Thursday, February 10, 2005

சக்தி பெற்றவருக்கே ஹஜ் கடமை!

கேள்வி:-
ஒரு நண்பர் இந்தியாவிலிருந்து வந்து நான்கு முறை உம்ரா செய்துவிட்டார், உங்கள் மீது ஹஜ் செய்வது கடமையாகிவிட்டது என்றால் அதற்கு அவர் ஹஜ் செய்வதற்கு உடல் நிலை ஒத்துக் கொள்ளாது என்கிறார். ஒரு கால் அவர் ஹஜ் செய்யாமல் இறந்து விட்டால் அவரின் நிலை என்ன? நபி வழியிலிருந்து விளக்கம் தேவை.

விளக்கம்:-
..இன்னும் அதற்கு(ச் செல்வதற்கு)ரிய பாதையில் பயணம் செய்ய சக்தி பெற்றிருக்கும் மனிதர்களுக்கு அல்லாஹ்வுக்காக அவ்வீடு சென்று ஹஜ் செய்வது கடமையாகும். ஆனால், எவரேனும் இதை நிராகரித்தால் (அதனால் அல்லாஹ்வுக்குக் குறையேற்படப் போவதில்லை. ஏனெனில்) - நிச்சயமாக அல்லாஹ் உலகத்தோர் எவர் தேவையும் அற்றவனாக இருக்கிறான். (அல்குர்ஆன், 3:97)

பொருளாதார வசதியும், உடல் வலிமையும், பெற்றவர்கள் ஹஜ்ஜை நிறைவேற்றக் கடமைப்பட்டுள்ளார்கள். ஒருவரிடமுள்ள பொருளாதாரத்தை வெளிப்படையாக ஓரளவு மற்றவர்கள் புரிந்து கொள்ள முடியும். ஆனால் உடல் வலிமை என்பது சம்மந்தபட்டவரைத் தவிர வேறு எவரும் அறிந்து கொள்ள முடியாது.

''ஹஜ் செய்வதற்கு உடல் நிலை ஒத்துக் கொள்ளாது'' என்பதே உங்கள் நண்பரின் உடல் நலக்குறைவு என்றால் அவரை ஹஜ் செய்ய எவரும் வற்புறுத்த முடியாது. அவர் ஹஜ் செய்யாமல் இறந்தாலும் இறைவன் குற்றம் பிடிக்க மாட்டான். அல்லாஹ் தாங்கிக் கொள்ள முடியாத கஷ்டத்தை எவருக்கும் கொடுப்பதில்லை.

அல்லாஹ் எந்த ஓர் ஆத்மாவுக்கும் அது தாங்கிக் கொள்ள முடியாத அளவு கஷ்டத்தை கொடுப்பதில்லை. அது சம்பாதித்ததின் நன்மை அதற்கே, அது சம்பாதித்த தீமையும் அதற்கே! (அல்குர்ஆன், 2:286)

3:97வது வசனத்தில் அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்வது கடமையாகும் என்று கூறிவிட்டு, எவரும் நிராகரித்தால் அல்லாஹ் எத்தேவையும் அற்றவன் என்று அல்லாஹ் கூறுகின்றான். அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்வதில் அல்லாஹ்வுக்கு எத்தேவையும் இல்லை. அதனால் ஹஜ் செய்பவரே அளப்பரிய பலன்களை பெற்றுக் கொள்கிறார் என்பதை கீழ் காணும் வசனத்திலிருந்து விளங்கலாம்.

''தங்களுக்குரிய பலனை அடைவதற்காக அவர்கள் நடந்தும் வெகு தொலைவிலிருந்து மெலிந்த ஒட்டகங்களின் மீதும் உம்மிடம் வருவார்கள்.'' (திருக்குர்ஆன் 22:27, 28)

இன்னும் பல நபிமொழிகள் ஹஜ்ஜின் நன்மைகளை வலியுறுத்துகின்றன.
(மேலும் விளக்கம் தேவைப்பட்டால் எழுதவும்)

1 comment: