Monday, April 17, 2006

ஆதிக்கச் சாதிகளின் அரசியல்

நாடார்கள்
நாடார் சாதியினரில் இந்துக்களும் கிறிஸ்துவர்களும் உள்ளனர். இவர்கள் ஒருவருக்கொருவர் உறவு முறை பாராட்டினாலும், இந்து நாடார்கள் தான் தமிழ் நாட்டில் இந்து முண்ணனியின் தோற்றத்துக்கும், வளர்ச்சிக்கும் காரணம். இன்றளவும், நாடார்கள் தான் இந்து முண்ணனிக்கு புரவலர்களாக உள்ளனர். மறைந்த தானுலிங்க நாடார் இந்து முண்ணனியில் முக்கியப் பொறுப்பு வகித்தவர்.

தேவர்கள்
தேவர் சாதியினர் தென் மாவட்டங்களில், தாழ்த்தப்பட்டவர்களின் வளர்ச்சியைப் பொறுக்க முடியாதவர்களாக உள்ளனர். தாழ்த்தப் பட்டோருக்கு எதிராக வன்முறை தாக்குதல்களை தொடுக்கின்றனர். ஃபார்வார்டு பிளாக் ஓர் இடது சாரி கட்சி. அதுவே, தமிழ் நாட்டில் ஒரு தேவர் சாதி வெறிக்கட்சியாக உள்ளது. இதன் சித்தாந்தம் மார்க்சியமோ, லெனினியமோ அல்ல. இந்துத்துவத்தை தன் கொள்கையாக கொண்ட ஓர் இடது சாரிக் கட்சி உலகத்திலேயே இது ஒன்று தான். பெரியார் மீதான வெறுப்பு, முஸ்லிம்கள் மீதான வெறுப்பு, தாழ்த்தப் பட்டோர் மீதான வன்கொடுமை போன்றவையே இக்கட்சியின் கொள்கைகள். தமிழ் நாட்டில் இதன் நிறுவனர் பொன். முத்துராமலிங்கம். இவர் இப்போதுள்ள இந்து வெறி, தேவர் சாதி வெறி ஃபார்வார்டு பிளாக் தலைவர்களுக்கு முன்னோடி. பெரியார் மிகவும் துணிச்சலாக, தென்மாவட்டக் கலவரங்களை அடக்க பொன். முத்துராமலிங்கத்தை கைது செய்யுங்கள் என்று அப்போதைய தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தார். இந்த துணிச்சலை இப்போது வீரமணி, கொளத்தூர் மணி ஆகிய தலைவர்களிடம் எதிர்பார்க்க முடியுமா? இணையத் தளத்தில் வாதாடும் இந்துத்துவ அறிவுக் கொழுந்துகள் பொன் முத்துராமலிங்கத்தின் மேற்கோள்களை எடுத்துக் காட்டுவதையும், அவரை மிகப்பெரிய தேசியவாதியாக சித்தரிப்பதையும் பார்க்கலாம்.

நடிகர் கார்த்திக் நடத்தும் 'அகில இந்திய ஃபார்வார்டு பிளாக் கட்சி' யில் சேர்ந்துள்ள சேதுராமபாண்டியன் என்ற தேவர் சாதித் தலைவர் ஜெயலலிதாவை எதிர்ப்பதற்கு சொல்லும் இரு காரணங்கள் 1. தேவர் சாதியினர் நடத்திய கந்து வட்டியை ஜெயலலிதா ஒழித்தார். 2. மணல் கொள்ளையை கட்டுப் படுத்தினார். இதிலிருந்தே இவர்கள் எந்த அளவு மக்கள் விரோதத் தண்மையில் இருக்கிறார்கள் என்பது தெரிகிறது.

அ.இ.அ.தி.மு.க, சசிகலா தொடர்பால் தேவர் சாதி வெறியர்களுக்கு புகலிடம் அளிக்கும் அமைப்பு என்று கருதப்பட்டாலும், நடிகர் கார்த்திக்கின் ஃபார்வார்டு பிளாக் அமைப்புக்கு ஓரிடம் கூட தராத ஜெயலலிதாவைப் பாராட்டலாம். ஆனால் , வேறு இரு தேவர் சாதி அமைப்புகளுக்கு ஆளுக்கு ஓரிடம் கொடுத்துள்ளார். அது போலவே, கருணாநிதியும், டாக்டர் சேது ராமனுக்கு இடம் கொடுக்காததால், அவர் கட்சி பா.ஜ.க கூட்டணியில் 5 இடங்கள் பெற்று தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறது. இவர் ராமதாஸின் தமிழ் பாதுகாப்பு இயக்கத்தில் இடம்பெற்றவர். இவர் இயல்பிலேயே முஸ்லிம் வெறுப்புள்ளவர் என்பது பா.ஜ.க கூட்டணியில் சேர்ந்ததில் இருந்து தெரிகிறது.

