யுனிகோடு மற்றும் இயங்கு எழுத்துரு நுட்பங்களை புகுத்தி ஆரம்பித்தால் எழுத்துரு பிரச்சினைகளும் வராது. மேலும் தேடுதளங்களின் மூலம் தேடப்படும்போது அச்செய்தி தட்டுப்பட வாய்ப்புண்டு.

-அபூ உமர்-

Abu Umar said...

மேற்கண்ட மறுமொழியின் தொடர்ச்சியாக:

RSS/XML Feeder தொழிற்நுட்பத்தை பயன்படுத்திதான் தமிழ்மணம் இந்த போடு போடுகிறது.

நீங்கள் கீழ்கண்ட சுட்டியை பயன்படுத்தி தமிழ்மணத்தில் இணைந்த புதிய பதிவுகள், மறுமொழிகள் (சற்றுமுன் பதிந்த பதிவுகளுக்கு உட்பட), பரிந்துரைக்கப்பட்ட பதிவுகள் போன்றவற்றை படிக்கலாம். பக்கமும் எளிதாக திறக்கப்படும்.

http://www.thamizmanam.com/tamilblogs/userpanel.php


தமிழ்முஸ்லிம் மன்றமும் கீழ்கண்ட நுட்பங்களை உள்ளடக்கியதுதான்.
1. படிப்பதற்கு எளிதாகவும் பார்ப்பதற்கு அழகாகவும் டெம்ப்ளேட்டின் அமைப்பும் கலரும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
2. இயங்கு எழுத்துரு பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால் வின்டோஸ் 98-லும் படிக்கலாம்.
3. காட்டு/மறை என்ற Show/hide வசதியிருப்பதால் தமிழ்முஸ்லிம் பக்கங்களை மாதாவாரியாக உள்ள Archive கோப்புகளை சேகரித்து வைத்துக்கொண்டு Offline-ல் கூட மறுமொழிகளை படிக்கலாம்.
4.
tamilmuslimfeeder
வசதியின் மூலம் இஸ்லாமிய வலைப்பதிவுகளில் சேர்க்கப்படும் புதிய பதிவுகளின் விபரங்களை தெரிந்துக்கொள்ளலாம்.

இதுபோன்ற நுட்பங்களின் மூலம் ஊடகங்களில் முன்னேற்றம் என்றால், இதனை பயன்படுத்தாவிட்டால் பின்னடைவு என்பதில் சந்தேகம் உண்டா?

Abu Umar said...

குறும்படங்கள்
குறும்படங்களைப் பொறுத்தவரை அதன் எல்லை உங்களின் இஷ்டம்தான். இஸ்லாம் தடை செய்த விஷயங்களை நீக்கி மிகச்சிறிய பட்ஜெட்டில் குறும்படங்கள் எடுக்க முடியும். சினிமாவின் நோக்கம் கமர்சியல் என்றால், குறும்படங்களின் நோக்கம் கருத்துகளை முன்வைப்பதாகும்.

முஸ்லிம்கள் இவ்வூடகத்தை எந்த அளவுக்கு தொட்டுள்ளார்கள் என்று சொல்லி தெரியவேண்டியதில்லை. டீ.வி, டிஷ் என்றாலே ஹராம் என்னும் குறுகிய எண்ணத்திலிருந்து வெளியே வராததால் இதில் நாம் கால்பதிக்கவில்லை. ஆனால் குஜராத் கலவரத்தை உலகிற்கு எடுத்துச்சென்றதில் இந்த ஊடகத்திற்கும் பங்குண்டு.

Abu Umar said...

05.05.2005 அன்று ஜித்தாவில் நடந்த புகாரி நினைவுப் பரிசு கட்டுரைப்போட்டி பெரியோர் பிரிவில் நண்பர் மாலிக் கான் அவர்கள் முதல் பரிசு வென்றுள்ளார். கட்டுரையின் தலைப்பும் நாம் விவாதத்திற்கு எடுத்துக்கொண்ட தலைப்பும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது. அதாவது
"முஸ்லிம்களும் ஊடகங்களும்"
என்ற தலைப்புதான் அது.

நாம் மீடியாவில் பின்தங்கியிருப்பதன் காரணத்தை கண்டறிவதற்கு முன்பு மீடியாவின் அவசியம் என்ன?, நாம் எவ்வாறெல்லாம் மீடியாவினால் பாதிக்கப்பட்டிருக்கிறோம், இன்னும் பல விஷயங்களைப்பற்றி கட்டுரை அலசுகிறது.

இந்த விவாதத்தில் யாரும் பேசாத ஒன்றைப் பற்றி அக்கட்டுரை பேசுகிறது. அதனை மட்டும் கீழே இட்டுள்ளேன்.


//தனிநபர் பிரச்சாரங்கள், மேடை நாடகங்கள், கருத்தரங்குகள், ஜும்மாப் பேருரைகள்..
இவையாவும் மக்களைச் சென்றடையும் ஊடகங்களே! இவற்றின் மூலமாகவும் மக்கள் சக்தியை உருவாக்கிட முடியும். நபி(ஸல்) அவர்கள் மார்க்கத்தை மட்டும் போதித்துச் சென்றுவிடாமல் வாழ்க்கைக்குத் தேவையான எல்லா அம்சங்களும் கற்றுக் கொடுத்துச் சென்றுள்ளார்கள். காலத்திற்குத் தகுந்தாற்போல் அவர்கள் வெள்ளிமேடைகளில் (குத்பாப் பேருரைகள்) பிரச்சாரங்கள் செய்துள்ளார்கள். ஆனால் இன்று நம் நாடுகளில் பெருவாரியான முஸ்லிம்கள் ஒன்று குழுமக் கூடிய வெள்ளிக்கிழமை பேருரைகள் அரபி மொழியிலேயே சடங்குக்காக நடந்து வருகின்றன. நம்மில் பலரும் அதைப் பக்தியோடு கேட்டு துயில் கொண்டு செல்கிறோம். இன்றைய முஸ்லிம் சமுதாயம் எதை நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றது, சமுதாயத்தில் படர்ந்துவிட்ட களங்கங்கள் என்ன? மார்க்கத்தை எவ்வாறு நிலைநாட்டலாம் என உணர்ந்து இந்த குத்பாப் பேருரைகள் அமைந்தால் அதுவும் மீடியாவில் மகத்தான வெற்றிதான்.

பொழுதுபோக்கிற்காக எத்தனையோ அம்சங்கள் வந்துவிட்டன. ஆனால் பொழுதுபோக்கிலும் உபயோகமுள்ள ஒரு கருத்தை வலியுறுத்தி பிரச்சாரங்கள், மேடை நாடகங்கள், கருத்தரங்குகள் நடத்துதல் அவசியம். இவ்வாறான நிகழ்ச்சிகள் மூலமாகவும் மீடியாவின் கவனத்தை திசைதிருப்ப முடியும். மார்க்கப் பிரச்சாரங்கள், தொழுகை, இபாதத் போன்றவற்றிற்கு மட்டும் முஸ்லிம்கள் ஒன்று திரளக்கூடியவர்களாக இருந்த நிலை மாறி பாபர் மசூதி பிரச்சனை, வாழ்வுரிமை மாநாடுகள், அரசியல் மேடைகள், மதமாற்ற தடைச் சட்டம், லாட்டரி ஒழிப்பு போன்ற பிரச்சனைகளுக்கும் தற்போது ஒன்று குழுமக் கூடியவர்களாக இருக்கின்றார்கள். எனினும் மீடியாவில் நாம் சொல்லக்கூடிய அளவில் முன்னேற்றம் கண்டுவிடவில்லை. எனவே நவீன மீடியாக்களைப் பயன்படுத்தி காலத்திற்கேற்றாற் போல செய்திகளை மக்களுக்குக் கொண்டுசெல்ல வேண்டும்.//