வன்னியர்
வன்னிய சாதியினரின் சென்ற தலைமுறை, தாழ்த்தப்பட்டோரின் மீதான பகையுடன் இருந்தாலும், அது இந்துவெறியுடன் இருந்தில்லை. அப்படிப்பட்ட தலைவர்களும் இருந்ததில்லை. மாணிக்கவேலர் போன்ற வன்னிய தலைவர்கள் சமூக நீதி சிந்தனையுடனே இருந்தனர். பா.ஜ.கவுடன் பா.ம.க கூட்டணி அமைத்த போது தான் வன்னியர்களிடம் இந்துத்துவ சிந்தனைகளின் தாக்கம் ஏற்பட்டது. பா.ம.கவிலும், அதன் எதிர்ப்பு வன்னிய சாதி சங்கங்களிலும், வன்னிய சாதி அரசியல் கட்சிகளிலும் இந்துத்துவத் தாக்கம் எடுப்பாகவே தெரிகிறது. தீரன் போன்ற பெரியாரியவாதிகள் என்ன செய்கிறார்கள் என்றே தெரியவில்லை.

வாழப்பாடி ராமமூர்த்தியின் மகன் பா.ஜ.கவில் சேர்ந்துள்ளார். ஜனநாயக முன்னேற்றக் கழகம் என்ற வன்னிய சாதிக் கட்சியை நடத்தும், ஜெகத் ரட்சகன் ஜெயலலிதாவின் மதமாற்றத் தடைச் சட்டத்தை ஆதரித்து, காஞ்சி சங்கராச்சாரியார் நடத்திய சென்னை கடற்கரைக் கூட்டத்தில் கலந்து கொண்டார். பா.ஜ.க ஆட்சியின் போது, தாங்கள் விரும்பிய மந்திரி பதவியைப் பெற காஞ்சி சங்கராச்சாரியாரின் காலில் விழுந்து பரிந்துரை செய்ய கெஞ்சினர் டாக்டர் அய்யாவின் சார்பாக தூது சென்ற அவரது அடியாட்கள்.



தலித்
தமிழ் நாட்டின் தலித் தலைவர்களில் பா.ஜ.கவுடன் முதலில் கூட்டணி அமைத்தவர் வை. பாலசுந்தரம். இவரது அம்பேத்கார் மக்கள் இயக்கம், பா.ஜ.கவுடன் கூட்டணி அமைத்து சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறது.

காட்டுமன்னார் கோயில் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் வேட்பாளர் எழுத்தாளர் ரவிக்குமார், பெரியார் மீது காழ்ப்புணர்ச்சியும், பார்ப்பனர்கள் மீது அளவு கடந்த பாசமும், பிற்படுத்தப்பட்ட மக்கள் மீது பொருளற்ற வெறுப்பும் கொண்டவர். தமிழ் நாட்டு முஸ்லிம்கள், தலித்களோடு உள்ள உறவில் அவர்கள் ஆதிக்கச் சாதிகளால் ஒடுக்கப் படும் போது, தலித்களுக்கு ஆதரவாகச் செயல்பட வேண்டும். ஆனால் தலித் அறிவாளிகளில் ஒரு பிரிவினர் பிற்படுத்தப்பட்ட சாதியினர் மீது அளவு கடந்த வெறுப்பையும், முஸ்லிம்களிடம் பகைமையையும், இந்துவச் சக்திகளுடம் நெருங்கிய உறவும் கொள்ளும் போது அவர்களும் நமது விமர்சனத்துக்கு உரியவர்களே. இந்த புரிதல் த.மு.மு.க, தவ்ஹீத ஜமாஅத் உட்பட பல முஸ்லிம் அமைப்புகளின் தலைவர்களுக்கு இல்லை.

No comments: